Tuesday 24 March 2015

ஒரு மரணம் சில கேள்விகள் - 9



நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

முஹம்மதின் உடல்நிலை குறித்த செய்தி நகரெங்கும் பரவியது. முஹம்மதின் இல்லத்தைச் சுற்றி மக்கள் குவிந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட்டனர்.  



எல்லோர் மனதிலும் முஹம்மது உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென்ற வேண்டுதல்கள் ஒருபக்கம் இருந்தாலும், அதைவிட மிகப் பெரிய கேள்வி ஒன்று அழுத்திக் கொண்டிருந்தது.  அதை வெளியில் சொல்ல எவருக்கும் துணிவில்லை.

முஹம்மதிற்குப் பிறகு அடுத்த தலைவர் யார்?

அந்தக் கூட்டத்திற்கு நடுவே சில அப்பாவி நம்பிக்கையாளர்களும், எளிய மனிதர்களும் இருந்தனர். அவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் பொருட்படுத்துவதற்கு எவருமில்லை.

அந்தக் கூட்டத்திற்கு சற்றேறகுறைய இறுதியில், ஆங்காங்கே ஒட்டுகள் போடப்பட்ட தடிமானான துணிகளால், சுமார் ஆறடி நீளத்திற்கு ஒரு கழியைக் கொண்டு நடுவில் உயர்த்தி, நான்கு புறமும் சிறிய கழிகளைக் கொண்டு இழுத்துக் கட்டிய ஒரு சிறிய கூடாரம். தரையில் ஈச்சமர ஓலைப் பாய். இப்ன் ஷியா* கைகளை மடக்கி தலைக்குக் கொடுத்தவாறு படுத்திருக்க, அருகில் இப்ன் சுன்னா* நின்று கொண்டிருந்தான். இருவருக்கும் ஏறக்குறைய முப்பது வயதிற்குள் இருக்கலாம்; திடகாத்திரமான உடல்வாகு; இருவரும் முஹம்மதின் படையில் கடைநிலை வீரர்கள் அவர்கள் மனதிலும் இதே கேள்விதான்.  அடுத்த என்ன நிகழப் போகிறதோ என்ற ஆர்வமிகுதியால் மற்றவர்களைப் போல அவர்களும் அமைத்து அங்கேயே தங்கியிருந்தனர்.

“இப்ன் சுன்னா… அல்லாஹ்வின் தூதரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் தெரிகிறதா?” என்றான் இப்ன் ஷியா.

“அல்லாஹ்வின் தூதரை, அலீயும் அப்பாஸும் எப்படி அழைத்து சென்றனர் என்பதைப்பற்றி நீ கேள்விப்படவே இல்லையா?” இது இப்ன் சுன்னா.

“அப்பாஸும் அலீயும் அன்னை ஆயிஷாவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர் என்பது தெரியும்! மற்ற விபரங்கள் தெரியாது..!”

”இப்படி சுருண்டு படுத்திருந்தால்.. எப்படித் தெரியும்…?”  என்று இப்ன் ஷியாவைக் காலால் உதைத்தவாறு தொடர்ந்தான்.

“ரசூலுல்லாஹ்வினால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியவில்லையாம். அவரது உடல் நிலையில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை”

“தூதர் கடைசியாக, தொழுகைக்கு வரும் பொழுது ஆடையில் ஆங்காங்கே ஈரவட்டங்கள் இருந்ததைக் கவனித்தாயா?” என்று விவகாரமான கேள்வியை எழுப்பினான் இப்ன் ஷியா

“ஆமாம், அதற்கென்ன...?”

“அனைத்து மனைவியர்களிடமும் நீதமாக இருக்கிறேனென்று அவர்களிடமும் வீடுகூடியிருப்பார் இப்பொழுது எழுந்திருக்கக்கூட முடியாமல் படுக்கையில் விழுந்து விட்டார்!”

”... ...!?”

”உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது தாம்பத்திய உறவிலிருந்து அவர் சற்று விலகியிருந்திருக்கலாம்...!”

”உனக்குத் தெரியாது ’நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' (புகாரி 268) என அனஸ் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்”

இப்ன் ஷியா வாய்விட்டு சிரித்தவாறு,

“முப்பது பேர்களுடைய சக்தி இருந்தால் ஆடைகளில் எதற்காக சிந்தவேண்டும்...?”

“முனாஃபிக்குடன் சேர்ந்து நீயும் அவனைப் போலவே கேலி பேசுகிறாய்!”

“அடுத்த தலைவர் யாராக இருக்கும்...?” என்றான் பேச்சை மாற்றினான் இப்ன் ஷியா.

 “தாவூது நபிக்குப் பிறகு அவரது மகன் ஸுலைமான் நபி ஆட்சிக்கு வந்தார். ஆட்சியாளர்கள் வாரிசுரிமை அடிப்படையில் பதவிக்கு வருவதென்பது அல்லாஹ் கற்பித்த (Q 27:16) வழிமுறை!”

“அப்படி எவருமில்லை இல்லையென்பதுதானே இங்கு குழப்பமே!” என்று கால்களை நன்றாக நீட்டியவாறு படுத்துக் கொண்டான் இப்ன் ஷியா.

“அவரது நெருங்கிய உறவினர்களில் எவராவது தலைமைப் பொறுப்பிற்கு வரலாம் அதுதானே  நடைமுறையில் இருப்பது”

“வாரிசு உரிமை அடிப்படையிலா…?”

“யாரைச் சொல்கிறாய்..?”

“அலீ பின் அபிதாலிப்!” என்றான் இப்ன் சுன்னா

”அலீயா…?” எழுந்து உட்கார்ந்து கொண்டான் இப்ன் ஷியா.

”மூஸாவிற்கு ஹாரூனைப் போன்றவர் அலீ! தபூக் போருக்குச் செல்லும் பொழுதுகூட 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? என்று கேட்டிருக்கிறார் (புகாரி 4416, முஸ்லீம் 4776). இதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் தூதருக்காக உயிரையே கொடுக்கத் துணிந்தவர், சரியான நேரத்தில் உதவக் கூடியவர். நமது அடுத்த தலைவர் அவர்தான்!” என்றான் இப்ன் சுன்னா உற்சாகமாக!

“ரஸூல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் அபூபக்ர்தான் அதற்குத் தகுதியுடையவர்! ’உன் தந்தை அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்துவா. நான் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன். ஏனென்றால், எவரும் ஆசைப்படவோ, "நானே தகுதியானவன்" என்று யாரும் சொல்லிவிடவோகூடும் என நான் அஞ்சுகிறேன். அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்’ என்று அன்னை ஆயிஷாவிடம் சொல்லியிருக்கிறாராம்” (முஸ்லீம் 4757) என்றான் இப்ன் ஷியா.

“இது உனக்கு எப்படித் தெரியும்...?”

”அப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்…!” என்று இப்ன் சுன்னா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, ஒட்டகம் உறுமும் சப்தம் கேட்க இருவரும் அமைதியானர்கள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, கூடாரத்திற்குள் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு வாட்டசாட்டமான இளைஞன் நுழைந்தான்.

அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே,

“அல்லாஹ்வின் தூதருக்கு நெருங்கிய தோழரென்று அபூபக்ர் மட்டுமல்ல மனிதர்களில்  எவருமே அப்படிக் கிடையாது.   நெருங்கிய நண்பர் மட்டுமே ரஸூலுல்லாஹ்விற்குப் பிறகு ஆட்சியாளர் ஆகவேண்டுமென்றால், அல்லாஹ்வைத்தான் (முஸ்லீம் 4753) ஆட்சியாளராக அறிவிக்க வேண்டும்!” என்றான்.

“வா… அப்து முனாஃபிக்…! உனக்கு எப்பொழுதுமே விளையாட்டுதான். உன்னுடைய கேலிப் பேச்சு எவர் காதிலாவது விழுந்து விபரீதமாகிவிடப் போகிறது. ” என்றான் இப்ன் சுன்னா.

அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்’ என்று அன்னை ஆயிஷாவிடம், அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கிறாராம் அதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருந்தோம்!”

”என்னது….??? கலீபாவாக அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்’ என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக ஆயிஷா கூறினாரா…?”  என்று கூறி வாய்விட்டு சிரித்தான்

“ஆமாம்…!”

“ஆயிஷாவின் வார்த்தைகளை எப்படி நம்ப முடியும்?” என்றான் அப்து முனாஃபிக்.

“அவர் பொய்யரா என்ன?” என்று அவசரமாக மறுத்தான் இப்ன் ஷியா.

“ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் அல்லாஹ்வின் தூதரிடத்திலிருந்து கம்ர்(khamr) என்ற போதை பொருளின் துர்நாற்றாம் வீசுவதாகப் பொய்யுரைத்து மாட்டிக் கொண்டவர்கள் (புகாரி 679, 4912); இவர்களது இழிசெயலைக் கண்டித்துதான் குர்ஆன் (66:1-4) வசனங்கள் வெளியாகியிருக்கிறது; இந்தப் பிரச்சினையால் அல்லாஹ்வின் தூதர் தனது அனைத்து மனைவியர்களை விவாகரத்துவரை சென்றது; ஒரு மாதம்வரை மனைவியர்களிடமிருந்து கோபித்துக் கொண்டும் விலகியிருந்தார். ஆயிஷா பகிரங்கமாக பொய் சொல்லக் கூடியவர் என்பது தெரிந்தும் அவரது வார்த்தைகளை எப்படி நம்புகிறாய்?”

”அறிவு கெட்ட அப்து முனாஃபிகே... எங்களிடம் பேசுவதைப் போல மற்றவர்களிடமும் பேசினால் உன் கழுத்தின் மேல் உனது தலை இருக்காது” என்றான் இப்ன் ஷியா.

“சரி அதைப்பற்றி பிறகு பேசலாம்! நமக்கு இன்றைய காலை உணவு இதுதான்!” என்றவாறுஅப்து முனாஃபிக் தனது மூட்டையிலிருந்த நன்கு கனிந்த பேரீச்சம் கனிகளைக் கொட்டினான். மூவரும் வட்டமாக அமர்ந்து கொண்டனர். இப்ன் சுன்னா தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் துருத்தியைக் கொண்டுவந்து வசதியாக அருகில் வைத்துக் கொண்டான்.

”ரஸூலுல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் அபூபக்ர்தான்” என்றான் இப்ன் ஷியா மறுபடியும்.

அடேய் முட்டாள் பயலே..! ’செல்வத்தாலும் தோழமையாலும் எனக்குப் பேருபகாரம் செய்தவர் அபூபக்ர் அவர்கள்தான். நான்  உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாக இருந்தால், அபூபக்ரையே உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாமிய சகோதரத்துவமே போதுமானதாகும். கவனியுங்கள்! நான் ஒவ்வொரு நண்பனின் நட்பிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் இறைவனுக்கு மட்டுமே உற்ற தோழனாக இருக்க விரும்புகிறேன். உங்கள் தோழர் ஆகிய நான் அல்லாஹ்வின் உற்ற தோழன் ஆவேன்’ (முஸ்லீம் 4748, 4753), என்று சொல்லியிருக்கும் போது அபூபக்ர் எப்படி உற்ற நண்பராவார்…?” என்றான் அப்து முனாஃபிக்.

”கடைத் தெருக்களில் என்ன பேசிக் கொண்கிறார்கள்” என்றான் இப்ன் சுன்னா.

“முன்பே அலீயிடம் இறுதி விருப்பத்தை தெரிவித்திருப்பதாக சிலர் பேசிக் கொண்டனர்!” என்றான் அப்து முனாஃபிக்.

இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்" (குர்ஆன் 33:33) என்ற வசனம் பொதுவாக அல்லாஹ்வின் தூதரது குடும்பத்தையே குறிப்பிடுகிறது இதில் அலீ பின் அபிதாலீப் - ஃபாத்திமா மட்டுமல்ல அல்லாஹ்வின் தூதரது மனைவியர்களையும் அவரது மாமனார்களான அபூபக்ரையும் உமரையும் குறிப்பிடுமே?” என்று அவசரமாக மறுத்தான் இப்ன் ஷியா.

”பெண்களின் அறிவில் குறைபாடு இருக்கிறது (முஸ்லீம் 132) தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது (புகாரி 4425) என்று அல்லாஹ்வின் தூதரே சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ’ஒரு பெண் ஓர் ஆணுடன் குறிப்பிட்ட சில காலம் இருப்பாள். பின்னர் அவளை அவன் மணவிலக்குச் செய்துவிட்டால், அவள் தன் தந்தையிடமோ அல்லது தன் குடும்பத்தாரிடமோ திரும்பிச் சென்றுவிடுவாள். நபியவர்களுடைய குடும்பத்தார் அவர்களுடைய மூல உறவினரும் அவர்களுக்குப்பின் தர்மம் பெறுவது தடை செய்யப்பட்ட அவர்களுடைய தந்தை வழி உறவினர்களுமே ஆவர்கள்(முஸ்லீம் 4783) அதனால் நீ சொல்வதைபோல இடையில்வந்த உறவுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளமுடியாது!” என்றான் அப்து முனாஃபிக்.

“சரியாகச் சொன்னாய் முனாஃபிக்..!” இப்ன் சுன்னா முகத்தில் மகிழ்சி பொங்கியது.

“ஆனால் அல்லாஹ்வின் தூதர் அன்னை ஆயிஷாவிடம் இறுதி விருப்பம் கூறியிருக்கிறாரே அதன் படி நோக்கினால் அபூபக்ர்தான் அடுத்த ஆட்சித் தலைவர்!” என்றான் இப்ன் ஷியா.

”நீ ஒரு அவசரக்காரன், அரஃபா பேருரையில், சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம் அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை (இப்னுமாஜா 2705) ..உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;...(குர்ஆன் 2:282)  என்பது குர்ஆனின் வார்த்தைகள். அந்தரங்கமான நேரத்தில் ஆயிஷாவிடம் கூறியதை வேறு சாட்சிகள் இல்ல்லாமல் எப்படி ஏற்க முடியும்? தான் மற்றவர்களுக்குக் கற்பித்துக் கூறியதை அல்லாஹ்வின் தூதர் மீறுவாரா? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது! அப்படி அவர் இறுதி விருப்பம் கூறுவதாக இருந்தால் தகுந்த சாட்சிகளின் முன்னிலையில்தான் சொல்வார். அதுமட்டுமல்ல, அல்லாஹ்வின் தூதர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அல்லாஹ்விடமிருந்து வஹீ வந்து அவரது முடிவு மாறலாம் அல்லது ரஸூலுல்லாஹ் இப்பிரச்சினைக்கு வேறு ஏதேனும் தீர்வைச் சொல்லலாம் அதற்குள் எல்லோரும் பதவிவெறி பிடித்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது சரியில்லை!” என்றான் அப்து முனாஃபிக்.

“இறுதியாகக் கூறினாயே இது மிகச் சரியானது…!” என்றனர் மற்ற இருவரும்.

பேசிக் கொண்டே மூவரும்  பேரீச்சங்கனிகளில் பெரும்பகுதியை தங்களது வயிற்றுக்குள் தள்ளியிருந்தனர்.

“நான் சற்று வெளியில் சென்று இயற்கைக் கடன்களை நிறைவேற்றிவிட்டு வருகிறேன்” என்றவாறு கூடாரத்திற்கு அருகிக் கிடந்த கற்கள் சிலவற்றை பொறுக்கி  தொலைவான இடத்தை நோக்கி நடந்தான் அப்து முனாஃபிக்.
“இரு.. நானும் வருகிறேன்!” என்று இப்ன் ஷியாவும் அவனுடன் இணைந்து கொண்டான். இப்ன் ஷியாவை நோக்கி,

”தூதரது உடல்நிலையை எப்படி இருக்கிறதென்பதை இன்று நேரில் சென்று பார்த்துவிடுவோம்!” என்றான் அப்து முனாஃபிக்

”அந்த பெரும் கூட்டத்திற்குள் நாம் எப்படி செல்வது...? நம்மை எவரும் மதிக்கக்கூட மாட்டார்கள்!”

”அங்கு என்ன நடக்கிறது என்பதை காண்பதற்காகத்தான் செல்கிறோம்! அவர்கள் நம்மை மதித்க்கவில்லையெனினும் நிச்சயமாகத் துறத்திவிடமாட்டார்கள்!”

”நாம் விரைவாகச் செல்லவேண்டும்!” என்றான் இப்ன் ஷியா

இருவரும் ஆளுக்கொரு பாறைக்குப் பின்னால் கழிப்பிடங்களைத் தேடிக் கொண்டனர்.

+++++++++



அன்றைய முற்பகல் வேளையில் மூவரும் பள்ளிவாசலை அடைந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே கூட்டம் அதிகமாகவே இருந்தது.

“தொழுகை நேரம் துவங்குவதற்குள் நாம் உள்ளே நுழைந்துவிடவேண்டும்” என்று கிசுகிசுத்தான் முனாஃபிக்.

அவர்கள் இருவரும் சரியென்பதைப் போல தலையசைத்தனர்.

“நான் முதலில் செல்கிறேன் என்னைப் பின்பற்றி நீங்களும் வந்துவிடுங்கள்!” என்றான் முனாஃபிக்.

முனாஃபிக் மெல்ல கூட்டத்திற்குள் தலைய நுழைத்தான். வியர்வை நாற்றமும், குளிக்காமல் வாசனைத் திரவியங்களை மட்டும் தேய்த்துக் கொள்பவர்களால் உருவான புதிய நாற்றமும் கூட்டணி அமைத்துக் கொண்டு அவனை திணறச் செய்தது.

தலையைவெளியே உருவினான். கண்களை உருட்டி, தலையைக் குலுக்கிக்கொண்டு செம்மறி ஆடு போல உறுமிக் கொண்டு,

”சிறிது கூட மனிதாபிமானம் இல்லாதவர்கள்!” என்றான்

“ஏன்... என்ன ஆயிற்று” என்றான் இப்ன் சுன்னா

”நாற்றம் தாங்க முடியவில்லை! மூச்சு திணறியே இறந்து விடுவேன் போலிருக்கிறது..!” என்றான் முனாஃபிக்

”இன்று வியாழக் கிழமை! அப்படித்தான் இருக்கும் ஒரு வாரமாக எவரும் குளித்திருக்க மாட்டார்கள். ஒருவேளை நாளை ஜும்ஆவிற்கு குளிப்பார்கள் என்று நினைக்கிறேன்!” என்றான்

”இது எனக்குத் தெரியாதா..?” என்றான் முனாஃபிக்

“பிறகு...?”

“நேற்று அவர்கள் என்னனென்ன சப்பிட்டார்கள் என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றான்

வாயைக் கைகளால் மூடிக் கொண்டு சத்தமில்லாமல் சிரித்தனர்.

”நெரிசல் மிகுந்த கூட்டத்திற்குள் இந்த வேலையைச் செய்பவர்களை என்ன செய்தாலும் தகும். எதற்கெல்லாமோ புதிதுபுதிதாக சட்டம் இயற்றிக் கொண்டிருப்பவர்கள் இதற்கொரு தீர்வைச் சொல்லியிருக்கலாம்!” என்றான் முனாஃபிக்.

”இப்பொழுது அல்லாஹ்வின் தூதர் இருக்கும் நிலையில் அதற்கெல்லாம் நேரமில்லை! எப்படியாவது உள்ளே நுழைந்து விடு!” என்றான் இப்ன் சுன்னா.

மூச்சை பிடித்துக் கொண்டு, முனாஃபிக் லாகவமாக வளைந்து, நெளிந்து, கூட்டத்தை பிளந்து கொண்டு ஏறக்குறையை முன்வரிசைக்கே சென்று உமரின் அருகில் நின்றுகொண்டான். பின்வரிசையில் மற்ற இருவரும் வந்து இணைந்து கொண்டனர். 



”நான் மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!” வீட்டிற்குள்ளிருந்து முஹம்மதின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது,

“இந்த நிலையில் எப்படி உபதேசம் செய்வீர்கள்?” என்ற ஆயிஷாவின் குரல் கேட்டது.

”வாய் திறக்கப்படாத ஏழு தோல்பை தண்ணீரை என் மீது ஊற்றுங்கள்!” என்றார் முஹம்மது.

“எல்லோரும் வாருங்கள் அல்லாஹ்வின் தூதரை அந்தக் கல்தொட்டியில் உட்காரவைத்து தண்ணீரை ஊற்றுவோம்!” இது ஆயிஷா

தண்ணீர் ஊற்றும் சபதம் கேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் ,
“ம்ம்... போதும்… போதும்..!” என்ற முஹம்மதின் பலகீனமான குரல் கேட்டது.

”நான் சென்று உங்களை அழைத்துச் செல்வதற்கு யாரையாவது வரச் சொல்கிறேன்” என்ற ஆயிஷாவின் குரல் கேட்டது.

“வேண்டாம்! இங்கிருந்தே குரல் கொடு… திரைக்கு பின்னால் நின்று பேசு!” 

இப்ன் சுன்னா, ”அல்லாஹ்வின் தூதருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை போலிருக்கிறது” என்று இப்ன் ஷியாவின் காதில் கிசுகிசுத்தான்.

”அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வதற்கு வாருங்கள்” என்ற ஹஃப்ஸாவின் குரல் திரைக்குப் பின்னாலிருந்து ஒலித்தது.

அப்து முனாஃபிக் செல்ல முயன்றான் அதற்குள் வேறு இரண்டு ஸஹாபாக்கள் திரையைக் கடந்து சென்றுவிட்டனர். மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒரு துணியால் தலையை இறுக்கிக் கட்டிய நிலையில் கைத்தாங்கலாக முஹம்மது அழைத்து வரப்பட்டார். முஹம்மது என்ன சொல்லபோகிறாரோ என்ற ஆர்வம் ஒவ்வொருவரது முகத்திலும் தெறித்துக் கொண்டிருந்தது.

வாருங்கள்.  நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்றார் முஹம்மது.

கூட்டத்திற்குள் மெதுவாக சலசலப்பு துவங்கியது. உமர் திருதிருவென்று விழித்தவாறு கூட்டத்தினரைக் கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென சலசலப்பு அதிகமாகியது.

"எலும்பையும் மைக்கூட்டையும்  கொண்டுவாருங்கள். உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பின்னர் குறிப்பிட்ட அந்த விஷயங்களில் ஒருபோதும் நீங்கள் வழிதவறவேமாட்டீர்கள்"

அப்போது உமர்,

 'நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை மிகைத்துவிட்டது உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே. இறைவேதமே நமக்குப் போதும்” என்றார்.

 அதற்குள் கூட்டத்தில் சிலர்,

"அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத்தில் உளறுகிறாரா?அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்" என்றனர்.

மக்கள் உரத்த குரலில் ஒருவருக்கொருவர் சச்சரவிட்டுக் கொண்டனர். யார் என்ன பேசுகிறார்கள் என்றே கேட்கமுடியவில்லை. 

“உமரே! அல்லாஹ்வின் தூதர் சொல்வது உங்களுக்குக் கேட்கவில்லையா” 
என்ற பெண்களின் குரலும் திரைக்குப் பின்னாலிருந்து ஒலிக்கத் துவங்கியது.

”அடப்பாவிகளா! நான் பலவீனத்தில் உளறுகிறேனா?” என்ற முஹம்மதின் வேதனைக்குரல், அந்த சச்சரவில் எவர் காதுகளையும் அடையவேயில்லை.

இன்னொரு கூட்டம்,

நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம் கொண்டுவந்து கொடுங்கள். உங்களக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறிட மாட்டீர்கள்'” என்றனர்.

”உமர் சொல்வது சரிதான்! நம்மிடம் குர்ஆன் இருக்கிறது! அதுவே போதும்!” என்று மேலும் உரத்த குரலில் சப்தமிட்டுக் கொண்டிருந்தது இன்னொரு கூட்டம்.

இருதரப்பும் மாறிமாறி சப்தமிட்டு சச்சரவை அதிகரிக்க முஹம்மது தலையைப் பிடித்துக் கொண்டார்.

’வாரிசுரிமை குழப்பத்திற்கு இனி நான் என்னதான் தீர்வு சொன்னாலும்  இவர்கள் கேட்கமாட்டார்கள். உமர் மிகச் சரியாக காய் நகர்த்தி விட்டான்!’ என்று மனதில் நினைத்துக் கொண்டார் முஹம்மது.

“அல்லாஹ்வின் தூதர் மீண்டும் நோய்வாய்ப்படுகிறார்” என்ற குரல் கேட்க கூட்டம் அமைதியானது.

என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த மரணசாசனம் எழுதும் பணியை விட நான் இப்போதுள்ள நிலையே இருப்பது சிறந்தது” என்றார் முஹம்மது.

உமரின் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றி மறைந்ததை அப்து முனாஃபிக் கவனிக்கத் தவறவில்லை. கூட்டம் மீண்டும் அமைதியானது. மெல்லிய குரலில் முஹம்மது தொடர்ந்தார்.

”நான் உங்களுக்கு வேறு சில விஷயங்களைச் சொல்கிறேன். அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள். தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்" (புகாரி 53, 3168 4431, 5669 & முஸ்லீம் 3364, 3365).

முஹம்மதால் தொடர்ந்து பேசமுடியவில்லை.

“நான் ஓவ்வெடுக்க விரும்புகிறேன்” என்றார்.

முன்வரிசையில் நின்று கொண்டிருந்த அப்து முனாஃபிக் விரைந்து சென்று முஹம்மதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். இன்னொரு ஸஹாபியும் உதவிக்குவர வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

திரையைக் கடந்து உள்ளே சென்றனர். அவரை எங்கு படுக்கவைப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆயிஷாவும், ஹஃப்ஸாவும் விரைந்து வந்து முஹம்மதைப் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.  அந்தப் பெண்களின் முகத்தில் மிகப்பெரும் வெற்றியை ஈட்டிய நிறைவு தெரிந்தது.

முனாஃபிக் வெளியில் வந்தான். கூட்டம் சலசலப்புடன் கலைந்து கொண்டிருந்தது. கும்பலை விலக்கிக் கொண்டு ஒரு வெற்றிப் புன்னகையுடன் விரைவாக வெளியேறினார் உமர்.

இப்ன் சுன்னாவும் இப்ன் ஷியாவும் முனாஃபிக்குடன் இணைந்து கொண்டனர்.

“என்ன இது.. இப்படி ஆகிவிட்டதே?” என்றான் இப்ன் ஷியா

“இங்கு வேண்டாம்! நாம் நமது கூடாரத்திற்கு சென்று விடுவோம்” என்று கிசுகிசுத்தான் முனாஃபிக்.

மூவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் கூடாரத்தை அடைந்தனர்.

”என்ன இவர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்” என்று மவுனத்தைக் கலைத்தான் இப்ன் சுன்னா.

“இதுதான் இவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படும் இலட்சணமா?” என்று வெறுப்பை உமிழ்ந்தான் இப்ன் ஷியா.


”…தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்;… என்ற குர்ஆன் (59:7)  வசனம்   கனீமத்துப் பொருட்களைப் பங்கீடு செய்வதைப்பற்றி மட்டுமே பேசுகிறது என்று நினைத்துவிட்டனர் என்னவோ?” என்றான் இப்ன் சுன்னா.

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை (53:3) என்கிறது குர்ஆன் வசனம். இன்று அல்லாஹ்வின் தூதர் மரணசாசனம் எழுதித் தரவேண்டுமென்ற மிக முக்கியமான விருப்பம்கூட அல்லாஹ்வின் கட்டளை என்று கூறலாம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றவிடாமல் முற்றிலுமாகத் தடுத்துவிட்ட உமர் போன்ற ஆட்கள் உண்மையான முஃமின்களா?” என்றான் அப்து முனாஃபிக்.

“… …!?”

 “அல்லாஹ்.. வஹீ… குர்ஆன் என்று சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் அதிகாரத்திற்காகத்தானா?”

“நாங்கள் ஏற்கெனவே குழம்பிப் போயிருக்கிறோம் இதில் நீ வேறா…?” என்றான் இப்ன் ஷியா.

“அல்லாஹ்வின் தூதர் தான் விரும்பியதை செயல்படுத்தியிருக்கலாமே… அவர் ஏன் அவ்வாறு செய்யவில்லை?” என்றான் இப்ன் சுன்னா.

“மரணசாசனம் எழுதப் போகிறேன் என்று சொன்னதற்கு இவர்கள் செய்த சச்சரவைக் கண்ட பிறகு அவரால் எப்படி எழுத முடியும். ஒருவேளை அவர் அப்படிச் செய்திருந்தால் எழுதியிருந்தால் அங்கு இரத்த ஆறு ஓடியிருக்கும்! போதக்குறைக்கு அல்லாஹ்வின் தூதர் நோயின் வேதனையில் உளறுவதாக அவர் முன்னிலையிலேயே சொல்கின்றனர். தனது வார்த்தைகளுக்கு கிடைத்த மரியாதையை எண்ணி அகமகிழ்ந்து அமைதியாகியிருப்பார்” என்றான் முனாஃபிக்.

”சரி… அவரது வீட்டிற்குள் சென்றாயே அவரது மனைவிர்களின் நிலையைக் கவனித்தாயா…?” என்றான் இப்ன் சுன்னா.

“அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யச் சென்றதற்கு அதுவும் ஒரு காரணம். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் வெற்றிக்களிப்பில் இருப்பதைப் போலத் தோன்றியது!” என்றன்

“இனி அலீயின் கதி…?”

தொடரும்…

தஜ்ஜால்.

Facebook Comments

9 கருத்துரைகள்:

சிந்திக்கமாட்டார்களா said...

சிரித்து சிரித்தே சாப்பிட்டதெல்லாம் செரித்துவிட்டது ,சிந்திக்கவைக்கும் வரலாற்று கேள்விகள் மவ்லவிகளின் மனசாட்சி(இருந்தால்)யை நிச்சயம் உறுத்தும் மூன்று புனைவு பாத்திரங்களை பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம் (ஷியா,சுன்னா,முனாஃபிக்)பதிவை படிக்கும் மவ்லவிகளுக்கு புரியும் வாழ்த்துகள் சகோதரர் தஜ்ஜால்

சிந்திக்கமாட்டார்களா said...

சிரித்து சிரித்தே சாப்பிட்டதெல்லாம் செரித்துவிட்டது ,சிந்திக்கவைக்கும் வரலாற்று கேள்விகள் மவ்லவிகளின் மனசாட்சி(இருந்தால்)யை நிச்சயம் உறுத்தும் மூன்று புனைவு பாத்திரங்களை பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம் (ஷியா,சுன்னா,முனாஃபிக்)பதிவை படிக்கும் மவ்லவிகளுக்கு புரியும் வாழ்த்துகள் சகோதரர் தஜ்ஜால்

ஆன்மஞானம் said...

மர்மக்கதை போல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறது. சாருநிவேதிதா நடையிலிருந்து தற்பொழுது புஷ்பாதங்கதுரை நடையில் மாறியுள்ளது. இது போலவே இலைமறை காய் போல எழுதுவதுதான்
நன்றாக இருக்கிறது. இதே நடையில் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Ant said...

கட்டுரையை வாசிப்பது என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை கண்முன் கான்பது போன்ற காட்சியை நேரில் நிறுத்துகிறது. ஒரே மூச்சில் நிறுத்தாமல் வாசிக்க நேரிட்டது. ஆனால் கோர்வையாக உரிய ஆதாரங்களுடன் இதை எழுத கடின உழைப்பும் தொடர்புடைய புலத்தில் நிறையறிவும் பெற்றிருந்தால் மட்டுமே ஆகும். பாராட்ட வார்த்தைகள் இல்லை! முயற்சி திருவினை ஆக்கும்!!

தஜ்ஜால் said...

வாங்க mohamed sadiq,

நன்றி!

// புனைவு பாத்திரங்களை பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம் /// இன்று நமக்குள் எழும் கேள்விகளை, முஹம்மதின் காலத்தில் சிலர், கேட்டிருப்பதற்கான தடயங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. அந்த வேலையை நடுநிலை புனைவு பாத்திரங்கள் மூலம் வெளிக் கொண்டுவர முயற்சிக்கிறேன். அதில் இப்ன் ஷியா - இப்ன் சுன்னா என்ற இருவரின் பெயர்களும் அவர்களது நிலையும் எதிரெதிராக இருக்கும். மூன்றாம் நபர் முனாஃபிக், பகுத்தறிவுவாதி!

முஹம்மது மற்றும் அவரது கைத்தடிகளால் முனாஃபிக் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் சுயமாக சிந்திக்கத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். அதனால்தான் அல்லக்கைகள் திட்டமிட்டு அழித்தும், முஹம்மதின் தில்லாலங்கடிகள் இன்று நம்மை வந்தடைந்திருக்கிறது. அவர்களை மனதில் கொண்டுதான் இந்தப் புனைவுப் பாத்திரங்களை உருவாக்கினேன்.

தஜ்ஜால் said...

வாங்க ஆன்மஞானம்,

நன்றி!

நாவல்கள் வாசிப்பதை நிறுத்தி சுமார் இருபது ஆண்டுகள் இருக்கும். ஆயினும் ஆழ்மனதில் பதிந்திருக்கும் அந்த எழுத்தாளர்களின் நடை என்னையும் அறியாமல் மாறிமாறி வெளிவருகிறதென்று நினைக்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க Ant,

நன்கு தெரிந்த செய்திகள் தானே என்ற குருட்டு தைரியத்தில் இந்த வரலாற்றை எழுதத் துவங்கிவிட்டேன், ஆனால் உள்ளே செல்லச் செல்ல தீவிர வாசிப்பும் ஆய்வும் தேவைப்படுகிறது. ஷியா-சுன்னி இருவரது வாதங்களையும் கவனத்தில் கொண்டு, அதற்கான ஆதாரங்களையும் தேட வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே நமக்கிருக்கும் அன்றாட அலுவல்களுக்கிடையில் இதைச் செய்வது கொஞ்சம் சிரமாகத்தான் இருக்கிறது. பதிவுகள் தாமதமாவதும் இதனால்தான். அதை மிகச் சரியாக புரிந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!

Ant said...

//உள்ளே செல்லச் செல்ல தீவிர வாசிப்பும் ஆய்வும் தேவைப்படுகிறது// கட்டுரைக்கு தேவையான மற்றும் தொடர்பான தகவல்களை தேடி கண்டு அறிவது ஒரு கடினமான பணியாக இருந்தாலும் அதை சரியான இடத்தில் பொறுத்தி கட்டுரையில் கோர்வையாக கொண்டுவருவது மற்றொரு கடினமான பணி. இவ்விரண்டு கடினமான பணியின் வெளிப்பாடுதான் இம் முழுமையான கட்டுரை. தங்கள் தேடல் வேட்கையில் பலனை எந்த முயற்சியும் செலவும் இல்லாமல் நாங்கள் எளிதாக பெற்றுவருகிறோம்.

//அன்றாட அலுவல்களுக்கிடையில் இதைச் செய்வது கொஞ்சம் சிரமாகத்தான் இருக்கிறது//
மிக குறுகிய கால இடைவெளியில் வந்த கட்டுரையின் தரத்தில் தங்களது சிரமம் எந்தவகையிலும் பாதித்ததாக தெரியவில்லை. தரமான உறுதிபடுத்திக் கொள்ளத் தக்க செய்திகளை அறிந்து கொள்ள நாங்கள் காத்திருக்கதான் வேண்டும். இந்த கட்டுரை முஃமீன்கள் மத்தியில் ஒரு அமைதியை ஏற்படுத்தியுள்ளது தெளிவு. சிந்திப்பார்களா? என்பதை காலம் பதில் சொல்லும். தங்களது கடின உழைப்பின் பலனை அனுபவிப்பற்கு மீண்டும் ஒரு நன்றி.

Harley Reeves said...

Hello nicce post