Wednesday 6 January 2016

ஸிஹ்ரும் ஷிர்க்கும்!




இந்த முறை கொஞ்சம் சுயபுராணம் வாசித்துவிட்டு தலைப்பிற்குச் செல்கிறேன்.
நண்பர்கள் மன்னிக்கவும்!


ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு,
அண்ணன் பீஜே அவர்களின் ”72 கூட்டத்தினர் யார்?” என்ற தொடர் சொற்பொழிவுதான் என்னுள் மாற்றத்தை நிகழ்த்தியது. அவர் கூறிய செய்திகள் அனைத்துமே எனக்கு புதிதாக இருந்தது; அப்பொழுதான் முதலாகக் கேட்கிறேன். அலீ முஹம்மதின் சகோதரர் மற்றும் அவரது அன்பிற்குரிய ஒரே மகளின் கணவர்; ஆயிஷா முஹம்மதிற்கு மிகவும் விருப்பமான மனைவி. இவர்களுக்குள் போர் நிகழ்ந்ததாக அண்ணன் பீஜே கூறிய செய்தியை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் மனம் இருதலைக் கொள்ளி எறும்பு போல அங்குமிங்கும் அலைபாய்ந்தது கொண்டிருந்தது.

ரமளான் மாதங்களில் நோன்பு துறப்பதற்காக எனது அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் பள்ளிவாசலுக்கு செல்வதும் வணக்க வழிபாடுகளுக்காக கூடுதலாக நேரம் ஒதுக்குவதற்காக சற்று முன்னதாகவே சென்றுவிடுவது எனது வழக்கம். அந்தப் பள்ளிவாசலின் நூலகத்தில்(!) குர்ஆனின் பிரதிகள் ஓரிரு குர்ஆன் மொழிபெயர்ப்புகள் புகாரி ஹதீஸ் தொகுப்புகள், கலீபாக்கள் வரலாறு மற்றும் வேறு சில அரபி புத்தகங்கள் என சுமார் பதினைந்து புத்தகங்கள் இருக்கும்.  இம்முறை அண்ணன் பீஜே அவர்கள் கொடுத்த குழப்பத்திற்கு விடையைகலீபாக்கள் வரலாறு என்ற புத்தகத்தில் தேடினேன். சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் அது.  பக்கங்களைப் புரட்டி தேவையான செய்திகளை மட்டும் ஆய்வு கண்ணோட்டத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். அந்தப் புத்தகமும் அண்ணன் கூறியதை ஆமோதிக்க, சில நாட்கள் அந்தப் புத்தகத்தில் மூழ்கினேன். இதற்கிடையில் எனது நண்பாரன ஆலீம் ஒருவரிடம் பீஜேவின் பயான் குறித்து பேசினேன்.  இதுபோன்ற குழப்பம் தரும் செய்திகளை அறிந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். அண்ணன் பீஜேவின் குறிப்பிட்ட அந்தச் சொற்பொழிவைக் கேட்பதை நிறுத்தினேன். நான் அந்தப் புத்தகத்தையும் தொடர்ந்து முழுமையாக வாசிக்கவில்லை; உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அந்த இரத்தக்களறியை என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. புத்தகத்தை வைக்கும் பொழுது அருகிருந்த புகாரி (ரஹ்மத் அறக்கட்டளை)  மொழிபெயர்ப்பின் மீது கவனம் சென்றது.  அதில் அண்ணன் பீஜேவின் பங்களிப்பும் இருப்பது தெரிந்தபொழுது உற்சாகமானேன்.

அண்ணன் பீஜேவின் குறிப்பிட்ட அந்தச் சொற்பொழிவை நான் கேட்டிருக்கவில்லை எனில், புகாரி ஹதீஸ் மட்டுமல்ல எந்த ஒரு ஹதீஸையும் என் வாழ்நாளில் தொட்டுப் பார்க்கும் வாய்ப்புக்கூட இருந்திருக்காது. ஐவேளைத் தொழுகை ஆண்டிற்கு ஒரு மாதம் நோன்பு, முல்லாக்களின் போதனைகளுக்கு தலையாட்டல் என்று  ஒரு சராசரி முஸ்லீமாகவே எனது காலத்தை கடந்திருப்பேன். சவுக்கடி”, “மரண அடிஎன்று ..ஜவினர் அடிக்கடி சொல்வார்களே, அந்த அடியை எனக்குக் கொடுத்துகோமாநிலையில் உறங்கிக் கொண்டிருந்த எனது அறிவை எழுப்பிவிட்டது அண்ணன் பீஜே மட்டும்தான்! இதற்காக நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்  கடன்பட்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் பெரிய மதப்பண்டிதனாக இல்லையெனினும், இஸ்லாமில் புகாரி ஹதீஸ்களுக்கு இருக்கும் மரியாதையை நன்கு அறிவேன். குர்ஆன் மற்றும் இஸ்லாமிய எழுத்தர்கள் எழுதிய புத்தகங்கள் என்றிருக்கும் எனது மதஅறிவை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல இது  நல்ல வாய்ப்பு எனத் தோன்றியது. நாமும் இஸ்லாமிய வட்டத்தில் பேசும் பொழுது புகாரி ஹதீஸ்களை மேற்காட்டி ஆதரத்துடன் விளக்கமாக பேசுவதற்கு வசதியாக இருக்குமே என்ற ஆவலுடன் புகாரி ஹதீஸ் தொகுப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

பிற்காலத்தில் இஸ்லாமிய மதச் சட்டங்களைக் கட்டமைப்பதற்கு பெரிதும் உதவிய ஒரு மாபெரும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கையில் எனக்கு பெருமையாக இருந்தது. வாசிப்பிற்கு அதிகநேரம் செலவிட வேண்டுமென்பதற்காக அலுவலகத்தில் முன் அனுமதிபெற்று மாலை நான்கு மணிக்கே பள்ளிவாசலுக்குச் சென்று விடுவது வாடிக்கையாகிப் போனது.  

நான் ஷஃபிஈ மத்ஹப்பை பின்பற்றும் வம்சாவழியில் வந்தவன். ஒழு, தொழுகை மற்றும் இதர வழிபாடுகள் குறித்த ஹதீஸ்களை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, நடைமுறைக்கும் ஹதீஸிற்கும் பெரிய மாற்றங்களைக் கண்டேன். மத்ஹப்களுக்குள் முரண்பாடுகள் இருப்பது எனக்குத் தெரியும். ஆயினும் ஷாஃபிஈ மத்ஹப் மட்டுமே சரியான வழிமுறையென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முஹம்மது தொழும் பொழுது, அவருக்கு எதிரில் காலை நீட்டிக் கொண்டு படுத்திருந்ததாக ஆயிஷா கூறும் ஹதீஸ் என்னைக் குழப்பதிற்கு கொண்டு செல்லத் துவங்கியது. இஸ்லாமின் இன்னொரு பக்கத்திற்கு சென்று கொண்டிருப்பதை அப்பொழுது நான் அறியவில்லை.

அந்த ரமளானின் பதினாறு அல்லது பதினேழாவது நாளென்று நினைக்கிறேன். அன்று அலுவலத்தின் பணிகாரணமாக சற்று தாமதமாகத்தான் பள்ளிவாசலுக்கு வந்தேன். விரைவாக அஸர் தொழுகையை முடித்துவிட்டு வழக்கம்போல புகாரி ஹதீஸை வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன் தற்செயலாக முஹம்மது-ஆயிஷா திருமணம் மற்றிய ஹதீஸ் கண்களில் தென்பட்டது. நான் முன்பே உங்களிடம் சொன்னது போல அந்த ஹதீஸ் என்னை நிலைகுலையச் செய்தது. அந்த வினாடியில் நான் அடைந்த அதிர்ச்சியை, ஏமாற்றத்தை, வலியை வார்த்தைகளில் என்னால் விவரிக்க முடியவில்லை.


 
முஹம்மதிற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தனர்; அவர்கள் அனைவருமே விதவைகள் என்பதாகவும் எனக்கு போதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி உங்களிடம் சொல்லியிருப்பதாக நினைவு. ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியர்கள் என்பது சற்று நெருடல்தான்; விதவைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தவே அவர் அவ்வாறு செய்தார் என்ற முல்லாக்களின் போதனையைக் கடந்து நான் சிந்தித்ததில்லை; சிந்திக்கத் தெரியாது; சிந்திக்கக் கூடாது! ஒரு சராசரி முஸ்லீமின் நிலை அவ்வளவுதான். எச்சரிக்கைகளுடன் முல்லாக்கள் போதிப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்; இவற்றை மீறி சிந்திப்பதென்றால் அல்லாஹ் கூறியவாறு இதயத்தைக் கொண்டு சிந்திக்கலாம். மூளையைக் கொண்டு அல்ல! முஸ்லீம்கள் இதயத்தைக் கொண்டு சிந்திப்பதால்தான் இஸ்லாம் இன்றும் நீடித்திருக்கிறது. முஹம்மது - ஆயிஷா திருமணம் பற்றிய செய்தியையை படித்த பொழுது என்னால் நம்பமுடியவில்லை. அந்த வினாடியில் நான் மூளையைக் கொண்டு சிந்தித்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்!

பொதுவாகவே முல்லாக்களிடம் ஒரு வழக்கம் இருக்கிறது. இஸ்லாமிலுள்ள முரண்பாடான செய்திகளுக்கு சில சப்பைகட்டுகளை நாம் கேட்கமலேயே நம்மிடம் அவர்களாகவே கொடுத்து விடுவார்கள். உதாரணத்திற்கு, பலதாரமணத்தைபற்றி சொல்லும் பொழுது, கண்மணி நாயகம் விதவைகளுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் மறுவாழ்வு கொடுக்கும் நோக்கத்துடன், தானே ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்களைத் திருமணம் செய்தார் என்றுதான் முஹம்மதின் பலதாரமணங்களைப்பற்றி நமக்கு அறிமுகம் செய்வார்கள். குர்ஆனுக்குள் அறிவியலை நுழைத்திருப்பதும் இதே வகைதான். குறிப்பிட்ட குறிப்பிட்ட அந்த இடங்களில் மிகத் தெளிவான முரண்பாடுகள் இருப்பதை அவர்களுக்கு நன்றாகவே தெரியும்;  அதை மறைப்பதற்காக  இல்லாத அறிவியலை அவ்விடங்களில் திருகி ஏற்றிவிடுவார்கள். இதயத்தைக் கொண்டு சிந்திக்கும் அப்பாவி முஃமின்களோ புல்லரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அடுத்தவர்களைச் சொரிந்து கொண்டிருப்பார்கள்.  முஹம்மதிற்கு ஒரே சமயத்தில் ஒன்பது மனைவியர் இருந்தனர் என்ற ஹதீஸைப் புகாரியில் படித்த பொழுது நான் பெரிதாக அதிர்ச்சியடையாமல் போனதும் இதனால்தான். ஆனால் ஆயிஷாவின் திருமண வயதைப்பற்றிய செய்தி இதற்குமுன் என் வாழ்நாளில் ஒருமுறை கூடக் கேட்டதில்லை. அது எனது கற்பனைகளும் அப்பாற்பட்டதாக, கனவிலும் நினைத்துப் பார்க்காததாக இருந்தது.

நோன்பு துறப்பதற்கான நேரம் நெருவிட்டதோ அச்சத்தில், புத்தகத்தை அவசர அவசரமாகப் புரட்டியதில்  எனது பார்வையில் தவறுதலாகத் தோன்றியிருக்கலாம் என்று தோன்றியது. இதயத் துடிப்பு திடீரென்று அதிகரித்ததால் சில வினாடிகள் எதுவும் புரியவில்லை. புத்தகத்தை மூடிவைத்து,  அமைதியாக அமர்ந்திருந்தேன். சில நிமிடங்கள் கழித்து  கண்களைத் தேய்த்து, பார்வையை சரி செய்து மீண்டும் பார்த்தேன்; நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாகப் படித்தேன்; அதே பொருள்தான்! என்னுடைய அறிவு புரிந்துகொண்ட பொருளை எனது நம்பிக்கைகளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன் அதே பொருள்தான்.  ஒருவேளை அறுபது என்பதற்கு பதிலாக  ஆறு என்பதாக அச்சுப் பிழை ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

பரபரவென்று பக்கங்களையும் புகாரி தொகுப்பின் மற்ற பாகங்களியும் புரட்டி, முஹம்மதின் திருமணம் தொடர்பான ஹதீஸ்களை தேடினேன். வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வரிசையில் அதே செய்தி! ஆறு வயதில் திருமணம் ஒன்பது வயதில் வீடுகூடல். அதற்குள் எனது மனம் முஹம்மதின் வயதையும் ஆயிஷாவின் வயதையும் ஒப்பீடு செய்துவிட்டிருந்தது. மனக்கண்ணில் சில காட்சிகள் ஓட,  நான் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்த போனேன்.

இதுதானா…?

எனது உயிரினும் மேலாக நினைத்து போற்றிக் கொண்டிருந்த ஒரு தலைவனின் நிலை? இதுதானா…? இதுதானா…? என்ற ஆத்திரமும், கோபமும், வேதனையும் வினாடிக்கு வினாடி அதிகரிக்க, முஹம்மதின் பிம்பம் ஒட்டுமொத்தமாக சரிந்து தரைமட்டமானது. ஐம்பத்தி நான்கு வயதான கிழட்டு முஹம்மது தனது வெறியைத் தணித்த கொண்ட நேரத்தில்  அந்த ஒன்பது வயது பெண்குழந்தையின் மனமும் உடலும் அடைந்த் வேதனை எப்படி இருந்திருக்கும்? என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் செல்லத் துவங்கியிருந்தது.

அருகிலிருந்தவர் எனது தோள்பட்டையில் தட்டும்வரை,  ஒலிப் பெருக்கியில் நோன்பு துறப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டதாக அறிவிப்பு செய்து கொண்டிருந்தைக் கூட உணராமல் சிலைபோல அமர்ந்திருந்தேன். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை நோக்கிச் சென்றேன். நோன்பாளிகள் அனைவரும்  அவரவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளுக்கு முன்பாக அமர்ந்து பிரார்த்தனைகளில் மூழ்கியிருந்தனர் காரணம் அந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. நான் அடைந்த அதிர்ச்சியை, வேதனையை அப்படியே அல்லாஹ்வின் முன்வைத்து மனமுருகி பிரார்த்தனை செய்து உதவிகோரினேன். முஹம்மதின் செயலுக்கு ஏதேதோ நியாயங்கள் கற்பித்துப் பார்த்தேன்; அனைத்தும் தோல்வியில் முடிந்தது.



அன்றைய தொழுகை மற்றும் துஆக்கள் அனைத்திலும் முஹம்மதின் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் புகாரி ஹதீஸ் நினைவிற்கு வர, அருவெறுப்பாக இருந்தது. இன்றும்கூட எனக்கு முஹம்மதின் பெயரைக் கேட்டவுடன் அவரது கேடுகெட்ட அந்தச் செயல்தான் முதலில் நினைவிற்கு வருகிறது. அதேவேளையில் நமக்கு தரப்பட்டிருக்கும் வரலாறு தவறாக இருக்குமோ என்ற ஐயமும் மனதிற்குள் ஓடத் துவங்கிருந்தது. எதைத் தொலைத்தாவது முஹம்மதின் செயலுக்கு நியாயம் கற்பிக்க வேண்டும். ஒரு சராசரி முஸ்லீம் அவ்வாறுதான் சிந்திப்பான்; அவ்வாறுதான் சிந்திக்க வேண்டும்!

இன்று, குர்ஆனுக்கு பாரம்பரியமாகக் கூறப்பட்டுவந்த பொருளை மாற்றி புதுப்புது அர்த்தங்களைக் கூறிக் கொண்டிருப்பது எதற்காக என்று நினைக்கிறீர்கள்? குர்ஆனை மாற்றியாவது இவர்கள் காப்பாற்ற நினைப்பது முஹம்மதைத்தான். இப்படியொரு கலாச்சார பின்னணியில் வளர்ந்த நானும் அதற்குத் தப்பவில்லை. புகாரி ஹதீஸ் தொகுப்பு கூறும் வரலாறு தவறாக இருக்குமென்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

வரலாறு தவறாக இருந்தால், அதை அடிப்படையாகக் கொண்ட இன்றைய இஸ்லாம் முழுவதும் தவறாகிவிடுமே? எதை எப்படி ஏற்பதுஎப்படி நிராகரிப்பது? முஹம்மது தவறானவர் எனில் அவரல் கற்பிக்கப்பட்ட குர்ஆன் மற்றும் இஸ்லாமியக் கொள்கைகளின் நிலை? இதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை! உண்மையைச் சொல்வதென்றால் அச்சத்தினால், இந்த சிந்தனை தோன்றும் பொழுதெல்லாம் வேறு எதையாவது மனதிற்குள் நினைத்து, கவனத்தை திசைமாற்றுவதாக நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்தேன்.

இஸ்லாமைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறேனோ என்ற அச்சம் அவ்வப்பொழுது வந்து செல்லும். முன்பைவிட அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக எனக்கு நானே உற்சாகத்தைக் கொடுத்துக் கொண்டு வணக்கவழிபாடுகளில் மூழ்கினேன்.

அப்பொழுது எனக்குத் தெரிந்த ஒரே போக்கிடம் அல்லாஹ் மட்டுமே. இந்தக் குழப்பத்திற்கு ஐவேளைத் தொழுகை மட்டும் சரிப்பட்டுவராது;  இது பெரும் குழப்பம்! எனவே இரவு உறங்கி எழுந்தபின் நள்ளிரவில் செய்யப்படும் தஹஜ்ஜத் தொழுகையை மேற்கொண்டு அல்லாஹ்வின் உதவியை நாடுவது மட்டுமே நல்ல தீர்வாக அமையுமென்று தோன்றியது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ருமுறையாவது தஹஜ்ஜத் தொழுவது எனது வழக்கம். இந்தத் தொழுகையில் கேட்கப்படும் துஆவிற்கு ஆற்றல் அதிகம் என்பது இஸ்லாமிய ஐதீகம்.

என்னைப் படைத்த இறைவா! எனது மனம் அமைதியின்றித் தவிப்பதை நீ அறிவாய்! கேள்விகளும் குழப்பங்களும் எனது நம்பிக்கையை அழித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். தயவு செய்து என்னை உறுதியான நேர்வழியில் செலுத்து. எனது ஈமானைப் பலப்படுத்து! நீ என்னைக் கைவிட்டால் நான் வழிதவறியவனாகிவிடுவேன். என்னைப் பாதுகாத்து அருள் புரியவேண்டும் ரஹ்மானே!”

என்று பாவமன்னிப்பும் பாதுகாப்பும் கோரி அல்லாஹ்வைப் பணிந்து, கசிந்துருகி, அழுது புலம்பி எனது மனக்குழப்பத்தை அடியோடு நீக்குமாறு கோரிக்கையை முன்வைத்து பிரார்த்தனை செய்வேன்.

ஷைத்தான் மனிதனின் நாடி நரம்புகளிலெல்லாம் ஒடித் திரிகிறான் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை நான் படித்திருக்கிறேன். ஒருவேளை இது ஷைத்தானின் சூழ்ச்சியாக இருக்குமென்று தோன்றியது.  கையில் தஸ்லீஹ் மணிகளை உருட்டிக் கொண்டு திரியவில்லையெனினும், “அவுதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பது எனக்கு வாடிக்கையாகிப் போனது. நான் விடுவதாக இல்லை தஹஜ்ஜத் தொழுகையை அதிகப்படுத்தியதுடன் காலை ஃபஜ்ரு தொழுகைவரை நீட்டினேன். இதனால் பல வேளைகளில் எனது இரவுத் தூக்கம் தொலைந்து போனது. அதேவேளையில் எனது தேடலும் தொடந்து கொண்டிருந்தது. என்றாவது ஒருநாள் ஒரு இனிய காலைப்பொழுதில் அல்லாஹ்வின் கருணை என் மீது பொழியும் எனது சந்தேகங்களும், குழப்பங்களும் விலகி, ஷைத்தானிடமிருந்து விடுதலை பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

அதுவரை என்னுடைய நாடிநம்புகளில் தனியாக ஓடிக் கொண்டிருந்த ஷைத்தான், அல்லாஹ்வின் அருளால் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக குடித்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும். நாளுக்குநாள் எனக்கேற்பட்ட சந்தேகங்களும் கேள்விகளும் சரியானது என்பது உறுதி கொண்டிருந்ததே தவிர குழப்பம் குறைந்ததாகத் தெரியவில்லை. இப்படியே ஒரு வருடம் கடந்து அடுத்த ரமளானும் வந்தது. இதற்கிடையில் முஹம்மது-ஆயிஷா திருமணம் தொடர்பாகக் கிடைத்த தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரைகள், புத்தகங்கள், வாதப்பிரதி வாதங்கள் அனைத்தையும்  ஓரளவிற்கு வாசித்தேன். புகாரி ஹதீஸ் தொகுப்புகளையும் முழுமையாக வாசித்து முடித்திருந்தேன். இருதரப்பு வாதங்களையும் எனது அறிவிற்கு எட்டியவரை ஆய்வுசெய்தேன். இப்பொழுது என்னிடம் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தது.  அதாவது முல்லாக்களின் மழுப்பல்கள் என்னிடம் செல்லுபடியாது என்ற நிலைக்கு வந்திருந்தேன். ஹதீஸ்கள் உண்மை எனில் முஹம்மது குற்றவாளியாகிறார். அவரைப் பாதுகாப்பதற்காக ஹதீஸ்களை நிராகரிக்க முடியாது. முஹம்மதைக் கழித்து இஸ்லாமைக் காணவும் முடியாது.

என்ன செய்வது?

உண்மையை அறிந்து கொள்வதற்காக, முஹம்மதைக் குற்றவாளி என்ற நிலையில் வைத்து இஸ்லாமை ஆய்வு செய்தால் என்னவென்று தோன்றியது. இப்படி சிந்திப்பதே ஷைத்தானின் சூழ்ச்சியென்று தோன்றும் உடனே எனது கவனத்தை திசை மாற்றிவிடுவேன். மீண்டும் அதே எண்ணம் தோன்றும் அப்பொழுது, இந்தச் சோதனையில் நானும் எனது கேள்விகளும் தோற்று, கண்மணி நாயகம் முஹம்மது வெற்றிபெற வேண்டுமென்ற துஆ வையும் தஹஜ்ஜத் தொழுகையில் சேர்த்துக் கொண்டேன்.

ஒருவழியாக மனதைத் தேற்றிக் கொண்டு முஹம்மதைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, ஒரு ஆறு வயது பெண்குழந்தையின் தந்தை என்ற நிலையில் இருந்து முஹம்மதை விசாரணை செய்தேன். முஹம்மதின் செயலை என்னால் மன்னிக்க முடியவில்லை. ஒரு பொழுது அவரை என்னால் மன்னிக்க முடியாது என்ற நிலையை அடைந்தேன். ஆறு வயது பெண்குழந்தையின் தந்தையாக மட்டுமல்ல அறிவும், மனிதாபிமானமும் கொண்ட எவரும் இந்த முடிவைத்தான் அடைவார்கள். இதை அனுமதிக்கவும் ஆதரிக்கவும் செய்ததாகக் கூறப்படும் அல்லாஹ்வை என்னால் கடவுளாகக் காண முடியவில்லை. சீட்டுக் கட்டு கோபுரம் கலைவது போல ஒட்டுமொத்தமாக இன்னுள் இருந்த இஸ்லாமிய நம்பிக்கை சரிந்து போனது. வீட்டிலிருப்பவர்கள் எவருடனும் எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

அந்த வருட ரமளானின் இருபதாவது தினமென்று நினைக்கிறேன், வழக்கம்போல அன்றைய நோன்பை துவங்குவதற்காக எழுந்தேன். காலைக் கடன்களை நிறைவு செய்து, தூய்மையாக ஒழுச் செய்து தஹஜ்ஜத் மற்றும் அன்றைய ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றினேன். அதுவே அல்லாஹ்வை பயந்து, பணிந்து, மனதாரச் செய்த இறுதித் தொழுகையாகப் போனது.
 
இனி…?

பள்ளிவாசலுக்குச் செல்வதை தவிர்க்கத் துவங்கினேன். என்னிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை சிலர் உணர்ந்தனர். ஆயினும் அவர்களால் அதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. வெளிப்படையாகச் சொல்லும் தைரியமில்லாமல்  மற்றவர்களின் வற்புறுத்தல்களுக்காக பள்ளிவாசலுக்குச் செல்வேன். முஸ்லீம்களுக்கு மத்தியில் இருந்தாலும் நான்மட்டும் தனித்து ஏதோ ஒரு தீவில் இருப்பது போலத் தோன்றியது. எனது சிந்தனைகளை யாரிடம் பகிர்ந்து கொள்வதென்பதுகூடத் தெரிவில்லை. இவ்வாறு இஸ்லாமைவிட்டு கொள்கை ரீதியாக வெளியேறியவன் நான் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆலீம்களிடம் சென்றால் முகத்தில் குழப்பவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள் அத்துடன் பிரச்சினை முடியாது வேறு  என்னவெல்லாம் நிகழும் என்பது எனக்குத் தெரியும். காதியானி ஒருவர் மரணமடைந்த பொழுது, இந்த ஜமாஅத்வாதிகள் ஒரு வாரம் உடலைப் புதைக்க விடவில்லை; அந்த உடல் உப்பி, நீர்வெளியேறி, துர்நாற்றம் வீச ஆரம்பித்தது; அந்தக் குடும்பம் கதறி கண்ணீர்விட்ட காட்சி என் கண்முன்னே இன்றும் தெரிகிறது. காதியானிக்கே இந்நிலையெனில் என்னைப் போன்ற முர்தத்தின் நிலையைக் கேட்கவே வேண்டாம். வெளியில் சொல்லவும் முடியாமல், மனதிற்குள் அடக்கி வைக்கவும் முடியாமல், பல இரவுகளை தூக்கமின்றித் தொலைத்துக் கொண்டிருந்தேன்.

இறுதியில் எனது கேள்விகளையும், கருத்துக்களையும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதென்று முடிவு செய்து, அமைதியாக, சுன்னி ஷியா பிளவு குறித்த ஒரு சில விமர்சனங்களை முன்வைத்தேன்.

முஹம்மது நபியின் நேரடி மேற்பார்வையில், அவரால் உருவாக்கப்பட்டவர்கள், எப்படி அற்ப பதவி-அதிகாரத்திற்காக கொலை ஒருவரையொருவர் கொலை செய்தனர்?

உஸ்மான், அலீ, ஆயிஷா, முஆவியா இவர்களில் தவறு செய்தது யார்?

இவ்வுலக வாழ்வின் அற்ப சுகமான பதவிக்காக கொலைகளையும் செய்தவர்கள் இஸ்லாமியக் கொள்கைகள் தொடர்பாக நமக்கு அறிவித்த செய்திகள் மட்டும் சரியானதென்று எப்படிச் சொல்கிறீர்கள்?

நாம் என்ன செய்ய முடியும் அல்லாஹ்வின் நாட்டம் அப்படி இருந்திருக்கிறது என்று நழுவினர். ஆனால் குடும்பத்திற்குள், உறவினர்களுக்கு மத்தியில் என்னைப்பற்றிய செய்தி தீயாகப் பரவியது.

அவர்களில் சிலர்,

நீயா இப்படிப் பேசறே..?” என்றனர்.

நான் புதுசா எதையும் சொல்லலை. போன வருஷம்  72 கூட்டத்தினர் யார்?-ங்கிற தலைப்பில் அண்ணன் பீஜே சொன்னதைத்தான் சொல்றேன்என்றேன்.

அவரு தெரியாம எதையாவது உளறியிருப்பாரு!” என்றனர்.

ஆலீம்களாக இருக்கும் உறவினர்கள் சிலர்,

இதைப்பத்தி வெளிப்படையா பேசினால் குழப்பம்தான் வரும். அதனால்தான் நிறைய ஆலீம்கள் இந்த விஷயத்தை வெளிப்படையா பயான்களில் பேசறது கிடையாதுஎன்றனர்.

பீஜே சொன்னது உண்மைதானே?” என்றேன்

ஆமாம்…!”

உண்மையை மறைக்கிறது தப்பில்லையா?” என்றேன்

குழப்பத்தைத் தடுக்க வேற என்ன செய்ய முடியும்?” என்றனர்.

வேறு சிலர்,
உனக்குப் பிடிக்கலைனா பின்பற்றாதே..! ஆனால் உனது விமர்சனங்களை வெளியில் சொன்னா உன்னை நம்ம சமுதாயத்திலிருந்து தள்ளிவச்சிருவாங்ககடைசியில கபர்ஸ்தான்லகூட உனக்கு இடம் கிடைக்காது..!என்றனர்.

இதென்ன வகையான பதில்?

அறிவுறுத்தலா? அல்லது எச்சரிக்கையா?

என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை!

சில நாட்கள் கழித்து, ஒரு மாலைவேளையில் முஹம்மதின் திருமணங்கள் குறித்தும் ஆயிஷா திருமண வயதைப்பற்றி பேசத் துவங்கினேன்; சற்று நேரத்தில் எனது கட்டுப்பாட்டையும் மீறி, பொறுமையிழந்து ஆத்திரமும் கோபமும் மேலிட வெறுப்புடன் விமர்சனங்கள் வெளிவரத் துவங்கியது. அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எனது தாயார்,

ல்லாஹ்வின் ரஸூல் நம்மைவிட பெரியவர்; அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரோட ஒவ்வொரு வார்த்தையிலும் செயலிலும் கண்டிப்பாக ஏதாவது படிப்பினை இல்லாமல் இருக்காது!” என்றார்.

இதில் என்ன படிப்பினை இருக்கு...?”

”... ...?!”

சுன்னத்தை பின்பற்றுவதாக சொல்லற நம்ம வீட்டிலும் ஆறு வயசான பெண்குழந்தைகள் இருக்காங்க அவங்களையெல்லாம் ஐம்பது வயது கிழவன்களுக்கு கல்யாணம் செய்து கொடுக்க முடியுமா...?” என்றேன் கோபமாக,

”… ….!?”

நான் தொடர்ந்தேன்.
சராசரி மனுஷனான என்னால் இதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியல! இதுதானா மனிதகுலத்திற்கு  நேர்வழிகாண்பிக்க அருளப்பட்ட தூதரின் வழி?” என்று கூறியவாறு காறி உமிழ்ந்தேன்.

முகமெல்லாம் சிவக்க பதட்டமாக,

அல்லாஹ்வின் ரஸூலை திட்டற அளவுக்கு வளர்திட்டியா…?” என்றார் எனது தாயார்.

அருகிலிருந்த எனது இளைய சகோதரியை நோக்கி,

இவனுக்கு என்ன ஆச்சு? இவனுக்கு.. பைத்தியமா புடிச்சிருக்கு…?” என்றார்.

அவர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இவன் மீது கெட்ட ஜின், ஷைத்தான் ஏதாவது கூடியிருக்கும்னு நினைக்கிறேன். இல்லையெனில் என் மகன் இப்படியெல்லாம் பேசமாட்டான்!”

நான் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

ஏர்வாடி அல்லது அம்பராம்பாளையம் தர்ஹாவுக்கு போய்ப் பார்க்கலாமா?” என்றார் எனது தாயார்.

என் மனநிலையை இவர்கள் சந்தேகிப்பார்கள் என்பதை முன்னமே நான் எதிர்பார்த்ததுதான்.  இனியும் நான் அமைதியாக இருந்தால் ஏர்வாடிக்கு கொண்டுபோய் கட்டிவைத்துவிடுவார்கள் என்று தோன்றியது.

தெளிவான சுயநினைவோடுதான் பேசறேன்என்றேன்.

அதுவரை அமைதியாக இருந்த எனது இளைய சகோதரி,

கோயமுத்தூர்ல இருகற டாக்டர் அசோகன் கிட்ட நாம கவுன்சிலிங் போனா என்ன?” என்றார். அசோகன் ஒரு மனநல மருத்துவர்.

அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் எனது இணை. எனக்கு பைத்தியக்காரன் பட்டம் கிடைத்திருப்பதைவிட இஸ்லாமை விமர்சிக்கிறானே என்பதுதான் அவருக்கு அப்பொழுது பெரும் கவலையாக இருந்தது; ஏனெனில் அவர் இஸ்லாமியக் கல்வியில் ஆலிம் பட்டம் பெற்றவர்.

ஏர்வாடி தர்ஹாவைப்பற்றி உங்களுக்குத் தெரியும். அம்பராம்பாளையம் தர்ஹா பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கிறது. இங்கும் பேய்,பிசாசுகள், பில்லி, சூனியம் போன்றவைகளுக்கு குறைந்த செலவில் சிறந்த முறையில் தீர்வு வழங்கப்படுகிறது என்பதும் பெரும்பாலான முஸ்லீம்களின் நம்பிக்கை.
எனது கதையை இங்கு நிறுத்துகிறேன்.





கடந்த ஆண்டு,

PJ-வின் பகிரங்க சவால்

ரூபாய் 50 லட்சம் பரிசு
என்று த..ஜவினர் தமிழகமெங்கும் சுவரொட்டிகளில் கூவினர். அண்ணன் பீஜே சுன்னத் வல் ஜமாஅத்தினரை எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக அகோரி மணிகண்டன் என்பவர் முன்வந்தார். இறுதியில்  அண்ணன் அறிவித்த போட்டி ஆரவாரமின்றி ஏனோதானோவென்று சம்பிரதாயமாக முடிந்து போனது.

சில வாரங்களில்,

ரூபாய் ஒரு கோடி பரிசு என்று கிறிஸ்தவர்களின் அற்புதக் கூட்டங்களுக்கு சவால் விடுத்து பரபரப்பை ஏற்படுத்த முயன்றனர்.

பலன் இல்லை!.

இப்பொழுது திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்று மீண்டும் சுன்னத் ஜமாஅத்தினருடன் நேரடியாக மல்லுக்கட்ட தயாராகியிருக்கின்றனர்.  இந்தப் போரட்டங்கள் விளம்பர யுக்தி என்பதில் சந்தேகமில்லை. (தேர்தல்வேறு நெருங்கிவிட்டது!) அண்ணன் பீஜே தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் தானே அவருக்கு விளம்பரம் தேவையில்லையே? ..ஜாவுக்கு  அப்படி என்ன பிரச்சினை?

இது, ஆதரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கத் துவங்கியதிலிருந்து ஆரம்பமாகிறது.  குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் பாரம்பரியமாகக் கூறப்படும் பொருளிலிருந்து மாற்றமாக அண்ணன் பீஜே கூறியது இஸ்லாமிய அறிஞர் வட்டாரங்களில் மட்டுமல்ல வெகுஜன முஸ்லீம்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. அண்ணன் பீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பை த..ஜவினர் தவிர மற்ற முஸ்லீம்கள் அதை பொருட்படுத்துவதேயில்லை. இந்நிலையில் அல்லாஹ்விற்கு உருவம் இருப்பதாகக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்டார். குர்ஆனில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக அறிவித்தார். ..ஜ மேற்கொண்ட அரசியல் முடிவுகள் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பெரும் கேலிக்குள்ளானது. இழந்த சந்தையை மீட்டெடுக்க ஊடகங்களில் அறைக்கூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். வாதத்திற்காக, ..ஜவின் அறைக்கூவல்களில் சுயவிளம்பர நோக்கம் எதுவுமில்லை, என்பதாகக் கொண்டு நாம் தொடர்வோம்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பிற்போக்கு மதவாதிகள் முன்வந்தது ஏன்?

முஹம்மதின் போதனைகளைப் பகுத்தறிவிற்கு ஏற்புடையதாகக் காண்பித்து, வெகுஜன மக்களிடம் முஹம்மதை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான்! இது அற்பமான ஆள்பிடிக்கும் தந்திரம் என்பதைத் தவிரவேறில்லை! கிறிஸ்தவர்களின் மதவிற்பனை ஒரு மாதிரியென்றால் இது இன்னொரு மாதிரி அவ்வளவுதான்.

சரி…!

ஸிஹ்ர் (பில்லி-சூனியம்)
ஷிர்க் (இணைவைத்தல் அதாவது அல்லாஹ்விற்கு இணைவைத்தல்)
இந்த இரண்டைப்பற்றி கவனிப்போம்.

ஸிஹ்ர் பற்றி அண்ணன் பீஜேவின் விளக்கங்களை அவரது தொழில் முறைப் போட்டியாளர்களான ஸலஃபிகள் ஏற்கவில்லை. இருதரப்பும் பக்கம்பக்கமாக பேசியும், எழுதியும் எந்த ஒரு முடிவிற்கும் வரமுடியாமல் வாதப்பிரதிவாதங்களை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். பொறுமையும் நேரமும் எங்களுக்கு நிறையவே இருக்கிறது எனவே அவற்றை முழுமையாகப் படித்தே தீருவோம் என்பவர்கள், கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளுக்குச் செல்லலாம். அவர்கள் படித்து முடிப்பதற்குள் நாம் இருதரப்பு வாதங்களையும் சொல்வதை சுருக்கமாக கவனிப்போம்.

அண்ணன் பீஜே தரப்பு வாதம்:
ஸிஹ்ர் என்றால்மேஜிக்அதாவது தந்திரவித்தை. அதை, ஏதேதோ குர்ஆன் வசனங்களைப் பக்கம் பக்கமாக அடுக்கி,  எங்கெங்கோ  சுற்றி, வளைத்து, இறுதியில் ஸிஹ்ர் அன்றால் மேஜிக் என்பதாக அல்லாஹ்விற்கே பாடம் நடத்தி, இஸ்லாமியர்கள் பாரம்பரிய நம்பிக்கைக்கு எதிராகவும், ஆதரப்பூர்வமான ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுவதாகக் நிரூபித்து(!?) முஹம்மதிற்கு பைத்தியமில்லை என்று முடிக்கிறார்.  அதேவேளையில் ஸிஹ்ர் என்ற பில்லி சூனியத்தால் மனிதர்களுக்கு சில பாதிப்புகளையாவது செய்யமுடியும் என்பதை மிகப் பெரும்பாலான முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதையும் அண்ணன் பீஜே மறுக்கவில்லை.  அல்லாஹ்வின் நபிமார்கள் செய்ததாக கூறப்படும்அற்புதங்கள்பற்றி எவரும் கேள்வி எழுப்பி விடக்கூடாது என்ற நோக்கத்தில் அவைகள் இந்தமேஜிக்என்ற விளக்கத்திற்குள் வருபவைகள் அல்ல! அவைகள் அற்புதங்கள் என்ற வரையறைக்குள் வருவன என்கிறார். 

சூனியத்தை தன்னுடைய சவால் மூலம் சோதித்து, அதனால் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை  நிரூபித்து சிறந்த உதாரணமாக இருக்கிறாராம். (பாவம் முஹம்மதிற்கோ அல்லது அவரது அல்லாஹ்விற்கோ இந்த யோசனைகள் வராமல் போய்விட்டது வருத்தத்திற்குரியதுதான்.) மலக்குகள், வனவர்கள், ஜின்கள், ஷைத்தான்கள், சொர்க்கம், நரகம் மீண்டும் உயிர்ப்பித்தல் போன்ற செய்திகளை சோதனைக்கு உட்படுத்தாமல் அனைத்து முஸ்லிம்களும் நம்பவேண்டும். ஏனென்றால் இது சோதித்து அறியும் விஷயம் அல்ல என்கிறார்.

ஸலஃபிகள் தரப்பு வாதம்:
ஸிஹ்ர் என்றால் பில்லி-சூனியம்தான்.  முஹம்மதிற்கு பில்லி-சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படவில்லை. முஹம்மதிற்கு செய்யப்பட்ட சூனியம், அவருக்கு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அதாவது அவரது மனைவியரிடத்தில் தாம்பத்திய உறவு கொண்டாரா? இல்லையா? என்பதில் மறதியை உண்டாக்கியது. ஆனால் அண்ணன் பீஜே வேண்டுமென்றே, முஹம்மதிற்கு பைத்தியம் பிடித்ததாக விளக்கம் கொடுத்து இட்டுக்கட்டுகிறார்.  இந்த ஹதீஸ்கள் மட்டுமல்ல ஆதரப்பூர்வமான எந்த ஒரு ஹதீஸும் குர்ஆனுக்கு முரண்படாது என்கின்றனர்.

மேலும் குர்ஆனைத் திரித்து மொழிபெயர்த்து, தனது சொந்தக் கருத்துகளை குர்ஆனின் கருத்தாக திருகி ஏற்றுகிறார். அதைக் கொண்டு அவருடைய தனிப்பட்ட பகுத்தறிவிற்கு ஏற்கமுடியாத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நிராகரிக்கிறார். குர்ஆனும், ஹதீஸும் ஸிஹ்ர் இருப்பதாகக் கூறுகிறது; அதைத் தேவையற்ற எதிர்க் கேள்விகள் கேட்காமல் அப்படியே அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்கின்றனர்.

இவர்களுக்கிடையே இருக்கும் அடுத்த பிரச்சினைஷிர்க்’. முஸ்லீம்களும், இந்த ஜமாஅத்துகளும்  ஒருவரையொருவர் மிரட்டுவதற்கு  பயன்படுத்தும் உச்சகட்ட சொல்ஷிர்க்’. உண்மை என்னவெனில் அண்ணன் பீஜே செய்தஸிஹ்ர்மற்ற ஜமாஅத்தினரிடம் பலிக்கவில்லை. வேறுவழியில்லாமல்ஷிர்க்என்றஸிஹ்ரைக் கையிலெடுத்திருக்கிறார்.

இஸ்லாமிய நம்பிக்கை என்ற அடிப்படையில் நோக்கினால், அண்ணன் பீஜேவின் வாதம் வலுவற்றது. இஸ்மாயில் ஸலஃபிக்கு அவர் பக்கம் மறுப்பெழுதியிருப்பதைப் பார்க்கும் பொழுது  பரிதாபமாக இருக்கிறது. அர்த்தமற்ற தனது குர்ஆன் மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு கூறியதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார்; பாவம் அண்ணனின் நிலை இப்படியா ஆகவேண்டும்? ஒரு காலத்தில் தனது தொழில்முறை எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த அண்ணன் பீஜெவின் காலம் முடிந்துவிட்டது என்பதை இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை. அன்று அண்ணன் பீஜே அவர்களின் தீவிர ரசிகனாக இருந்த எனக்கு இதைப் பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

சிலரை சில காலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது. (இதை எதற்காக இங்கு சொல்கிறேன்?)

அண்ணன் பீஜே அவர்களும், அவரது விசிலடிச்சான் குஞ்சுகளும்,
ஸிஹ்ர்எனும் ஒரு கலை உண்டு, அதன் மூலம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்.

என்ற தங்களது முந்தைய நிலைபாட்டிலிருந்து,

சிஹ்ர் என்ற ஏமாற்றுக் கலை உலகில் உள்ளது. இப்படி ஏமாற்றுவது பாவம். ஆனால் இதனால் ஒன்றும் செய்யவே முடியாது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

என்ற நிலைக்குப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர்.  இது ஏன் என்ற இஸ்மாயில் ஸலஃபி  அவர்களின் கேள்விக்கு,

தவ்ஹீதின் அடிப்படையே இதுதான். மனிதன் குறைவான அறிவுள்ளவன். அதனால் அவனிடம் தவறுகள் ஏற்படாமல் இருக்காது. முன்னர் சொன்னதில் சிலவற்றைப் பின்னர் மாற்றிக் கொள்ளாத ஒரு நல்லறிஞர் கூட வரலாற்றில் இல்லை. தவறு என்று தெரிய வரும் போது அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

என்று அண்ணன் பீஜே பதிலளிக்கிறார்.

நாம் இங்கிருந்து துவங்குவோம்.

தஜ்ஜால்
தொடரும்...


பின்குறிப்பு:
அண்ணன் பீஜேவை விமர்சிப்பது நமது நோக்கமல்ல எனினும் த..ஜ வையும் பீஜே அவர்களையும் இணைத்தே பார்க்க வேண்டியுள்ளதால், அண்ணன் இங்கு விமர்சனத்திற்குள்ளாகிறார்.