Friday 18 March 2016

இஸ்லாமும் பெண்கள் கல்வியும்!-1



கடந்த வாரம் கோவை அத்தர் ஜமாஅத் பள்ளிவாசலில், சில ஆலீம்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஜாக், த.த.ஜ என்று துவங்கி, குர்ஆன், ஹதீஸ், ஹதீஸ்கலை என்றெல்லாம் உரையாடல் சென்று கொண்டிருந்தது.  ’இல்ம்’ என்றால் என்ன?  என்ற கேள்வியை முன்வைத்தேன்.


’இல்ம்’ என்றால் என்ன?


அவர் ஒரு அதிதீவிர தப்லீக்வாதி. எனது கல்லூரி வகுப்புத் தோழர், ஒருவகையில் எனக்கு உறவினரும் கூட; அவரது மனைவி அவருக்கு நேரெதிர் தப்லீக் ஜமாஅத்தை அடியோடு வெறுப்பவர். இப்படியொரு குடும்பம்! நேரெதிர் சிந்தனைகள் கொண்ட இருவர் எப்படி இணைய முடியுமென்று தோன்றலாம். இதற்கு ஒரே பதில், தக்யா எனும் புனித மோசடிதான்!



தப்லீக் ஜமாஅத் என்பது இஸ்லாமின் அதிதீவிர அடிப்படைவாதிகள். அரை மீட்டர் நீள தாடியும், முழங்காலுக்கும் கீழே தொங்கும் அழுக்கு ஜுப்பாவும், கணுக்காலுக்கு மேலே ஏறிய கால்சட்டையும் தின்று கொழுத்த தொந்தியுமாக, சுன்னத் எனப்படும் முஹம்மதின் செயல்முறைகளை அப்படியே செயல்படுத்துகிறோமென்று கூறிக் கொண்டு குடும்பத்திரைக் கவனிக்காமல், வீதி வீதியாக திரிபவர்கள். இவர்களின் இன்னொரு பதிப்புதான் தலீபான்கள்.


 இவர்களுக்கிடையே காணப்படும் மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால்,  தலீபான்கள் கடுமையான சூழலிலும் சண்டையிடுமளவிற்குப் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்; இவர்கள் அர்த்தமில்லாமல் பேசியே கொல்லும் வாய்களையும் உண்டு கொழுத்த தொந்திகளையும் கொண்டவர்கள். எந்தச் சூழலிலும் எவ்வளவு கொடுத்தாலும் தின்று தீர்க்க தயங்க மாட்டார்கள்.  இவர்கள் இரயில், பேருந்துகளில்கூட ஒரு துணியை விரித்து தொழுது கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். தீனுக்காக(கொள்கை) தங்கள் வாழ்வை அர்பணிப்பதாகக் கூறிக் கொண்டு தீணுக்காக அலையும் ஒரு கூட்டம்!




தப்லீக் ஜமாஅத்தைப்பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது; தப்லீக் ஜமாத்தின்  செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக, ஒரு தப்லீக்வாதியின் செயல்பாடுகளை முன்வைக்கிறேன்.

கல்லூரிக் காலங்களில் அவருக்கு இஸ்லாமில் பெரிய ஈர்ப்பு இருந்ததாகத் தெரியவில்லை; வேறொரு நண்பர் வழியாக தப்லீக் ஜமாஅத் அவருக்கு அறிமுகமானது. ஆரம்பத்தில் அவரிடம் குறிப்பிடும்படியான  மாற்றங்கள் எதுவுமில்லை; திருமணத்திற்குப் பிறகு அவரது செயல்பாடு தீவிரமாகத் துவங்கியது. வாரம் ஒருநாள், மாதத்தில் மூன்று நாட்கள், வருடத்திற்கு நாற்பது நாட்கள், நான்கு மாதம் பத்து நாட்கள் என்று அவரது தப்லீக்  அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இஸ்லாமியக் கொள்கைகளுகாகத் தானே என்று நமது தப்லீக்வாதியைப் எவரும் தடை செய்யவில்லை. இது நாளடைவில் முற்றி வெறியாக மாறிவிட்டது.

உதாரணத்திற்கு அவரது குழந்தைகள் உடலில் காயம் அல்லது புண் இருப்பதாகக் காண்பித்தால், உடனே தனது எச்சிலை துப்பி அந்த இடத்தில் ஓதி ஊதிவிடுவார். அதாவது முஹம்மதின் போதனைகளை அப்படியே பின்பற்றுகிறாராம். அவரது பெண்குழந்தைக்கு,  9 வயதாக இருக்கையில், வேறொரு பிரச்சினை துவங்கியது. பெண்கள் உலகக் கல்வி பயில வேண்டிய அவசியமில்லை மதரஸாவிற்கு மட்டுமே அனுப்ப வேண்டுமென்று தனது இஸ்லாமிய கொள்கையை பிடிவாதத்தைக் கையிலெடுத்தார். அதென்ன உலகக் கல்வி? அதைப்பற்றி விரிவாக பிறகு சொல்கிறேன். இப்பொழுது நாம் தப்லீக்வாதியின் செயல்பாடுகளைத் காண்போம்.


அவர் எனது வார்த்தைகளுக்கு கட்டுப்படக் கூடியவர் என்பதால் விவகாரத்தில் தலையிட நான் அழைக்கப்பட்டேன். எனது குழந்தைகளின் கல்விக்காக உதவுங்கள் என்று கண்ணீர் விட்டார் தப்லீக்வாதியின் துணைவியர்.  எனது நண்பர் தப்லீக்வாதியிடம்,

”உனக்கு என்னதான் பிரச்சினை? குழந்தையை படிக்க ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்னு சொன்னாயா?” என்று ஆரம்பித்தேன்.

“நான் படிக்க வேண்டாம்னு சொல்லலை, உலகக் கல்வியைவிட மார்க்கக் கல்விதான் என்றைக்குமே பயன்தரக் கூடியது. அதனால மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவத்தை கொடுங்கன்னு சொல்லறேன்” என்றார்.

”உன்னோட மகள் மதரஸாவுக்கு போயிட்டுதானே இருக்கிறாள்? மறுபடியும் என்ன மார்க்கக் கல்வி?”

“இல்லை அது போதாது!” என்றார்

”பள்ளிக்கூடமே வேண்டாம்னு சொல்றியா?” என்றேன்

“ஓரளவிற்கு அவளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுது. இது போதும் மதரஸாவில் சேர்த்துவிட்டால் மார்க்கக் கல்வியோட நீங்க எல்லோரும் விரும்பற மாதிரி தமிழையும் படிக்கலாம்!” என்றார்

”நீ…படித்தவன்! இப்படியா பேசறது? கல்வினா... மொழிப்பாடங்கள் மட்டுமல்ல!” என்றேன்.

“… …?”

“நீ இன்னைக்கு சம்பாதிச்சது, சாப்படறது எல்லாமே உன்னுடைய கல்வியாலதான்!”

“அறிவியலையும் புவியியலைம் படித்து நம்ம பெண்கள் என்ன செய்யப் போறாங்க? எப்படியும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் அப்புற எதுக்கு தேவையில்லததையெல்லம் படிக்கனும்?” என்றார்.

அவரது விளக்கம் என்னை கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. என்னை அடக்கிக் கொண்டு,

“பைத்தியக்காரன் மாதிரி பேசாதே! படிச்சவங்க எல்லோரும் வேலைக்குப் போகணும்னு அவசியமில்லை. படிக்கிறது அறிவு வளர்வதற்காகத்தான்! என்றேன்.

“அந்த ஸ்கூல்ல தொழுக ஏதாவது வசதியிருக்கா…? என் பொண்ணோட  லுஹர் தொழுகையெல்லாம் பாழாய்ப் போகுது!” என்று பொரிந்தான்.

“ஸ்கூல்ல எப்படிடா தொழ முடியும்? அது எல்லோருக்கும் பொதுவான இடம்!” என்றேன்.

“குழந்தைகளுக்கு ஏழு வயசானாலே தொழச் சொல்லி ஏவ வேணும்னு பெரியவங்க சொல்லியிருக்கங்க, இவளுக்கு 9 வயசாகுது இன்னும் ஐவேளை தொழறதில்லை… அந்த ஸ்கூல்ல அதுக்கு வாய்ப்பில்லை! நாளை மறுமையில அல்லாஹ்வின் விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டாமா..?

”சரி… ஸ்கூல்விட்டு வந்த பிறகு விடுபட்டதை தொழ வைக்க வேண்டியதுதானே?

“… …!”

”இவ்வளவு பேசறியே? அந்த ஸ்கூல்ல பெண்ணுங்க போடற யூனிஃபார்மை பார்த்தியா? தலையை மறைக்கிறதில்ல, முழங்காலுக்கு மேல இருக்கற ஸ்கர்ட்டும் பார்க்கவே சகிக்கலை!” என்ற பொழுது முஹம்மதின் போதனைகளின் சுயரூபம் வெளிப்பட்டது.

எங்களது குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தது ஒரு கிஸ்தவ மிஷனரி பள்ளிக் கூடம்.

”அந்த வகுப்பில இருக்கிற எல்லொரும் சின்னக் குழந்தைகள், அவங்க பெரியவங்களாகும் பொழுது அதற்குத் தகுந்த யூனிஃபார்ம் கொடுப்பாங்க…!” என்றேன் பொறுமையாக.

”இல்லை…! ரஸூல்(ஸல்) நமக்கு இப்படியெல்லம் ஆடை அணியச் சொல்லித்தரல…!”

“அவர் ஒட்டகத்திலேயும், கழுதையிலேயும்தான் போனாரு, நீயும் அதுல போக வேண்டியதுதானே?” என்றேன்.  அவர் விடாப்பிடியாக தொடர்ந்து ஆடையைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

திரைக்குப் பின்னால் இருந்து,

”ஸ்கூல் பிர்ன்பாலிகிட்ட போய் ஏதோ தகராறு செய்விட்டு வந்திருக்கிறார்!” என்று எங்களது உரையாடலை இடைமறித்தார் நண்பரின் மனைவி.

“அங்கே போய் என்னடா…செய்தே?” என்றேன்.

”ஆமாம் என் மகள் தலைமறைக்காமல் வகுப்பில இருக்கிறா(ள்)  இது அல்லாஹ்வோட தீனுக்கு எதிரானது. அதனால வகுப்பிலையும் தலையை மறைக்க அனுமதி குடுங்கன்னு பிரின்ஸ்பால்கிட்ட அனுமதி கேட்டேன்!” என்றான்

“சரி அவங்க என்ன சொன்னாங்க?”

“அதெல்லாம் முடியாது எல்லோருக்கும் ஒரே நடைமுறைதான் உங்க மகளுக்கு ஸ்பெஷல் அனுமதியெல்லாம் தரமுடியாதுன்னு சொல்லீட்டாங்க!”

”… …!”

“நீங்க மட்டும் தலையைமறைச்சு கன்னியஸ்திரி டிரஸ் போடலாமான்னு கேட்டேன்!” என்றார்.

”இனி என் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அந்த சிஸ்டர் மனசில என்னவெல்லாம் தோணுமோ?” என்ற நண்பரின் மனைவியிடம்  விசும்பல் ஆரம்பமாகியிருந்தது. சிறிது நேரம் அமைதி நிலவியது.

நான் என்ன சொன்னாலும் சிறிதுகூட தனது பிடிவாதத்தை  தளர்த்தாமல் தப்லீக்வாதி பேசிக் கொண்டே இருந்தார். குழந்தையின் கல்வி தடைபடுவதை எப்படியாவது தடுக்கவேண்டுமென்று தோன்றியது.

“சரி.. முடிவா என்னதான் சொல்ல வர்றே?” என்றேன்

“என் மகளை முழுநேர மதரஸாவில் சேர்த்தலாம்னு இருக்கேன்!” என்றார் உறுதியாக

“உனக்கு அந்த ஸ்கூல் பிடிக்கலைனா வேற ஸ்கூலைப் பார்க்கலாமே?” என்றேன்.

“…. ….?”

”கிறிஸ்தவ நிர்வாகம்தான் உனக்குப் பிரச்சினையா இருந்தால், முஸ்லீம்களின் நிர்வகத்தின் கீழிருக்கிற பள்ளிக் கூடத்தில் சேர்த்தலாமே? நீ… நினைக்கிற மாதிரி உன் மகள் தலையை மறைக்கலாம், லுஹ்ர் தொழலாம். அங்கு அரபியும் ஒரு பாடமாகவும் இருக்கிறது! என்றேன்.

எனது ஆலோசனையை மறுக்க முடியாமல், ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“சரி..! பெரியவளாக ஆகும்வரை ஸ்கூலுக்குப் போகட்டும் அதன் பிறகு மதரஸாவிற்கு மட்டும் போகட்டும்!” என்று மறுபடியும் ஒரு குண்டை போட்டார்.

எதையாவது பேசி இவரை பின்னர் சரிகட்டிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில்,

“சரி…! அதை பிறகு பார்க்கலாம்!” என்றேன். தற்காலிகமாக பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது.

ஆனால் என் நண்பரின் போக்கு இன்னும் தீவிரமானது. வீட்டிலிருந்த வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும் தீயிட்டு எரித்தார். உருவங்கள் இருக்கிறதென்று தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எல்லாவற்றையும் அடியோடு நிறுத்தினார். தினசரி  நாட்காட்டிகளில் அச்சிடப்பட்டுள்ள உருவங்கள் என்று துவங்கி, குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தங்களைக் கூட மைபூசி அழித்து வைக்குமளவிற்கு அவரது பக்தி முற்றியது. அவரது அதிதீவிர செயல்பாடு அவரை எங்கள் வட்டார தப்லீக் ஜமாஅத்தின் பொறுப்புதாரியாக உயர்த்தியது. இதனிடையே என்னைப்பற்றிய செய்தி  அவருக்கு காற்றுவாக்கில் செல்ல, இவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக என்னுடன் இருந்த நெருக்கம் படிப்படியாக குறையத் துவங்கியிருந்தது.

சில ஆண்டுகளில், அந்த பெண் குழந்தை எட்டாம்  வகுப்பு துவக்கத்தில் பெரியவளானாள். மீண்டும் பிரச்சினை ஆரம்பமானது; பள்ளிப்படிப்பை நிறுத்தியே ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார். மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கினேன்.

”அவள் தினமும் ஐவேளைத் தொழுகிறாள், நீ சொல்வதைப் போல பள்ளிக்கூட வீட்டுப்பாடங்களியெல்லாம் விட்டுவிட்டு தஃலீம் தொகுப்பைப் படிக்கிறாள், குர்ஆன்  ஓதுகிறாள், நின்றால் துஆ, நடந்தால் துஆ என்று எல்லாவற்றையும் ஓதிக்கிட்டுதான் இருக்கிறாள் இன்னும் அவள் என்னதான்… செய்ய வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிற?” என்றேன்.

”அவள் பெரியவளாகிவிட்டாள், இனி அவளுக்குரிய ஒழுக்கங்களை பின்பற்றி நடக்கனும்!”

“… …!?”

“மதரஸாவிற்கு அனுப்பினால் அவர்கள், தீன் பற்றிய கல்வியை முழுமையாக கற்றுக் கொடுத்துவிடுவார்கள்!”

“மதரஸாவிற்கு போகதவங்க எல்லாம் ஒழுக்கக் கேடாகவா நடக்கறாங்களா? உங்க அம்மாகூட மதரஸாவுக்குப் போனதில்லை ஒழுக்கக் கேடாகவா இருக்காங்க?” என்றேன்.

இந்தக் கேள்வி நண்பரைக் சற்று குத்திவிட்டது.

“இங்க பாரு… என் மகளை எப்படி வளர்த்தனுங்கிறதுக்கு அடுத்தவன் எவனும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டியதில்லை!” என்றார் முகத்தில் அடித்ததைப்போல,

மதக் கொள்கைகளின் மீது கொண்ட மூடத்தனமான பற்று,  ஒரு நொடியில், நட்பு, உறவு என்று அனைத்தையும் தூக்கி எறியச் செய்துவிட்டது. எனது தன்மானம் சூடேறியது. இனிபேசிப் பயனில்லை என்று எழுந்தேன். திரைக்குப் பின்னால் இருந்த அவரது மனைவி, 

”அண்ணா… தயவு செய்து போகதீங்க…! அவருக்காக நான் மன்னிப்புகேட்கிறேன்” என்றார் தழுதழுத்த குரலில்

தவறாகப் பேசிவிட்டதை எனது நண்பர் உணர்ந்ததாகத் தோன்றியது. அமைதியாக இருந்தார்.

”உன் மகளைப் படிக்கவை! அவ… வேலைக்கு போகலைனாலும் நாளைக்கு அவளுக்கென்று ஒரு குடும்பமாகும் பொழுது குழந்தைகளுக்காவது பாடம் சொல்லிக் கொடுக்கவாவது உதவும் தயவு செய்து படிக்கவை!” என்றேன்.

”சரி.. அவளை ஸ்கூலுக்கு அனுப்பறேன்… ஆனால் ஒரு… கண்டிஷன்!”

”என்ன..கண்டிஷன்..?”

“அவள் முகத்தை மூடி புர்க்கா போட்டு கோஷா முறையிலதான் ஸ்கூலுக்குப் போகனும். ஸ்கூல்ல இருந்த வந்தவுடன் தினமும் ஒரு மணிநேரமாவது மஃரிபுக்குப் பிறகு தஃலீம் சத்தமாக படிக்கனும் அத வீட்ல இருக்கற மத்தவங்க எல்லோரும் கேட்கணும்!” என்றான்.

“ஸ்கூல்ல கொடுக்க்ற வீட்டுப்பாடங்களை படிக்கவும், எழுதவும் வேண்டாமா…?”

”அதைபத்தின கவலை எனக்கில்ல…!”

“… …!?”

”இனி அவ அந்நிய ஆண்கள் முன்னால் முகத்தை மறைக்காமல் வரக்கூடது!”

”என் முன்னாலும் அப்படித்தானா…?”

“ஆமாம்!”

“டேய்… எனக்கு அவ.. மகள் மாதிரி!”

“நீ எப்படி நினைக்கிறேங்கிறத பத்தின கவலை எனக்கில்லை. ஆனால் நான் என் மகளை மஹ்ரமாக வளர்த்த விரும்பறேன், கோஷா முறையில் வளரணும்!” என்றார்.

செய்வதறியாது அந்தப் பெண்குழந்தை பரிதாபமாக என்னைப் பார்த்தது. அவரது மனைவிடமிருந்து விசும்பல் சத்தம் மட்டும் வெளிப்பட்டுக் கொண்டிருக்க, நான் ஒன்றும் பேசாமல் வெளியேறினேன்.

மறுநாள், தனது வகுப்புத் தோழிகளுக்கு மத்தியில் கறுத்த ஆடையால் உடல், முகம் என்று அனைத்தையும் மறைத்தவாறு அந்த சின்னஞ்சிறிய பெண் குழந்தை பள்ளிகூட புத்தக மூட்டையை சுமந்து கொண்டு செல்வதைப் பார்த்தேன். எல்லாம் தெரிந்திருந்தும் என்னால் தடுக்க முடியவில்லையே என்ற வேதனை என்னைப் பிடுங்கித் தின்றுகொண்டிருந்தது. மனது கேட்காமல் பின்தொடர்ந்து சென்று அவளிடம்,



“ஏம்மா.. உனக்கு இப்படிப் போறது சிரமமாக இல்லையா? நான் உங்க வாப்பாகிட்ட மறுபடியும் பேசறேன்!” என்றேன்.

“வேண்டாம்… மாமா…! நான் நிறைய படிக்கணும் அதுக்கு ஹெல்ப் பண்ணுங்க...! அதுக்காக எந்த கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை…!” என்ற பொழுது, நிகாப்பிற்கு இடையே தெரிந்த விழிகளில் நீர் தேங்கி நிற்பதை என்னால் காண முடிந்தது.


இன்றும் அந்த விழிகள் நினைவிற்கும் வரும் பொழுது நிலைகுலைந்து போகிறேன்.

தனது மகள் உண்மையாகவே முகத்தை மறைத்துக் கொண்டுதான் செல்கிறாளா? அல்லது நடிக்கிறாளா? என்பதை அவளை அறியாமல் பின் தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது, பள்ளிப் பாடங்களைப் படிக்கவிடாமல், இஸ்லாமியப் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்த பின்னர் மட்டுமே பள்ளிப்பாடங்களை படிக்க அனுமதிப்பது; அவ்வாறு பள்ளிப்பாடங்கள் படித்துக் கொண்டிருக்கையில் இடையில் புகுந்து வேறு எதையாவது துஆக்களை அல்லது குர்ஆனின் அத்தியாயங்களை ஓதச் சொல்லி நச்சரிப்பது என தப்லீக்வாதியின் செயல்பாடுகள் தொடர்ந்து  கேவலமானது. அவரது திட்டம் என்னவாக இருந்தது என்றால், அவளுக்கு பள்ளிக்கூட கல்வியில் நாட்டமில்லை என்பதாகக் காண்பிக்க வேண்டுமென்பதுதான். இவரது மதவெறி மற்றும் இயக்கவெறிபாடுகள் காரணமாக அந்தத் தம்பதிகளுக்கிடயே மோதலும்,  விரிசலும் வளர்ந்து கொண்டேயிருந்தது.

ஒரு நாள், நான் அலுவலகத்திற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த பொழுது, தப்லீக்வாதியின் மனைவி அவசர அவசரமாக எனது வீட்டிற்கு வந்தார். ஏதோ பிரச்சினை என்பதுமட்டும் புரிந்தது.

”என்னாலதானே இத்தனை பிரச்சினை, பேசாம நான் தற்கொலை செய்யட்டுமான்னு? என் மகள் கேட்கிறாள்” என்று சொல்லும் பொழுதே அவர் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். நான் அதிரிச்சியில் அமைதியாக இருந்தேன். என் துணையார், அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

“இதை நீங்க உங்க கணவரிடம் சொல்ல வேண்டியதுதானே?” என்றேன்

“சொன்னேன்…!”

“… …!?”

“எனக்கு ரஸூலோட ’தீன்’ மட்டுதான் முக்கியம் அத பின்பற்ற விரும்பலைனா அப்படியொரு மகளே எனக்கு வேண்டாம் செத்துத் தொலையட்டும்னு… சொல்லறாரு..!” என்று மீண்டும் அழத்துவங்கினார்.

பிறகு அந்தச் சிறுமியை அழைத்து, சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடவேண்டுமென்று அறிவுரை கூறி தேற்றினேன்.

இதற்கிடையில் தப்லீக்வாதி நாற்பது நாட்கள் ஜமாஅத் சென்றுவிட்டார். நாட்கள் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது அவர் திரும்பிவரும்வரையில். ஜமாஅத்திலிருந்து திரும்பியதும் அவருக்கு இன்னும் வேகம் அதிகரித்திருந்தது. நாற்பது நாட்களும் அவருக்கு நன்றாக வெறியேற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் அதே பிரச்சினை, இம்முறை அவரது மற்ற குழந்தைகளின் கல்வியும் சேர்ந்து கேள்விக் குறியானது. படித்தது போதும், எட்டு வயதான தனது மகனுக்கு குர்ஆனை மனனம் செய்து ஹாஃபிஸ் ஆக்கவேண்டுமென்ற திட்டமும் சேர்ந்து கொண்டது. மகனின் கல்விக்கும் ஆபத்து வந்ததைக் கண்ட நண்பரின் மனைவி ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போனார். அவர்களுக்கிடையே கருத்துவேற்பாடு மேலும் தீவிரமானது.

”அவன் படித்தது போதும் ஹாஃபிஸ் கல்விக்கு இதுதான் ஏற்ற வயது உடனே மதரஸாவில் சேர்க்க வேண்டும்!” என்று மீண்டும் பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார்.

எங்களுக்கிடையே நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இஸ்லாம் மீதான விமர்சனங்கள்,  நட்பில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. தப்லீக்வாதியிடம், எனது அறிவுரைகள் எடுபடாது என்று தோன்றியது. எனவே இம்முறை, நான் எனக்குத் தெரிந்த, கல்வியை ஆதரிக்கக்கூடிய ஆலீம்களின் உதவியை நாடினேன்.

“நீங்க எல்லோரும் அவங்க குழந்தைகளை டாக்டரக்கனும் இன்ஜினியராக்கனும்னு ஆசைப்படறீங்க நான் ஹாஃபிஸ் ஆக்கணும்னு ஆசைப்படறேன் இதில் என்ன தப்பு இருக்கு?” என்றார்.

”உங்கள் குழந்தைகளை குறைந்தபட்ச கல்வியை அதாவது பத்தாம் வகுப்புவரைக்குமாவது படிக்க வையுங்க!” என்றார் ஒரு ஆலீம்

“மறுமை வாழ்க்கைக்கு எந்த பயனும்தராத உலகக் கல்வியை உங்களை மாதிரி உலமாக்களே ஆதரிக்கிறது சரியில்லை!” என்று அவர்களைத் திருப்பி மடக்கிவிட்டார்.

“நாளைக்கு டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் மாதிரி விஷயங்களுக்காவது உதவும். அதனால பத்தாவது வரையாவது படிக்க வையுங்க” என்றார் இன்னொரு ஆலீம்.

”குர்ஆனை மனனம் செய்வதற்குரிய மனநிலையும், ஆர்வமும் அந்தக் குழந்தைக்கு இருக்க வேண்டும். ஆர்வமில்லாமல் வலுக்கட்டாயமாக ஹாஃபிஸ் கல்வியை ஒருவருக்குள் நுழைக்க முடியாது!”  என்றனர்.

வேறுவழியில்லாததால், தப்லீக்வாதி, மகனின் கல்விபற்றிய முடிவை தள்ளிவிவைத்திருக்கிறார். ஆனால் பெண் குழந்தையில் கல்வியை பத்தாம் வகுப்புடன் முடித்துக் கொள்வதாகவும் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். பெண்களுக்கு அந்த அளவிளான கல்வி போதுமென்பது அவரின் முடிவு!

இதற்கிடையில் எனது பணி காரணமாக சில மாதங்கள் வேறு இடத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தப்லீக் நண்பர் ஒரு சொற்பத் தொகையை குடும்ப செலவிற்குக் கொடுத்துவிட்டு மீண்டும், நான்கு மாதம் பத்து நாட்கள் ஜமாஅத்திற்கு சென்றுவிட்டார். குடும்பம் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தது.

இப்படியொரு கொடுமையை அந்த அப்பாவிப் பெண் எதற்காகப் பொறுத்திருக்க வேண்டும்? பிடிக்கவில்லையெனில் விவாகரத்தை நாடியிருக்கலாமே? என்று உங்களுக்குத் தோன்றலாம். மிகப் பெரும்பாலும் பெண்கள் அமைதியாக இருப்பது குழந்தைகளுக்காக மட்டுமே! அதிலும் இந்தக் கேடுகெட்ட இஸ்லாமில், விவாகரத்து போன்ற சூழலில் குழந்தைகள் தந்தையின் பொறுப்பில் மட்டுமே ஒப்படைக்கப்படுவார்கள். தாய் குழந்தைகளை நினைத்து ஏங்கியேங்கி சாக வேண்டியதுதான்.

இவ்விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கையை என்னால் எளிதாக மேற்கொள்ள முடியும். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென்ற அந்தத் தாயின் வேண்டுகோள் காரணமாக, தப்லீக் ஜமாஅத்தின் மாவட்ட அளவிளான பொறுப்புதாரியைச் சந்தித்து முறையிடுவதென்று முடிவு செய்தேன். தப்லீக் ஜமாஅத்தின் மாவட்ட அளவிலான பொறுப்புதாரியிடம், எனது நண்பரின் செயல்பாடுகளை விவரித்தேன். இன்றுவரை அவரிடமிருந்து உருப்படியான எந்த பதிலும் கிடைக்கவில்லை. காரணம், மார்க்கக் கல்வி மட்டுமே முதன்மையானது. உலகக் கல்வி அவரவர் விருப்பத்தை பொறுத்தது என்பதே தப்லீக் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

அந்தச் சிறுமி, இந்த வருடம்  பத்தாம் வகுப்பு தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறாள்…


இனி…அவளது கல்வி..?



இஸ்லாம் பெண்களை எப்படிக் கையாளுகிறது என்பதற்கு இது ஒரு நடைமுறை உதாரணம்.  குறிப்பாக இஸ்லாமில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்?

நான் இப்படியொரு கேள்வியை கேட்ப்பதற்கு முன்பாகவே, இஸ்லாம் கல்வியை ஊக்குவிக்கிறது, ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லையென இதோ சில இஸ்லாமிய தளங்கள் துள்ளிக் குதித்து வருகின்றன.  அவர்களின் விளக்கங்களை விரிவாகப் படிக்க விரும்புபவர்களுக்காக தளங்களின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். எங்களால் அங்கேயெல்லாம் போய்ப் படிக்க முடியாது, நீங்களே சுருக்கமாகக் கூறிவிடுங்கள் என்பவர்களுக்காக,

இஸ்லாம், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ஏனெனில், அது அறிவினதும் இறைத் தூதினதும் அடிப்படையில் உறுதியாக கட்டி எழுபப்பட்ட ஓர் இறை மார்க்கமாகும்…

(“இக்ரஃ”) என்னும் ஓதுவீராக!என்ற வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் நிறைந்த கருத்தின் அடிப்படையில் உலகத்தில் வாழும் மனித சமூகத்தின் பண்பாடுகள், கலாச்சாரங்கள் ,அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள், மனித வாழ்க்கையின் வட்டத்திற்குள் ஹராம், ஹலால் பேணவேண்டிய வடிவமைப்புக்கள் இது போன்று உலக ஆரம்பம் முதல் முடிவு வரை "ஓதுவீராக!" என்ற வார்த்தையின் மூலமே அமையப்பெற்றது. இது தான் கல்வியின் முக்கியத்துவத்திற்கு வரைவிலக்கணம். …

கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது... அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...!!!!!

…பெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக இயம்பிக் கொண்டு இருக்கிறது. இச்செய்தியை அறியாதவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். இன்று முஸ்லிம் பெண்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றால் தலாக், வரதட்சணை கொடுமை, அடக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ சுமைகளை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளிலிருந்து விடுபட்டு நம் நியாயமான கோரிக்கைகளைப் பெற கல்வி மிக மிக அவசியமானதாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் இஸ்லாமியர்களே அல்லர். பெயர் தாங்கி முஸ்லீம்கள்; தங்களது சொந்தச் சரக்குகளையெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் விற்பனை செய்பவர்கள்.




2012 அக்டோபர் 9-ம் நாள் மலாலா என்ற சிறுமி, மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புகையில், பள்ளிக்கூட வாகனத்தில் வைத்து, இஸ்லாமியத் தீவிரவாதிகளான தலீபான்களால் சுடப்பட்டார்.


மலாலா செய்த தவறு என்ன?


பெண்கள் கல்விக்காகவும், அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக குரல் உயர்த்தியதும் தான்!


நாம் மேலே கண்ட இஸ்லாமிய தளங்கள் பெண் கல்விக்காக குரல் கொடுக்கின்றனர். குர்ஆனும் ஹதீஸ்களும் கல்வியை குறிப்பாக பெண்கள் கல்வியை வலியுறுத்துகிறது என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றன.  இந்த இஸ்லாமிய தளங்கள் மட்டுமல்ல எந்த ஒரு இஸ்லாமிய ஊடகமும் மலாலவை ஆதரித்து அவரது பெயரைக்கூட  உச்சரிக்க மாட்டார்கள் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?



சிறுமி மலாலாவும் பெண்களின்  கல்விக்காக குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்காத்தானே குரல் கொடுத்தார்?


தொடரும்…


தஜ்ஜால்


Thursday 10 March 2016

ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -5

கடந்த பதிவில் மனம் –உள்ளம் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

மனம், உள்ளம் என்று அழைப்பதும்  இரக்கம், அன்பு, ஆசை, கோபம், வெறி, ஏக்கம், காமம், காதல்…. இன்னும் அனைத்து உணர்வுகளும் நிகழ்வதெல்லாம் மூளையில்தான். அதில் பதிந்துள்ள நினைவுகளையும், சிந்தனைகளையும் மனம், மனசாட்சி, உள்ளம் என்று அழைக்கிறோம்.  அன்றைய மக்கள் இவற்றை அறிந்திருக்கவில்லை; அவர்களின் காலத்து அறிவியலின் வளர்ச்சி அவ்வளவுதான்! அன்றைய புராண காலத்து மனிதர்கள் இவை அனைத்தும் இதயத்தில் நிகழ்வதாகக் கருதினர். காரணம் அவர்களது சிந்தனை தவறாக இருந்ததுதான். இதன் பதிவுகளை, பாதிப்பை நமது மொழிகள் அனைத்திலும் இன்றும் காணமுடியும்!

உதாரணத்திற்கு, அன்றைய சிறந்த நாகரீகமாக சமுதாயமாகக் கருத்தப்படும் எகிப்திய மக்களிடையே இறந்தவர்கள் என்றேனும் உயிர்த்தெழக் கூடுமென்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு வசதியாக உடல்களைப் ’மம்மி’களாகப் பதப்படுத்தி வைத்தனர் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு உடலைப் பதப்படுத்தும் பொழுது குடல், ஈரல், இதயம் போன்ற உறுப்புகளை எடுத்து தனித்தனியாக ஜாடிகளில் அடைத்து வைத்தனர். அந்த உடலுக்குரியவர் திரும்ப உயிர்த்தெழும் பொழுது தேவைப்படும் என்ற நோக்கில் அவ்வாறு செய்தனர். ஆனால் தேவையற்ற உறுப்பாகக் கருதி மூளையை குடைந்து நீக்கி வீசி எறிந்து விடுவார்கள்.





இனி நாம் குர்ஆன் ஹதீஸ்களுக்கு வருவோம்.  முஹம்மதுவின் சிறுவயதிலும், விண்வெளிப்பயணத்திற்கு முன்பாகவும் தனது நெஞ்சம் பிளக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதாகவும் ஹதீஸ்களில் கூறுகிறார்.  அல்லாஹ்வைச் சந்திக்க உடலுடன் செல்ல வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லையென்று கருதும் இஸ்லாமின் சில குழுக்கள் முஹம்மதின் விண்வெளிப்பயணம் முழுவதுமே ஒரு கனவு போன்றது, அதாவது ஆன்மீக, ஆத்மீக முறையிலான பயணம் அதை உடல்ரீதியான பயணமாக கருதக்கூடாது என்கிறது. அண்ணன் பீஜே போன்ற குழுவினர்கள், தூதர் முஹம்மது விண்வெளிப்பணம் சென்றது உண்மைதான் ஆனால் பயணத்திற்கு முன்பாக செய்யப்பட்ட நெஞ்சத்தை பிளந்து, ஈமான், ஹிக்மத் போன்ற பொருட்களால்(!?) அவரது நெஞ்சம்   நிரப்பப்பட்டதாக கூறுவது ஒரு கனவு போன்றது என்கின்றனர். ஏனெனில் ஈமான் என்ற நம்பிக்கையும் ஹிக்மத் என்ற நுண்ணறிவும் பொருட்களல்ல என்பது அவர்களது வாதம். பாரம்பரீய சுன்னத் ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் தூதரது விண்வெளிப்பயணம் தொடர்பான ஹதீஸ்கள் கனவோ கற்பனையோ அல்ல! அனைத்துமே நிஜம்தான் என்கின்றனர்.  தூதர் முஹம்மது விண்வெளிப் பயணம் செய்விக்கப்பட்டார் என்ற ஒரே செய்திக்கு மாறுபட்ட விளக்கங்கள் உருவாது ஏன்? 

ஹதீஸ்கள் கூறும் செய்தி சராசரி அறிவிற்குக்கூட பொருந்தாமல் போகும் பொழுது பாவம்! அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இறுதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.

தூதர் முஹம்மதிற்கு, மருத்துவர் ஜிப்ரீல் மேற்கொண்ட ஈமான், மற்றும் ஹிக்மத் குறைப்பாடு நீக்க அறுவை சிகிச்சை கனவா அல்லது உண்மைதானா?  இதோ ஒரு நேரடி சாட்சியம்!

முஸ்லீம் 261
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர் களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள்…..
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஹதீஸ் அறிவிப்பாளரும், தூதர் முஹம்மதின் உறவினருமான அனஸ் என்பவர், முஹம்மது நெஞ்சத்தில் ஊசியால் தைக்கப்பட்ட அந்த அடையாளத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார். அண்ணன் பீஜே கூறுவதைப் போல, இருதய அறுவை சிகிச்சை, ஈமான் மற்றும் ஹிக்மத் நிரப்பல்கள் கனவல்ல நிஜம்தான்!

தூதர் முஹம்மது, சிந்தனை மையமாக, மனித உள்ளத்தின் இருப்பிடமாகக் கருதியது மார்புக் கூட்டிற்குள் இருக்கும், உடலுக்குள் இரத்ததை விநியோகிக்கும் இதயத்தைதான் என்பதை வலியுறுத்திக் கூறும் இன்னொரு ஹதீஸ்.

முஸ்லீம் 5011
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகச் சற்று கூடுதல் குறைவுடன் இடம்பெற்றுள்ளது.
அதில், "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே (qulubikum) பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை(sadrih). நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அண்ணன் பீஜே கூறுவதை போல  ’qalb-இதயம்’ என்பதை சிந்தனை மையம் என்ற பொருளில் பயன்படுத்தியிருந்தாலும், அந்த qulubikum என்ற உள்ளங்கள் sadrih என்ற மார்புக்கூட்டிற்குள் இருப்பதாகக் கூறும் தூதர் முஹம்மதின் செயல் முறைவிளக்கங்கள், அதன் சாட்சிகளாக இருக்கும் துணை ஆதரங்கள் அனைத்துமே அன்றைய மக்களின் அறியாமையை அப்பட்டமாகப் பறைசாற்றுவதுடன்,  அண்ணன் பீஜே அளவற்ற முழம் போடுகிறார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி மார்பெலும்புகளுக்கு மத்தியிலுள்ள இதயத்தின் பணி என்னவென்பது மனிதனைப் படைத்த அல்லாஹ்விற்குத் தெரியும். முஹம்மது பொய்யுரைப்பவர் அல்ல!  எதிரிகளாலும் புகழப்படும் அளவிற்கு நேர்மையாளர் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைதான். இங்கு இந்த இரண்டில் ஒன்று அல்ல இரண்டுமே, சிறிதுகூட உண்மை கலக்காத பச்சைப் பொய்கள்!

மேற்கண்ட ஹதீஸ்களை நிரகரிக்க அண்ணன் பீஜே உடனடியாகத் தயாராக வேண்டும். அறிவிப்பளர் வரிசையில் கோணல் இல்லை, அறிவிப்பாளர்கள் தரத்தில் குறைகள் இல்லை. குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள அதே பதங்கள் அதே பொருளில் இருக்கின்றன ஆனால் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும்!  இதற்காக த.த.முல்லாக்கள் பெரிதாக வருத்தப்படத் தேவையில்லை; ஏனெனில் ஹதீஸ்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்க  அண்ணன் பீஜே ஏற்கெனவே அடித்தளம் அமைத்து கொடுத்துவிட்டார்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹதீஸையும் அனைத்து நபித்தோழர்களும் அறிவிக்கவில்லை. விரல் விட்டு எண்ணப்படும் சில ஹதீஸ்கள் அதிகபட்சம் ஐம்பது நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஹதீஸ்கள் யாவும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று நபித்தோழர்கள் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதற்கு ஒருவர் அல்லது இருவர் தான் சாட்சி கூறுகிறார்….
…ஹதீஸ்களைப் பொருத்தவரை ஓரிரு நபித்தோழர்கள் தான் அறிவித்துள்ளனர். நபித்தோழர் இப்படிச் சொன்னார் என்று அறிவிப்பதும் ஓரிருவர் தான். நூலாகத் தொகுக்கப்படும் காலம் வரை ஒருவரில் இருந்து ஒருவர் என்ற அடிப்படையில் தான் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டன…

த.த.ஜ முல்லாக்களே…..!  ஸ்டார்ட் மியூசிக்!!!

(ஹதீஸ்களை மறுக்கலாம்  அது கைவந்த கலை! ஆனால் குர்ஆனை என்ன செய்வது?)

இல்லாத பொருளைக்கூறி குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்படுகிறது என்று முஹம்மதிற்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து இட்டுக் கட்டப்பட்டவை என்ற நிலைக்குச் சென்றவர்கள், அகராதிகளிலும் அரபு இலக்கியங்களிலும் ’கல்ப்' என்ற பதத்திற்கு ’மூளை’ என்ற நேரடியான பொருள் இருக்கிறதென்று வாதிடும் சந்தர்பவாதிகள், முஹம்மதிற்கு நெஞ்சு பிளக்கப்பட்டதாக கூறப்படும் ஹதீஸ்கள், குர்ஆனுக்கு இவர்கள் கூறும் பொருளுக்கு நேடியாக முரண்படுகிறது என்பதை அறியவில்லை என்பது ஆச்சரியம்தான். இஸ்லாமிய மக்களின் அறியாமையை இந்த முல்லாக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


முஹம்மதுவின் நெஞ்சத்தைப் பிளந்து,  இருதயத்தை வெளியில் எடுத்து அதைக் கழுவி சுத்தம் செய்து ஈமானையும் ஹிக்மத்தையும் அதனுள் நிரப்பியவர் யார்? எதார்த்த உண்மைக்கு எதிராக, அடிப்படை உடற்கூறுகளுக்கு முற்றிலும் புறம்பாக, இப்படியொரு அர்த்தமற்ற காட்சி முஹம்மதிற்குத் தோன்றியது எவ்வாறு? குர்ஆன் ஹதீஸ்களில், கிடைக்கின்ற சந்து பொந்துகளில் அறிவியலைத் திருகி ஏற்றும் முல்லாக்களுக்கு இதற்கு பதில் சொல்லும் திறன் இருக்கிறதா?

அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்றதாகவும், ஜிப்ரீல், மலக்குகள், இப்லீஸ், ஜின்கள், ஷைத்தான்களைக் கண்டதாகவும், அவர்களுடன் உரையாடியதாகவும் கூறிக் கொண்ட தூதர் முஹம்மதின் மனநிலையை உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும், இதற்கும் என்ன தொடர்பு இவைகளை இங்கு எதற்காக விவாதிக்க வேண்டுமென்று உங்களுத் தோன்றலாம். மதத்திற்குள் பகுத்தறிவு சிந்தனையை நுழைந்தால், மதநம்பிக்கைகளை அது எவ்வாறு வேறுடன் பிடுங்கி எறிந்துவிடும் என்பதை விளக்கவே இதை இங்கு கூறுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது அவற்றை வரும் பதிவுகளில் நாம் கவனிக்கலாம். அண்ணன் பீஜேவின் ஸிஹ்ர் பற்றிய முடிவும் இத்தகையதுதான்! முஃமின்கள் சிந்திக்கட்டும்!

மீண்டும் பழைய கேள்வி

நோய், மறதி, மனநிலை பாதிப்பு, பைத்தியம் உட்பட அனைத்து தீமைகளும் ஏற்படுவது எதனால்? இதில் ஷைத்தானின் பங்காளிப்பு என்ன?

83. பைத்தியத்திற்குஷைத்தான்காரணமா?
தீயகாரியங்களைப் பற்றிக் கூறும் போது 'ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்டபோது 'ஷைத்தான் இவ்வாறு செய்துவிட்டானே' எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41). இதனால் நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது.

கெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அதுபோல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

“ஜின்களும் ஷைத்தான்களும்” என்ற புத்தகத்திலிருந்து…
"நாம் அப்பாறையில் இளைப்பாறிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார். (அல் குர்ஆன் 18:63)
மறதி உட்பட எல்லாத் தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
... நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளவுகூச(ட) ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானுக்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.

இவ்விளக்கம் தன்னுடைய சொந்தக் கருத்தல்ல. குர்ஆனின் அடிப்படையில்தான் தான் இவ்வாறு விளக்குவதாக பின்வரும் குர்ஆன் வசனத்தை மேற்கோள் காண்பிக்கிறார் அண்ணன் பீஜே.

"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.  (அல் குர்ஆன் 48:11)

குர்ஆனின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படுகின்ற வறுமை, பட்டினிச் சாவுகள், சுரண்டல்கள், கொள்ளை நோய்கள், உடல் ஊனம், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்ச்சி, …., …, போன்ற அனைத்து தீமைகளும் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது மரியாதை நிமித்தமாகவே தீமைகள் ஷைத்தானுடன் இணைக்கப்படுகிறது என்பது அண்ணன் பீஜேவின் விளக்கம் மட்டுமல்ல இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கையும் அதுதான். அப்படியானால் முஃமின்கள் அல்லாஹ்வின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

இந்த விளக்கத்தை ஸிஹ்ர் என்ற சூனியக் கலைக்கு பொருத்திப் பார்ப்போம்!

உதாரணத்திற்கு, ஒருவர் மற்றொருவருக்கு தீமையை நாடி ஜின்– ஷைத்தான்களுக்கு அல்லது வேறு கடவுள்களுக்கு அல்லது வேறு தீய சக்திகளுக்கு வழிபாடு செய்கிறார் எனில், அவரது நோக்கம் நிறைவேறுவது அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. அதாவது அந்த நபரை அல்லாஹ் வழிகெடுக்க நாடியிருந்தால் அவரது செயலை அவருக்கு அழகாகக் (Q 2:212, 6:108,122,137) காண்பித்து, அவரது நோக்கத்தை நிறைவேற்றி வழிகெடுக்கிறான். வழக்கம்போல அப்பழி (Q 6:43, 8:48) ஷைத்தானுக்கு வழங்கப்படும். எனவே இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும், அண்ணன் பீஜேவின் விளங்களின் அடிப்படையிலும் ஸிஹ்ர்-பில்லி-சூனியத்திற்கு ஆற்றலில்லை என்று கூற முடியாது! ஏனெனில் ஸிஹ்ரின் வெற்றி தோல்வி அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்து அமைகிறது. மேலும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி, அல்லாஹ்வின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமென்று வரையறுப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் ஸிஹ்ர்-பில்லி-சூனியம் உண்மைதான் என்பதையும், இவ்வாறு நம்பிக்கை கொள்வது இணைவைத்தல் அல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்!

நாம் மீண்டும் இத்தொடரின் முதல் பகுதியின் வாசித்த முஹம்மதிற்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும்  ஹதீஸிற்குச் செல்வோம். (ஏற்கெனவே படித்ததுதான் மீண்டும் படிக்க வேண்டுமா? என்று சோம்பலாக உணர்பவர்கள் கொட்டை எழுத்துக்களில் அடிக்கோடிட்ட பகுதியை மட்டும் படித்துக் கொள்ளவும்)

புகாரி ஹதீஸ் 5765
ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.
நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்.

நாம் இதுவரை கண்ட விளக்கங்களின் படி, அல்லாஹ், ஷைத்தானின் பெயரில் நபிமார்கள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் நோயையும், மறதியையும் இன்னும் இதர தீமைகளை ஏற்படுகிறான். முஹம்மதிற்கு அவ்வாறு மறதி ஏற்படுத்த முடியாது என்பதற்கு எவ்வித ஆதரமுமில்லை. மாறாக அவருக்கு மறதி இருந்ததாகக் கூறும் ஹதீஸ்கள்தான் இருக்கிறது.

அல்லாஹ் ஒருவனை வழிகெடுக்க நாடினால், அவனது செயலை ஷைத்தானின் பெயரால் அழகாக்கிக் காண்பிக்கிறான் என்பதை கவனித்தோம். இந்த ஹதீஸில் கூறப்படும் 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்ற  நயவஞ்சகருக்கு (அதென்ன நயவஞ்சக’ருக்கு’? எங்கள் கண்ணுமணி பொன்னுமணி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லத்திற்கு சூனியம் வைத்தவனுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு? நயவஞ்சகனுக்குன்னு திருத்தி படிங்க!) சூனியம் என்ற அவனது செயலை எவ்வாறு அழகாக்கிக் காண்பிப்பது? சரியாகச் சொன்னீர்கள்!  லபீத் இப்னு அஃஸம் என்ற யூதனின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், அதாவது முஹம்மதிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவனது செயலை அழகாக்கிக் காண்பித்து அவனை இங்கு அல்லாஹ் வழிதவறச் செய்திருக்கிறான். முஹம்மதிற்கு சூனியம் பலித்ததும் இவ்வாறுதான்!

ஸிஹ்ர் பற்றி த.த.ஜ தரப்பில் இரண்டாவதாகச் சொல்வது என்ன?

ஸிஹ்ர் உண்மையில்லை. அதற்கு எந்த ஆற்றலுமில்லை பலிக்காது. ஸிஹ்ர் பொய்யென்பதற்கு அண்ணன் பீஜே அவர்களே வாழும் ஆதாரமாக இருக்கிறார்.

ஸிஹ்ர் உண்மையில்லையெனில் பிராத்தனைகளும் உண்மையில்லை!  எப்படி?

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.
….சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம், யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…

ஸிஹ்ர்-பில்லி சூனியம் என்பதும் ஒரு வகைப் பிரார்த்தனைதான். சூனியக்காரர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்கள் என்பது அவர்களது நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக்கும். எனவே அண்ணன் பீஜே கூறும் இதே தர்க்கத்தை அல்லாஹ்வை வணங்கிக் கேட்கப்படும் பிரார்த்தனைகளுக்கும் பொருத்துவதுதான் முறை!

உடல் ஊனமுற்ற ஒருவர், விபத்தினால் ஒரு காலை இழந்தவர் அல்லது பிறவியிலேயே ஒருகால் ஊனமுற்றவர் என்று வைத்துக் கொள்வோம், அவர் வருடம் 365 நாட்களும், காலை முதல் இரவுவரை தவறாது அல்லாஹ்வைத் தொழுது, அழுது, புலம்பி துஆ செய்தால் அவரது குறைபாடு நீங்கி, சராசரி மனிதரைப் போல மாற முடியுமா?

தனது குறைபாடு சரியாவதற்கான மருத்துவத்தையோ அல்லது செயல்படுவதற்கான உபகரணங்களை பொருத்திக் கொள்வதால் மட்டுமே அவரால் நடமாடமுடியும்! கடவுளைப் பிரார்த்தனை செய்வதால் ஒன்றும் நிகழப் போவதில்லை! பகுத்தறிவினால் இவர்கள் சூனியத்தை நிராகரித்தால் அதே பகுத்தறிவினால் அல்லாஹ்வையும் நிராகரிக்க வேண்டியிருக்கும்!

முஃமின்களால் இதை ஏற்க முடியாது. பிரார்த்தனைகள் உண்மை அதனால் காரியங்கள் நிறைவேறுகின்றன என்று கூறலாம். சரி… அகோரி மணிகண்டனுடன் ஸிஹ்ர் போட்டியில் வெற்றி வாகை சூடிய அண்ணன் பீஜே, பிரார்த்தனை போட்டிக்குத் தயாரா?   நாம் ஒரு பிரார்த்தனை போட்டி வைப்போம்!  இஸ்லாமை விமர்சித்து கணிணியில் தட்டச்சு செய்யும்  தஜ்ஜாலின் விரல்கள் அழுகி, உதிர்ந்து போகட்டும் என்று துஆச் செய்து பாருங்களேன். தேவை எனில் உலகிலுள்ள அனைத்து நம்பிக்கையாளர்களை இணைத்துக் கொள்ளுங்கள். என்னதான் நிகழ்கிறென்று பார்த்துவிடுவோம்!

ஸிஹ்ரும் உண்மையில்லை எனில் ஷிர்க்கும் உண்மையில்லை!

ஒருவர் தையாவதைக் ஒன்றை கொண்டு அல்லாஹ்விற்கு இணைகற்பித்துவிட்டால் அது அல்லாஹ்விற்கு இணை ஆகிவிடுமா? அல்லாஹ் எப்படி இருப்பான் என்பதே தெரியாது எனும் பொழுது அவனுக்கு எப்படி இணையாக இன்னொன்றை கொண்டுவர முடியும்?

உதாரணத்திற்கு ஒருவர், அல்லாஹ் அல்லாத வேறு கடவுளர்கள் இருக்கிறது  என்று கூறுவதாகக் கொள்வோம்; அப்பொழுது அங்கே பல கடவுள்கள் உருவாகிவிடுமா? அல்லது அவர் அவ்வாறு கூறுவதால் அல்லாஹ்வின் ஆற்றலில் ஏதாவது குறைவு ஏற்படுமா?  

இஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ்விற்கு இணையாக எதுவும் இருக்கவும் முடியாது, யார் என்ன செய்தாலும் அல்லாஹ்வின் ஆற்றலில் எந்தக் குறைவும் ஏற்பாடாது. ஏனெனில் இணைவைப்பவரது கூற்று ஒருபொழுதும் உண்மையில்லை! என்பதுதான் சூரத்துல் இஃக்லாஸ் நமக்குச் சொல்வது. எனவே என்னதான் இணைகற்பித்தாலும் எந்த ஒன்றும் அல்லாஹ்விற்கு இணை ஆக முடியாது!

எனவே, ஸிஹ்ர் எப்படி உண்மையில்லையோ அதைப் போல ஷிர்க் என்ற இணைவைத்தலிலும் உண்மையில்லை!

உண்மையில்லாத இந்த இரண்டு விஷயங்களுமே பெரும் பாவங்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தது ஏன்?

சரி…  அப்படி ஒரே ஒரு கடவுள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் அப்படியென்ன பிடிவாதம்?

குர்ஆன் 21:22
அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

குர்ஆன் 23:91
அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

இரண்டு கடவுள்கள் இருந்தால், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இருவரும் சீரந்திருப்பார்களாம். அவரவர் படைப்புகளை எடுத்துக் கொண்டு, நடுவில் ஒரு கோடு வரைந்து இருவம் தனிக்குடித்தனம் போயிருப்பார்கள். ஒருவரையொரு மிகைத்துக் கொண்டிருப்பார்கள். என்னே... ஒரு லாஜிக்! மெய்சிலிர்க்கிறது!  அல்லாஹ் என்ற கடவுளை இதைவிட எப்படி கேலி செய்வது? இந்த விஷயத்தில் நான் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறேன்!

ஒரு இனக்குழுவிற்கு இரண்டு தலைவர் இருந்தால் என்னவாகும்? அவர்களுக்கிடையே அதிகாரரப் போட்டி ஏற்படும்; அவர்கள் தங்களது அதிகாரத்தில் குறைவு ஏற்பட்டுவிட்டதாக கருதலாம்; மீண்டும் ஒருவருக்கொருவர் மிகைக்க முற்படுவார்கள்; தீராத மோதலில் அந்த இனக்குழுவே சீரழிந்து போகும். இவற்றை கண்டு வளர்ந்த ஒரு இனக்குழு சமூகத்தில் வாழ்ந்த மனிதரால் இதற்குமேல் எப்படி சிந்திக்க முடியும்? 

இந்துமத கடவுளர்களின் கைகளில் வாளும், வில்லும், அம்பும் இன்னும் பழங்கால ஆயுதங்கள் மட்டுமே இருப்பது ஏன்? ஆயுதங்கள் இல்லாமல் கடவுளர்களால் இருக்க முடியாதா? இனக்குழு சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் தங்களது அனுபவங்களை கடவுளர்களுக்கும் பொருத்தியுள்ளனர் என்பதைத் தவிர வேறில்லை!

அன்றைய இனக்குழு சமுதாயத்தை விட்டுவிடுவோம் இன்றைய மக்களாட்சி முறையையே எடுத்துக் கொள்வோம், ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு இரண்டு தலைவர்கள் இருந்தால் என்னவாகும்? ஊடகத்திற்கு பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது.  இதைத்தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது. அண்ணன் பீஜே பாணியில் சொல்ல வேண்டுமென்றால், முரண்பாடு என்று எதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்களோ அதுதான் நிகழ்கால அரசியலை உரைப்பதாக இருக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரால் நிகழ்கால அரசியலை எப்படிச் சொல்ல முடியும்? நிகழ்கால அரசியலை 1400 ஆண்டுகளுக்கு தெள்ளத் தெளிவாகக்கூறி இறைவேதமென்பதை நிரூபிக்கிறது. (எத்தனை நாளைக்கு அறிவியலையே கூறி, புல்லரித்துக் கொண்டிருப்பது அதனால்தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலைக் கூறியிருக்கிறேன்! )

ஆட்சியில் பங்கு கேட்பவரை ஒருபொழுது அல்லாஹ்வும், தூதர் முஹம்மதுவும் விரும்பியதில்லை. இனக்குழு சமுகத்தில் வாழ்ந்த மனிதரால் அவ்வளவுதான் சிந்திக்க முடியும்!

முஸ்லீம் 3774
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.

ஒரு இயக்கத்திற்குள் இரண்டாவது தலைமை உருவானால் என்னவாகும் என்பதை அண்ணன் பீஜேவைவிட நன்கு அறிந்தவர் எவரும் இருக்க முடியாது. அது அவர்களது பிரச்சினை நாம் தலையிட தேவையில்லை.

சரி..!

தவ்ஹீது- ஏகத்துவம் என்றால் என்ன?
ஒருமைப்படுத்துதல். வணக்கத்திற்குத் தகுதியுடையது அல்லாஹுவைத்தவிர வேறெதுவும் இல்லை என்று நம்பிக்கை கொள்வது.

கடவுள் ஒருவனே என்றும் அதற்கு ஏதோ ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு அவனுக்கு இணைகற்பிக்காமலிருந்தால் அல்லாஹ்வின் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது.  

ஏன்?

அல்லாஹ்வின் தூதராக, முஹம்மதை முழுமனதுடன் ஒப்புக் கொள்ளாமல், என்னதான் ஏகத்துவவாதியாக, இஃக்லாஸ்வாதியாக இருந்தும் பயனில்லை. இஸ்லாம் கூறும் ஏகத்துவக் கொள்கை இதுதான்! முஹம்மதை ஒப்புக் கொள்ளாமல் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் ஒருபொழுது முழுமையடையாது!

குர்ஆன் 24:52
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

குர்ஆன் 4:80
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

அல்லாஹ்விடமிருந்து தூதர் முஹம்மதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது! முடியாது!  ஏகத்துவத்தில் முன்னோடிகளாக இருக்கும், யூதர்களும் பாகன் அரபிகளும் முஹம்மதைத் தூதராக ஏற்கவில்லை, அவருக்குத் தேவையானதைக் கொடுக்க மறுத்ததுதான் அங்கு நிகழ்ந்த இரத்தக்களறிகளுக்குக் அடிப்படைக் காரணம்.  ஷிர்க்-இணைகற்பித்தல் பற்றி பேசும் முல்லாக்களின் கண்களில் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்விற்கு இணையாக முஹம்மது இருப்பது தெரியவில்லையா?

மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் பொருள், அல்லாஹ்வை தனது அங்கிப்பைக்குள் வைத்திருக்கும் முஹம்மதுவிற்கு அடிபணியாமல் அல்லாஹ்விற்கு மட்டும் நீங்கள் அடிமையாக இருப்பதால் எவ்வித பயனுமில்லை என்பதே!. ’ஷிர்க்’ பெரும் பாவமாகக் கருதப்பட்டதும் இதன் அடிப்படையில்தான்.  புரியவில்லையா?

அல்லாஹ்விற்கு இணையாக இன்னொரு கடவுள் இருந்து, அந்தக் கடவுளும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக எவனாவது கிளம்பிவிட்டால் முஹம்மதின் முக்கியத்துவம் என்னவாகும் என்பதை சிந்திக்க மாட்டீர்களா? ஷிர்க்–இணைவைத்தல் பெரும் பாவமானது இப்படித்தான்.

இன்னும் நாம், இப்பதிவின் அடிப்படை கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது!

ஸிஹ்ர் எனப்படும் பில்லி-சூனியக் கலை இருக்கிறது, நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றிருந்த த.த.ஜ-வின் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு  மாற்றத்திற்கு காரணம் என்ன?

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்.
…சூனியக்காரனுக்கு ஆற்றல் உண்டு என்றால் அதைச் செய்து காட்டு! நிரூபித்துக் காட்டு என்று நாம் கேட்கிறோம். யாருமே நிரூபித்துக் காட்ட முன்வராவிட்டால் சூனியத்துக்கு ஒரு ஆற்றலும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் திருக்குர்ஆன் அடிப்படையில் எடுக்க வேண்டிய சரியான முடிவாகும்…

முஸ்லிம் பெயர்தாங்கிகளும் சூனியக்காரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆற்றல் இருந்தால் உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களுக்கு சூனியம் வைத்து சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கலாமே?

முஸ்லிம் அல்லாதவர்களிலும் சூனியக்காரர்கள் உள்ளனர் இவர்களை நம் நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்தி யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்தத் தலைவரை ஊமையாக ஆக்கினால் போதுமே? அப்படி ஏதும் நடக்கக் காணோம்.

ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கதைக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிடலாமே?

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே? ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே?

இதுபோன்ற பகுத்தறிவுக் கேள்விகள்தான் அண்ணன் பீஜேவை குர்ஆனும் ஹதீஸ்களும் ஒப்புக்கொள்ளும் ஸிஹ்ர் என்ற பில்லி சூனியத்தை மறுக்கச் செய்திருக்கிறது. என்னதான் இஸ்லாமிய நம்பிக்கையென்றாலும், தூதர் முஹம்மதுவிற்கு சூனியம் பாதித்தது, சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்க முடியும், நோய் உண்டாக்க முடியும் என்றெல்லாம் இன்றைய அறிவார்ந்த சமூகத்தின் முன்னே எப்படி சொல்வது?  என்று தயங்குகின்றனர்.

அதுமட்டுமல்ல பதிலுக்கு நம்மைப் போன்றவர்கள், குர்ஆனும் ஹதீஸ்களும் ஸிஹ்ர் உண்மை என்கிறது, முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கு பில்லி-சூனியம் செய்ய வேண்டியதுதானே? என்று கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இந்த ஸிஹ்ர் மறுப்பு முல்லாக்களைப் பிடித்து உலுக்கிக்  கொண்டிருக்கிறது.

இந்தத் தலைவலிகளிலிருந்து தப்பிக்க அவர்களுக்கிருக்கும் ஒரேவழி ஸிஹ்ரைப் பொய்யென அறிவிப்பதுதான்! ஆனால் அதை முஃமின்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். குர்ஆன் வசனத்தை நிராகரிக்க முடியாது அதனால் ஸிஹ்ர் என்றால் மேஜிக், தந்திரவித்தை, ஜாலவித்தை என்று பொருள் கூறி அல்லாஹ்வை மோடி மஸ்தானாக மாற்றிவிட்டார்; இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிப்பதாக நினைத்துக் கொண்டு ஸிஹ்ர், ஷிர்க், மூஸா, சூனியக்காரர்கள், ஸாமிரி, தஜ்ஜால் (இது வேற… நான் அல்ல!)  என்று எங்கெங்கோ சுற்றி, எதையெதையோ மறுத்து, முஃமினகள் காதுகளில் பூந்தோட்டங்களையும் அமைத்திருக்கிறார்.

பகுத்தறிவின் அடிப்படையில் அவரது முடிவை வரவேற்கும் அதேவேளையில், குருட்டு நம்பிக்கைகளில் நின்று கொண்டு பகுத்தறிவுவாதம் பேசுவதை நினைத்தால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் முழுமையாக பகுத்தறிவின் பக்கம் விரைவில் வருவார். இன்ஷா அல்லாஹ்!(?)

அண்ணன் பீஜே அவர்கள் நிகழ்த்திய சூனியப் போட்டி, முன்வைத்திருக்கும் பகுத்தறிவுக் கேள்விகள் அனைத்துமே ”ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர்” என்ற அறிஞர் முன்வைத்த கேள்விகளின் அடிப்படையில் உருவானவைகள்!  அண்ணன் பீஜே கொடுத்த விளக்கத்திலிருந்து…

சூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே? மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர்களாகவும் மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும் பக்கீர்களாகவும் மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர்.


சரி..! மேற்கண்ட சவால்களை பிரார்த்தனையால் நிகழ்த்த முடியுமா? நிச்சயமாக முடியாது! அப்படி பிரார்த்தனைகளால் முடியுமென்றிருந்தால், உலக இஸ்லாமியர்கள் கதறிக் கதறிக் கேட்ட துஆக்களினால் அமெரிக்காவும், இஸ்ரேலும் என்றோ இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும்! மீண்டும் சொல்கிறேன், ஸிஹ்ர் பொய்யென்றால் பிரார்த்தனைகளும் பொய்தான்!

இதுமட்டுமல்ல இன்னும் ஆயிரமாயிரம் விளக்கங்களை இது போல கொண்டுவர முடியும். ஆனால் இவைகள் பகுத்தறிவின் விளைவினால் ஏற்பட்ட தெளிவே தவிர, ஒருபொழுதும் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்ட விளக்கங்கள் அல்ல!

இவர்கள் தங்களது நாகரீக சிந்தனைகளுக்கேற்ப, குர்ஆன் மற்றும் முஹம்மதின் செயல் முறை விளக்கமான ஹதீஸ்களின் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் தங்களது வியக்கியான தொழிற்சாலைகளுக்குள் நுழைத்து, அவற்றை அடித்து, உடைத்து, நொருக்கி, உருக்கி, தட்டி, வளைத்து, நெளித்து, நிமிர்த்தி புதிய பொருளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் தெளிவான(Q5:15, 22:16, 45:20), விளக்கமான(Q3:118, 39:27), நன்கு விவரிக்கப்பட்ட(Q17:89, 18:54) புத்தகம் என்று அல்லாஹ் கதறிக் கொண்டிருப்பதை முல்லாக்கள் சிறிதேனும் நினைவில் கொள்ள வேண்டும்.  அல்லாஹ்வை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது!

இவர்கள் ஆண்டாண்டு காலத்திற்கு விவாதங்கள் செய்து கொண்டிருப்பதற்குக் காரணம், ”கண்ணேறு என்பது உண்மையே!”  அல்லது ”பறவை சகுணம் இல்லை!” என்றெல்லாம் ஹதீஸ்கள் சொல்வது போல ”ஸிஹ்ர் என்பது பொய்”  “ஸிஹ்ர் உண்மையில்லை” அல்லது ”முஃமின்கள் ஸிஹ்ரை நம்பகூடாது” என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவேயில்லை. மாறாக ஸிஹ்ர் பலித்ததாக கூறும் செய்திகளை பத்திபத்தியாக விவரிக்கிறது.

குர்ஆனும், ஹதீஸ்களும் அன்றய, அரேபியப் பகுதி மக்களின் நம்பிக்கைகளை மட்டுமே பிரதிபளிப்பவைகள். நவீன காலத்து அறிவின் வளர்ச்சிகளை அதில் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. ஆனால் மதபுரோகிதத் தொழிலில் வயிறு வளர்க்கும் கூட்டத்தினரால் இதை ஏற்க முடியாது. அதனால்தான் விளக்கங்கள், விவாதங்களின் மூலம் ’இல்லாத’ கருத்துக்களை ’இருப்பதாக’ நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.

நாம் என்ன கூறினாலும் அண்ணனின் அல்லக் கைகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அண்ணன் பீஜேவின் வாதங்களை முறியடிக்க எவரும் இல்லை என்று தாடியை தடவுவார்கள்(அவர்களது தாடியைத்தான்) அவர்களுக்காக, அண்ணன் பீஜே முத்தாய்ப்பாக வைத்து தனது வாதத்தை முடிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.

அவர் கூறுவதைக் கேளுங்கள்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58) …

என்று ஒரு விளக்கத்தை முன்வைத்து மறுத்திருக்கிறார். ஆனால் அபூபக்ர் ஜஸ்ஸாஸ்  என்பவர், முஃதஸிலா என்ற நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு தனியே விலகிச் சென்ற கூட்டத்தை சார்ந்தவர் என்றும் இவரை ஆதரிப்பதன் மூலம் அண்ணன் பீஜேவும் முஃதஸிலா கூட்டத்தின் இணைந்துவிட்டார் என்று எதிரணி குற்றம் சாட்டுகிறது. அண்ணன் ஷிர்க்கை வைத்து மிரட்டினால் இவர்கள் முஃதஸிலா என்று பதிலுக்கு மிரட்டுகிறார்கள்.

உண்மையிலேயே அண்ணன் பீஜே அறிவுடன்தான் வாதிடுகிறாரா என்பது புரியவில்லை. தனது வாதத்திற்கு வலு சேர்க்க வேண்டுமென்பதற்காக படிக்காமலேயே ’ஜஸ்ஸாஸ் அபூபக்ரின்’ கருத்தை முன் வைக்கிறார்.

أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58) …
யூதப் பெண் சீப்பு தலைமுடி பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்று கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது…

ஸஹீஹ் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்பதைக்கூட வாசிக்காமல் இந்த அறிஞர் விமர்சித்திருக்கிறார். புகாரி, முஸ்லீம் போன்ற ஸஹீஹ் ஹதீஸ்கள் முஹம்மதிற்கு சூனியம் வைத்தது ஒரு யூத ஆண் என்கிறது.  இவர் யூதப் பெண் என்கிறார். பாவம் நம்ம ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்” ஏதோ தவறான ஹதீஸை ஆய்விற்கு எடுத்திருக்கிறார். முஹம்மதிற்கு விஷம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்படும் யூதப் பெண்ணை இங்கு கொண்டுவந்து இணைத்திருப்பாரோ? ஒருவேளை ”ஜஸ்ஸாஸ் அபூபக்ர்”  ’மண்டபத்தில்’ எவரேனும் எழுதிக் கொடுத்ததை வாசித்து பொற்காசுகளைப் பெறுவதற்கு முயற்சி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன். அடிப்படை செய்தியே தவறாக இருக்கிறது. இதை ஒரு ஆதாரமாக முன்வைத்த அண்ணன் பீஜேவின் துணிச்சலை நினைத்தால் என் உடலெங்கும் புல்லரிக்கிறது.

அண்ணன் பீஜேவும் அவரது ததஜவினரும்
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களூமே மட்டும் இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் ந்மது நிலை.

என்ற அர்த்தமில்லாத பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு, ஸிஹ்ர் பற்றிய செய்திகளை குர்ஆன் ஹதீஸிற்கு முரண் இல்லாதவாறு, அதாவது,   ”என்ன செய்வது? முஸ்லீமாகப் பிறந்துவிட்டோம்! வேறு வழியில்லை! பகுத்தறிவைத் தூக்கித் தொலைவில் எறிந்துவிட்டு எல்லவற்றையும் நம்பித் தொலைக்கிறோம்” என்று புரிந்து கொண்டால் அவர்களுக்கு எந்த குழப்பமும் தோன்றாது.

இவர்களை நாம் ஏன் விமர்சிக்கின்றோம்?
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகரீகவளர்ச்சியற்ற ஒரு சமுதாயத்தின் கருத்துக்களின் மீது குருட்டு நம்பிக்கை கொண்டு, தொலைந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் மீது கொண்ட பரிதாபமே எங்களை எழுத வைக்கிறது. முல்லாக்களின் அர்த்தமற்ற மிரட்டல்கள், புரட்டல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற மனிதாபிமான உணர்வுகளே அவர்களை எதிர்த்து விமர்சிக்கச் செய்கிறது.

முல்லாக்களின் மதப்புரோகிதத் தொழிலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது குர்ஆனும் ஹதீஸ்களும்தான்.  குர்ஆன் ஹதீஸ்களுக்கு அடிப்படை தூதர் முஹம்மது.  இவைகளிலுள்ள பதங்களுக்கு  இல்லாத பொருளையும்,  அதன் வாக்கியங்களில் இல்லாத அறிவியலையும் நுழைத்து, இந்த வார்த்தைக்கு அந்தப் பொருள் அந்த வார்த்தைக்கு இந்தப் பொருள் என்று குழப்பிவிட்டால், முஃமின்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குர்ஆனுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்; அவர்களால் குர்ஆனையும் ஹதீஸ்களையும் விட்டு எந்தக் காலத்திலும் வெளியேறவும் முடியாது.   முல்லாக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். இதை நாம் வெளிப்படுத்தி விமர்சித்தால், அவர்களது மத உணர்வு புண்படுகிறதாம்! விமர்சிக்கக் கூடாதாம்!

இஸ்லாம் மட்டுமே உயர்ந்ததென்று மேடைகளில் முழங்குவதற்கும்,  கற்பனைக் கதைகள்கூறி மதத்தை விற்பனை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கும்பொழுது அதை மறுக்கவும், விமர்சிக்கும் உரிமை நமக்கு இருக்கக் கூடாதா?

இஸ்லாமியக் கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாகும் பொழுது அதன் நிறுவனர் தூதர் முஹம்மது பாதிப்பிற்குள்ளாவதை ஒருபொழுதும் தவிர்க்க முடியாது! இஸ்லாத்திலிருந்து தூதர் முஹம்மதுவைப் பிரித்தெடுக்க முடியாது! ஒருவேளை முடியுமென்றால் அது எப்படி என்பதை விளக்காமல், 150 கோடி மக்களின் பெரும்தலைவரை இழிவுபடுத்திவிட்டாய் என்று ஒப்பாரி வைப்பதில் பொருளில்லை!

எங்கள் மனம் புண்பட்டுவிட்டது, புரையோடிவிட்டது என்று நீங்கள் என்னதான் கூக்குரலிடலும், மக்களை அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் இம்முயற்சியிலிருந்து நாங்கள் ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை!


தஜ்ஜால்