Friday 20 April 2012

இரு கடவுள்!



மனிதர்களை நல்வழிப்படுத்த எண்ணற்ற நபிகள்-ரஸூல்கள் என்ற தீர்க்கதரிசிகள் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டனர் என்ற குர் ஆனின் செய்தியை நாம் அறிவோம். இவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்று முஸ்லீம்களுக்கும் தெளிவாகத் தெரியாது. இஸ்லாமியர்களின் நம்பிக்கை இவ்விஷயத்தில் பலவாறாக வேறுபடுகிறது. தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை, சில அறிஞர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கலாம் என்று கூறுகின்றனர். சிலர் ஆயிரங்களில் கூறுகின்றனர். இப்படியாக 1,24,000 வரை கூறப்படுகிறது. குர் ஆனின் வழியாக இருபத்து ஆறு நபிமார்களை அறிய முடிகிறது. குர்ஆன் கூறும் இந்த உலகின் வயது ஏறக்குறைய 6000-7000 ஆண்டுகள் இருக்கலாம். அதாவது ஆண்டிற்கு 20 நபிகள் வீதம் வந்திருக்கின்றனர். இப்ராஹிம்-லூத், மூஸா-ஹரூன்-கிள்ரு என்று ஒரே காலகட்டத்தில், ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் தேவை ஏற்பட்ட கதைகளையும் குர் ஆனில் காணலாம்.
1,24,000 நபிமார்கள் என்ற தீர்க்கதரிசிகளுக்கு அப்படியென்ன தேவை?

படைபாளன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர வேறு யாரையும், எதையும் வணங்கக் கூடாது என்ற செய்தியைக் கூற வந்தவர்கள். இதை இத்தனை தூதர்களை அனுப்பித்தான் கூறவேண்டுமா? அதை அவனே நேரடியாகக் கூயிருக்கலாமே? போட்டிக்கு வேறு எந்தவிதமான கடவுளர்களோ படைப்பாளர்களோ இல்லை, தன்னால் மட்டுமே இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பது அல்லாஹ்வின் நிலையாக இருப்பின், தன்னை நிலைநிறுத்த அவன் மேற்கொள்ளும் சிரமம் விநோதமாகத் தோன்றவில்லையா? இதற்கான பதிலைக் காண்பதற்குமுன் இஸ்லாம் கூறும் நபிமார்களின் சிறப்பில்புகளை சுருக்கமாகக் காண்போம்

அல்லாஹ், மனிதர்களிலிருந்து வெகு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நேரடியாகவும், மலக்குகள் என்ற உதவியாளர்கள் வாயிலாகவும் உரையாடினான். அவர்களுக்கு சிறப்பு போதனைகளும், பயிற்சிகளும் வழங்கப்பட்டது கூடவே சில (அற்பமான) மாயவித்தைகளும்(!) பயிற்றுவிக்கப்பட்டது. அவர்கள் அல்லாஹ்வின் சார்பாக பூமியில் அறிவிப்புகளை செய்தனர் அதனுடன் ஆட்சியையும், ஆதிகாரத்தையும் கைப்பற்றினர். நபிமார்களைப் போல மற்ற மனிதர்களையும் அல்லாஹ் ஏன் அவ்வாறு உருவாக்கிக் கொள்ளவில்லை? என்றொரு நியாயமான கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பானதே. கோடிக்கணக்கான மனிதர்களில் ஒரு சிலரைமட்டும் தேர்வு செய்வது என்ன நியாயம்? நபிமார்களை உருவாக்குவதென்பது அல்லாஹ்விற்கு மிகவும் சிரமமான விஷயமாக இருந்திருக்க வேண்டும் அதனால் தான் அவ்வாறு செய்யவில்லை.
ஆதம், நூஹ், இப்ராஹீமின் குடும்பத்தார், மற்றும் இம்ரானின் குடும்பத்தினரை அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.
குர் ஆன் 3:33
மிகப்பெரும்பாலான தீர்க்கதரிசிகள் இப்ராஹிமின் வம்சத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் மட்டுமே அல்லாஹ் தொடர்புகொண்டான். எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ஏன் அனைத்து மனிதர்களுடனும், நேரடியாக தொடர்புகொள்ள முடியவில்லை? அவ்வாறு செய்வதிலிருந்து தடுப்பது எது? அல்லாஹ்வின் செயல்களை  எவரும் கேள்விகேட்க முடியாதுஇதுதான் முஸ்லீம்களின் மெய்சிலிர்க்க வைக்கும் பதில்! நாம் விவாதத்திற்குள் செல்ல ஏதுவாக குர்ஆன் கூறும் ஆதிமனிதன் ஆதமின் கதையை கவனிப்போம். நபிமார்களை உருவாக்கும் அல்லாஹ்வின் திட்டம் ஆதமிலிருந்து துவங்குகிறது.
உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….
(குர்ஆன் 2: 30)
என்று தனது உதவியாளர்களான வானவர்களிடம் கூறி ஆலோசனை செய்கிறான். அவர்கள்/அவைகள் மறுக்கின்றன(ர்), அதையும் மீறி ஆதமை அல்லாஹ் உருவாக்குகிறான். ஆதமின் படைப்பு மற்ற படைப்புகளைவிட சற்று சிறப்பு வாய்ந்தது. மிகத் திறமையாக, மிக கவனமாகத் திட்டமிட்டு, தனது உருவத்திலேயே அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதொரு படைப்பு. அவருக்கு தாயும், தந்தையும் அல்லாஹ்தான். அதுமட்டுமல்ல அவர் சொர்கத்தில் வாழ்ந்த மனிதர்; அல்லாஹ், இப்லீஸ், மற்றுமுள்ள இதர மலக்குகளையும் கண்களால் கண்டவர்; அல்லாஹ்விற்கும் இப்லீஸிற்குமிடையே நிகழ்ந்த இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரும் வாக்குவாதத்தையும் கண்டவர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ...அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான்
(முஸ்லீம்)
     ஆதம் என்ற களிமண் பொம்மையை, தனது இருகைகளால் படைத்த அல்லாஹ், அதை அப்படியேவிட்டுவிட்டுப் எங்கோயோ போய்விட, புத்தி சாதுர்யமிக்க இப்லீஸ் ஆதமின் உடலை ஆராயத் துவங்கிவிட்டான். அதன் பலவீனங்களையும் அறிந்து கொள்கிறான். (பீ.ஜே அவர்களின் கவனத்திற்கு, இப்லீஸின் இந்த ஆராய்ச்சியின் மூலம் அல்லாஹ்விற்கும் வயிறு இருப்பது தெளிவாகிறது.)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது'' என அவன் அறிந்துகொண்டான்.
(முஸ்லீம்)
பின்னர் அல்லாஹ் தனது ரூஹிலிருந்து ஊதி ஆதமை உயிர் பெறச் செய்து, மலக்குகளிடம் ஆதமிற்கு தலைவணங்குமாறு கட்டளையிடுகிறான்.

மலக்குகள் அனைவரும் ஸுஜூது செய்தனர்.
இப்லீஸைத் தவிர; அவன் ஸுஜூது செய்தவர்களுடன் ஆவதை விட்டும் அவன் விலகிக் கொண்டான்.
(குர்ஆன் 15:30-31)
ஆதமைப்பற்றி துடுக்குத்தனமாக கேள்விகளைக் கேட்ட மலக்குகளை மட்டம் தட்டும் நோக்கில் ஆதமிற்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்கத் துவங்குகிறான்.

மேலும் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் ஆதமுக்கு அவன் கற்றுக் கொடுத்தான்.…
(குர்ஆன் 2:31)
        அல்லாஹ் என்ற ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மாணவரான  ஆதமிடம், ஜிப்ரீல், மீக்காயீல் உட்பட மலக்குகளின் மொத்த கூட்டமும் தோல்வியடைகிறது. பின்னர் ஆதமிற்கு ஒரு துணையையும் அல்லாஹ் உற்பத்தி செய்து, அவர்களிருவருரையும் சொர்க்கத்தில் அனுமதித்து, மீண்டும் பயிற்சி வகுப்பையும், சில எச்சரிக்கைகளையும் வழங்குகின்றான்.
ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!
சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப்பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்பட்டவராவீர்"
 “நீர் பசியில்லாதிருப்பதும், மறைக்கப்பட்டிருப்பதும் இதில் உண்டு.”
இதில் நிச்சயமாக நீர் தகிக்கவும் மாட்டீர், வெயிலில் படவுமாட்டீர்.”
(குர்ஆன் 2:35, 7:19, 20:117-123)

         அல்லாஹ்விடம் நேரடிப் பயிற்சி பெற்றதால் ஆதம் தம்பதியரிடம் கல்வியை/அறிவை அதன் தரத்தை நாம் சந்தேகிக்க முடியாது. அவர்களிடத்தில் எந்த ஒரு படைப்பும் நெருங்க முடியாத வகையில் அவர்களது அறிவு திறம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். சொர்க்கலோகத்தின் அனைத்து விதமான உணவுகளும், இதர வசதிகளும் ஆதம் தம்பதியருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் எச்சரிக்கையை அல்லாஹ்விடமிருந்து நேரடியாகவே ஆதம் தம்பதியினர் பெறுகின்றனர். அல்லாஹ்வின் கட்டளையை மீறினால் என்ன நிகழும் என்பதையும் அவர்கள் மிகத் தெளிவாகவே அறிவர். ஆனால்,

சைத்தான் அவருக்கு மனதில் ஊச்சாட்டத்தை உண்டாக்கினான்; ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அவன் கேட்டான்.
(குர்ஆன் 2:35, 7:19, 20:118-123)
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.
"நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.
 (குர்ஆன் 7:20-21)
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.
(குர்ஆன் 20:121)
இதை பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் 3:7 இவ்வாறு கூறுகிறது
இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்து கொண்டனர். எனவே அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்து கொண்டனர்.
(கூட்வே தனது துணைவியாருக்கு ஒரு புர்க்காவும் தைத்துவிட்டார் ஆதம்!)
...அவர்களின் இறைவன் அழைத்து "இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்.
(குர்ஆன் 7:22)
ஆதம், பழியை ஷைத்தான் என்ற இப்லீஸின் மீது போட, அவர்களது செயலுக்கு தண்டணையாக சுகபோக வாழ்க்கையை நீக்கப்பட்டு பூமிக்கு கடத்தப்பட்டனர்.
ஆதம் உணவையே காணாதவர் போல ஏன் நடந்து கொள்ளவேண்டும்? அல்லாஹ், ஆதமிற்கு வழங்கிய மிக உயர்ந்த கல்வியறிவு சிறிதும் பயனளிக்காமல் போனது ஏன்? அல்லாஹ்வை ஆதம் நம்பவில்லையா? அல்லாஹ்வைப் பற்றி அவர் என்ன நினைத்தார்? அல்லாஹ்வை சோதனை செய்து பார்த்தாரா?
இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்! நிர்வாணமாக மாட்டீர்!
(குர்ஆன் 20:118)
என்று ஆதம் தம்பதியரிடம், அல்லாஹ் வழங்கிய உறுதிமொழி என்ன ஆனது?  இதற்கான பதில்களை மதவாதிகள்தான் கூறவேண்டும்.

அல்லாஹ், மலக்குகளிடம் (குர்ஆன் 2: 30) பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' (பீஜே மொழிபெயர்ப்பு)  என்றுதான் கூறுகிறான், சொர்க்கத்திலல்ல!. கட்டளையை மீறியதாகக் கூறி ஆதமையும் இப்லீஸையும் விசாரித்து தண்டித்த அல்லாஹ்வின் செயல் அரைவேக்காட்டுத் தனமாகத் தோன்றவில்லையா?
46. கலீஃபா எனும் சொல்லுக்குப் பொருள்
... முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை கலீஃபா எனக் கூறியது இந்தக் கருத்தில் தான். அதனால் தான் ஒரு கலீஃபாவைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் கூறியவுடன் ஒரே ஒரு மனிதர் மட்டும் படைக்கப்பட்டால் எப்படி இரத்தம் சிந்த முடியும் என்று எண்ணாமல் "அவர்கள் இரத்தம் சிந்துவார்களே' என்று வானவர்கள் கூறினர்.
இந்தச் சொல்லிலிருந்து ஆதமுக்கு ஒரு துணைவி படைக்கப்படுவார் என்பதையும், அவ்விருவர் வழியாக மக்கள் பெருகி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதையும் வானவர்கள் விளங்கிக் கொண்டனர்.
எனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றிக் கூறும் இடங்களில் வழி வழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலை முறை) என்ற பொருளிலும் மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும் போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும். ...
(online pj.com)
         இவ்வளவு பெரிய முரண்பாட்டை தீர்க்க கையாலாகதவர்கள்,  பரிணாமவியலில் Irreducible Complexity பற்றி விவாதிப்பது மிகப்பெரிய வேடிக்கை. மனிதனின் ஆரம்பம் பற்றிய குர்ஆனின் இந்த முரண்பாட்டை ஆரம்பத்தை நேக்கிதொடரில் விரிவாக எழுதியிருக்கிறேன், அதனால் மேற்கொண்டு இங்கு விவாதிக்கவில்லை.
       
       இப்லீஸ், ஆதமை வணங்க மறுத்தது, ஆதமைவிட தான் உயர்ந்தவன் என்ற தன்முனைப்பு காரணமாகிறது. அவன் பெற்ற தண்டனை, பழிவாங்கும் உணர்வைத் தூண்டியதுடன், வெவ்வேறு வகையான குற்றச் செயல்களாக உருவெடுக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படியாமையால், தடுக்கப்பட்ட மரத்திலிருந்த கனியை சுவைத்ததால் ஆதம் தம்பதிகளின் வெட்கத்தலங்கள் வெளியாயின என்பது அவர்கள் பாலுணர்வைப் பெற்றனர் என்பதையே குறிக்கிறது.

       இப்லீஸின் தன்முனைப்பு, விரோதமனப்பான்மை, கோபம், மோசடி, சூழ்ச்சி, நயவஞ்சகம், பொய்யுரைத்தல், பழிவாங்கும் குணம், ..., ஆதமின் சந்தேகம், ஏமாளித்தனம், கட்டளைக்கு மாறுசெய்தல், பாலுணர்வு, ..., இவைகள் எங்கிருந்து வந்தன? தடை செய்யப்பட்ட பழத்தை உண்டதால் விளைந்த காமம், எங்கிருந்து வந்திருக்க முடியும்?
சந்தேகமென்ன...! அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வரமுடியும்

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
....நபி (ஸல்) அவர்கள், (ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான்; அவனுக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை. அவனது அரியாசனம் தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான் என்று சொன்னார்கள்....
(புகாரி 7418)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்த போது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே, என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது என்று எழுதினான்.
(புகாரி 7422)
அவனே எல்லா விஷயங்களையும் எழுதிய பிறகு யாரிடம், எதற்காக கோபம் கொள்ளவேண்டும்? அவனே எதிபாராத அவனுக்கு விரும்பமில்லாத நிகழ்வுகள் ஏதேனும் அரங்கேறுமோ? கருணை கோபத்தை ஏன் மிகைக்க வேண்டும்?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன...
(புகாரி 6000)
அல்லாஹ், அன்பு எனும் தன்மையின் தொண்ணூற்று ஒன்பது பகுதியை தன்னிடமே தக்கவைத்துக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அப்படியானால் காமம் உட்பட தன்முனைப்பு, விரோதம், கோபம், சூழ்ச்சி, பொய்யுரைத்தல், பழிவாங்குதல், நயவஞகம், சந்தேகம், ஏமாளித்தனம் இது போன்ற தன்மைகளின் தொண்ணூற்று ஒன்பது பங்கையும் அவன் தானே வைத்திருக்கத்தானே முடியும்? (ஹூருலீன்களை உருகி, உருகி வர்ணனை செய்வதையும், சல்லாபத்திற்காக வழங்கப்படும் பிரத்தியேக ஆற்றல்களையும் கூறி ஆசைகாட்டுவதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்!)
நானும் சூழ்ச்சியாக சூழ்ச்சி செய்கிறேன்.
(குர்ஆன் 86:15,16)
நிச்சயமாக என்னுடைய சூழ்ச்சி உறுதியானது
(குர்ஆன் 68:45)
     அல்லாஹ்விற்கு இருக்கும் 99 பெயர்களில் இப்படியும் சில பெயர்கள் அவனுக்கு உண்டு.
அல்-முதகப்பிர் (தற்பெருமை கூறுபவன்)அல்-ழார் (துன்பமுறச் செய்பவன்), அல்-ஜப்பார்  (சர்வாதிகாரி), அல்-கஹ்ஹார் (அடக்கியாள்பவன்), அல்-ஃகாஃபிள் (இழிவுபடுத்துபவன்), அல்-முதில்லு (அவமானப்படுத்துபவன்), அல்-முமீத் (மரணத்தை வழங்குபவன்), அல்-முந்த்கிம் (பழிவாங்குபவன்)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்  (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான் மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திற்கும் தடைவிதித்துள்ளான். தன்னை புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்
(புகாரி 4634)
      அல்லாஹ்வின் செயல்களும், அவன் தனக்குத்தானே சூட்டிக் கொண்ட பெயர்களும்,  அவனைக் கடவுள் பாதி மிருகம் பாதி என்று காட்டுகிறது. கடவுள் புனிதனாகவும், சாத்தானாகவும் இருக்க முடியுமா? இதுதான் இறைத்தன்மையா?

         இப்பிரபஞ்சத்தின் நல்லொழுக்கமுள்ள ஒன்று அல்லாஹ் மட்டும்தான் (அடுத்தது முஹம்மதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது) என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இதை எப்படி ஒப்பிட்டு கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. அல்லாஹ்விற்கு இயல்புகளும், உணர்வுகளும் இருக்க வேண்டுமென்பது இந்நம்பிக்கையின் ஒரு பகுதி. அல்லாஹ்விற்கு கோபம், கருணை என்ற உணர்வுகள் மட்டுமே இருக்கும் என்பது மடத்தனமாக இல்லையா? மற்ற தீய குணங்கள் எங்கிருந்து வந்தன? பூமியில் நிலவும் தீமைகளுக்கு யார் காரணம்? அது அல்லாஹ்வை மீறி நிகழ்ந்தவைகளா? அல்லது தீமையும் அவனால் திட்டமிடப்பட்டுள்ளதா? ஆம் எனில் அவன் நல்லவன் அல்ல! அவனது விதிமுறை மீறப்பட்டுள்ளாது என்பீர்களேயானால் அவன் சர்வவல்லமையுடையவனல்ல. அல்லாஹ் சர்வவல்லமையும், எல்லைகளற்ற புனிதனாகவும் இருக்கவழியில்லை. அனைத்து தீமைகளுக்கு உச்சகட்ட பொறுப்பு யார்? அல்லாஹ் பொறுப்பல்ல என்று தட்டிக்கழிக்க முடியது. ஏனெனில் ஆதியில் அல்லாஹ்வைத்தவிர எதுவுமே, எந்த தன்மைகளுமே இல்லையென்பதை, குர் ஆனும், ஹதீஸ்களும் கூறும் படைப்பின் துவக்கம் நமக்குக் கூறுகிறது.
இங்கு தீமையை இப்லீஸின் தலையில் சாட்டிவிட்டு ஓடமுடியாது. தீமைமையை இப்லீஸ்தான் உருவாக்கினான் என்றால் ஒரு கடவுள் என்ற வாதம் அர்த்தமற்றது. இப்லீஸ் ஏன் இவ்வுலகைப் படைத்திருக்கக் கூடாது?

தஜ்ஜால்


Facebook Comments

3 கருத்துரைகள்:

yasir said...

கருத்து தெரிவிக்க யாரும் முன்வராததால் தஜ்ஜால் சொன்னது உண்மையே,என ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அருமை ந‌ண்ப‌ரே தொட‌ர‌ட்டும் த‌ங்க‌ள‌து தாவா ப‌ணி.

yasir said...

இக் கதை பழைய ஏற்பாட்டிலிருந்து சுருட்டப்பட்டது.ஆகவே கதை,வசனம்,திரைக்கதை,எடிட்டிங்,இயக்கம் அனைத்தும் அல்லாஹ்,சைத்தான்,ஜின்,மலக்குகள் போன்றோர்களை நடிகர்களாக அமைத்து உருவாக்கிய கலைக்களஞ்சியத்தை குர்‍ஆன் என மறுபெயரிட்டு முகம்மது அவர்களை நிறுவணராக ஏக மனதாக ஏற்றுக் கொண்டு 1400 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்....

இப்படிக்கு

இன்றைய ஜிப்ரீல்....

mepp said...

Nazraf

வடிவேல் சந்தானத்தின் ஜோக் எல்லாம் அலுத்துவிட்டது ... இன்னும்

அலுக்காமல் நான் ரசிப்பது அல்லாவின் ஜோக்குகள்தான்

எல்லாப்புகழும் அவனுக்கே