Tuesday 29 October 2013

விவாதம் :

பூமராங் Vs தஜ்ஜால்

இரண்டு மாதங்களுக்கு முன்   எனக்கும் ”பூமராங்” என்ற புனைப்பெயரிலிருக்கும் ஒரு இஸ்லாமிய நண்பருக்குமிடையயே சிறிய விவாதம் ஒன்று நடைபெற்றது. அதிலிருந்து...

தஜ்ஜால் அழிப்பவன் 
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?/// 

பூம ராங்:
திருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல..! திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம்.! அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை(மரண தண்டனை) என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..!

எனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..!

பிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்.. அகக்குருடு..புறக்குருடு..! புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது.. 
இருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..!

விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்..!  

Mohamed Iqbal Basheer Ahamed:
 தன்னை நாத்திகன் என்று அடையாள படுத்தி கொண்டு இஸ்லாத்தை மட்டும் சாடுவதே தஜ்ஜால் அவர்களின் வேலை.இவருக்கும் இஸ்லாமோபோபியா தான இருக்கு.ஆனால் இவர் தன்னை நாதிகம் என்று அடையாள படுத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Iqbal Basheer Ahamed, என்னைப்பற்றி ஆராய்வதைவிட நண்பர் பூமராங்கிற்கு உதவலாம்.

Mohamed Iqbal Basheer Ahamed :
ஆராயும் அளவிற்கு இஸ்லாமொபோபியாவை தவிர உங்களிடம் ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும் சகோதரர் தஜ்ஜால்

பூம ராங் :
Mohamed Iqbal Basheer Ahamed// ப்ளீஸ் ..குப்பையை நோண்டாதீங்க ..!

Mohamed Iqbal Basheer Ahamed:
 ம்ம் சரி சகோதரர் பூம ராங்

தஜ்ஜால் அழிப்பவன்:
 Basheer Ahamed , இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா?

பூம ராங் :
“நம்பிக்கை கொண்டோரே..! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை..!” (அல்குர்ஆன்-4:19)

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங், குர்ஆன் 4:19 என்ன கூறுகிறது என்பதைக் கூட அறியாமல் பதிவிடும் உங்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்.

Mohamed Iqbal Basheer Ahamed :
 //இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா?// இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கின்றீர்கள்.காரணம் கேட்டால் இஸ்லாம் மனிதர்கள் சிந்திப்பதை தடை செய்கிறது என்பீர்கள்.பிறகு எப்படி நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேரினீர்கல் என்று கேட்டால் பதில் வராது. சரி நீங்கள் வாதத்தை தொடருங்கள்.தேவை இல்லாத பேசி வாதத்தை நான் திசை திருப்ப விரும்பவில்லை.

தஜ்ஜால் அழிப்பவன் :
குர்ஆன் 4:19 ற்கு அறிஞர் பீஜே தரும் விளக்கம்.
403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
இந்த நாகரீக உலகில் கூட இந்தநிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கியது.

தனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.
இஸ்லாமிய வரம்பை மீறி விடாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப்பறை சாற்றுகின்றன.
பூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி.

பூம ராங் :
// பூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி// அப்படியெல்லாம் நழுவி ஓடிட முடியாது, தஜ்ஜால் ..! எனக்கு குர்ரான் தெரியாது என்று உங்களிடம் சொன்னேனா ..? விவாதிப்போம் வாங்க என்று தான் முதலிலிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறேன் ... பிறகு ஏன் இந்த ஓட்டம் ..?

பூம ராங்:
 மாலைநேர அசர் தொழுகை முடித்து வருகிறேன் ..இன்ஷாஅல்லாஹ்..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 //பிறகு ஏன் இந்த ஓட்டம் ..?// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது!

பூம ராங் :
//பிறகு ஏன் இந்த ஓட்டம் ..?// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது//
உங்களுடைய இந்த முடிவை நண்பர்கள் மத்தியில் வைக்கிறேன்..! (இல்லைனா இருக்கவே இருக்கிறாரு ‘நடுநிலை’ நேற்று படமெல்லாம் போட்டு காண்பிச்சாரு..அ...சாமி)
இந்த விவாதத்தில் “தஜ்ஜால் அழிப்பவன்” வென்று விட்டாரா..? நான் இன்னும் எடுத்து வைக்காத வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டதா..?
சொல்லுங்கள், நண்பர்களே..!

பூம ராங் :
 திருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
 //திருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..?//நாம் இங்கே விவாதிப்பது கற்பழிப்பு பற்றி ..கற்பழிப்புக்கும் குர் ஆன் 4:19-க்கும் என்ன சம்பந்தம்..?//யாரோ ஒருவர் பூமராங் என்ற பெயரில் இப்படி ஒரு பதிலைக் கூறியிருக்கிறார். அது நீங்கள் இல்லையா பூமராங்?

பூம ராங் :
//இதுக்கும் கற்பழிப்புக்கு நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..?

பூம ராங் :
 //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..?


தஜ்ஜால் அழிப்பவன் :
 //நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..?// நானும் அதையேதான் கேட்கிறேன் குர் ஆன் 4:19 -ஐ இங்கு பதிவிட்டது யார்?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் போலி ஒருவன் உலவுகிறான் என்று நினைக்கிறேன்.


பூம ராங் :
 // அது தெரியாமால உங்களிடம் வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறேன் ..? //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..?•        
/ நான் பதிந்த குர் ஆன் 4:19 வசனத்திற்கு ..தனியொரு விளக்கம் தேவைப் படவில்லை .. ஆனால் நீங்கள் வேறொன்றை மனதில் வைத்துக் கொண்டு தான் ..கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்று கேட்டீர்கள் ..அதற்கு நான் பதிலளிக்க முற்பட்ட பொழுது ..நீங்கள் பீஜே யின் விளக்கத்தை பதிந்து விட்டு ..ஒடுனிர்கள் ..அதனால் தான் உங்களுக்கு மயக்கம் தெளிவிப்பதற்காக ..நான் திரும்ப திரும்ப ..உங்கள் மூலமாகவே ..உங்களை தலைப்புக்கு கொண்டு வர முயற்சி செய்கிறேன் ..! சொல்லுங்கள்..! /////உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..?

தஜ்ஜால் அழிப்பவன் :
 //எப்படி ..?//
இது எனது கேள்வி :
கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?

கற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.

பூம ராங் :
//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?//சம்பந்தமே இல்லாமல், போலி பூமராங்(?) குர் ஆன் 4:19 முன்வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

பூம ராங் :
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///
திருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல..! திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம்.! அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..!

எனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..!
பிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்..
அகக்குருடு..புறக்குருடு..! புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..
இருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..!
விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்..!
//தஜ்ஜால் அழிப்பவன் //கற்பழிப்பை சுட்டுகிற -விளக்குகிற வார்த்தை குர்ஆனில் இருக்கிறது ..வசனமும் இருக்கிறது ..! // இந்தக் கதைகளெல்லாம் வேண்டாம் குர்ஆன் வசனத்தைக் கூறவும்/// உங்களுக்கு தாகமெடுத்தால் குடிப்பதற்கு ..தண்ணீர் வேண்டுமா ? வாட்டர் வேண்டுமா ? வெள்ளம் வேண்டுமா ? பச்சநீலு வேண்டுமா ? மோய் வேண்டுமா ..? என்ன வேண்டும் ..!

இது இதே கேள்வியை எதிர் கொண்டு தந்த பதில்கள் ..அதிலுள்ள ஒரு கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்ல வில்லை..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 மறுபடியும் முதலில் இருந்தா?


பூம ராங் :
 ///இது எனது கேள்வி :
கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?
கற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.//
என்னிடம் பதில் இருக்கிறது என்று தான் முன்பும் சொன்னேன் ..இப்பொழுதும் சொல்கிறேன் ..! // மறுபடியும் முதலில் இருந்தா? /// விவாதத்தை சரியாக நடத்தாமல் நழுவி நழுவி ஓடினால், அது தான் உங்களுக்கு தண்டனை ..! அதனால் முறையாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் ..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 //இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கேட்பது புரியவில்லை? கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்.


Kulasai Voice :
மறுபடியும் முதலில் இருந்தா?///ஏம்னே!!!ஒத்துக்க வேண்டியது தானே!!!


பூம ராங் :
//இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கேட்பது புரியவில்லை? கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்/// //எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?


தஜ்ஜால் அழிப்பவன் :
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? // இதில் என்ன புரியவில்லை? ///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?// குர்ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது?


பூம ராங் :
 //கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? // இதில் என்ன புரியவில்லை// மௌனம் காக்க வில்லை ..அதனை சகித்துக் கொள்ளவும் செய்யாது ..அதற்கு திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் ..!  திருக்குரானின் சட்டப்படி கற்பழிப்புக்கு CAPITAL PUNISHMENT..மரண தண்டனை ..! அது பகிரங்கமாக நிறைவேற்றப்படும் ..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 //திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன்? பதில் தெரியுமா? தெரியாதா?


பூம ராங் :
///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?// குர் ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது? // பெண்கள் மீது யாரும் வலுக்கட்டாயம் செய்ய முடியாது ..அவளுடைய சம்பந்தமில்லாமல் அவளை யாரும் திருமணத்தின் மூலமாக கூட சொந்தம் கொண்டாட முடியாது ..இத்தியாதி ..இத்தியாதி ..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 //திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன்? பதில் தெரியுமா? தெரியாதா?
தொடரும்...

Wednesday 16 October 2013

மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா - விவாதம் பாகம் 2

மௌலானா  அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு இரண்டாவது மின்னஞ்சல் - பாகம் 2




17/11/2007

மௌலானா அஜ்மல் காத்ரி  
திரு அலி,
முதலில் நான் வேண்டிக்கொள்ள விரும்புவது, முஹம்மது நபியை (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தியும் ஆசியும் உண்டாகட்டும்) பற்றி அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவதை  நிறுத்துங்கள்  என்பதுதான்... நீங்கள் மனிதத்தை மதிப்பதாக இருந்தால், நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணர்வுகளுக்கு  நீங்கள் மதிப்பும் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும்.

அன்பார்ந்த மௌலானா,
நான் முஹம்மதுவை அவமதிக்கவில்லை. நான் அவருக்கு எதிராக குற்றசாட்டுகளை வைக்கிறேன். முஹம்மது திருடராகவும், வெகுஜன படுகொலைகாரராகவும், கற்பழிப்பவராகவும் இருந்தார் என்று நான் கூறினால், நான்  ஹதீத், சீறா  மற்றும் குர்ஆனை ஆதாரங்களாக பயன்படுத்தி என்னுடைய உரிமைகோரல்களை   நிரூபிக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகளை  பொய்யென்று நிரூபிப்பது உங்களை சார்ந்தது.

நம்பிக்கைகள் என்பதைப்பற்றி சொல்வதென்றால், நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று யார் சொன்னது? நம்பிக்கை கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள்(நஜீஸ்);  அவர்களை சிலுவையில் அறையுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளை வெட்டுங்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய எதிரிகள், அவர்கள் நரகத்தின் எரிபொருள் ஆவார்கள் என்று கூறுகிற ஒரு மதத்தை எவரும் ஏன் மதிக்க வேண்டும்? நான் நம்பிக்கை கொள்ளாவதன் என்பதால் இது எனக்கு அவமரியாதை. எனக்கு எதிரான ஒரு அவமரியாதையை நான் ஏன் மதிக்க வேண்டும்?

மனிதர்களுடைய நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும் என்று நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். அது மடத்தனமானது. எந்த நம்பிக்கையையும், நம்முடைய சொந்த நம்பிக்கையையும் கூட நாம் மதிக்க வேண்டியதில்லை. நாம் எப்பொழுதுமே நம்பிக்கைகளை குறித்து கேள்வி கேட்க வேண்டும். மனிதர்கள் வளர்ச்சி அடைவதற்கு இது ஒன்றே வழி. நாம் நம்பிக்கைகளை மதித்து, அவைகளை குறித்து கேள்வி கேட்கவில்லை என்றால், அவைகளுக்கு சவால் விடவில்லை என்றால், பொய்யான நம்பிக்கைகளை நாம் எப்படி விட்டொழிக்கப் போகிறோம்? 

மேலும், மற்றவர்களுடைய நம்பிக்கைகளை முஸ்லிம்கள் மதிக்கிறார்களா? அவர்கள் எங்கெல்லாம் பெருவாரியாக இருந்து அவர்களுடைய கை ஓங்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பது, பஹாய்களையும்(Bahais) சீக்கியர்களையும் அஹ்மதிகளையும் ஹிந்துக்களையும் கொலை செய்வது என்பது ஏன்? முஸ்லிம்கள் தினந்தோறும் ஓதுகின்ற சூரா பாத்திஹா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவமரியாதை இல்லையா? முஸ்லிம்களை மறந்து விடுங்கள். முஹம்மது அவருடைய காலத்து மக்களின் நம்பிக்கையை மதித்தாரா? அவர் கஅபாவை உடைத்து உட்புகுந்து அந்த கோயிலை ஏன் அழித்தார்? அது அரபுகளுடைய மதத்தின் புனிதத்தை மிக அவமரியாதை படுத்தியது இல்லையா? அவர் தன்னுடைய பள்ளிவாசலை வேறு எங்காவது ஆரம்பித்து இருக்க முடியும். ஏன்  அவர் மக்களின் தெய்வங்களை தாக்கி அவமரியாதை படுத்த வேண்டும்? மற்ற முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியை அவர் ஏற்படுத்தினார். விளைவாக, அவர் இருந்ததை போலவே, அவரை பின்பற்றுபவர்களும் துஷ்டர்களாகவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுகிறார்கள்; மதத்திலிருந்து வழி தவறியவர்கள் என்று ஒருவரை ஒருவர் கூறுகிறார்கள்; ஒருவரை ஒருவர் கொலை செய்கிறார்கள். அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் கைகளில் போர்களில் கொல்லப்பட்டதைவிட அதிகமாக, சொந்த மதப்பிரிவு சண்டைகளில், சொந்த முஸ்லிம்களின் கைகளில்தான் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கொல்லுதல் என்பது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உங்களுடைய நம்பிக்கையை மதிக்கும்படி மற்றவர்களை நீங்கள் கேட்டுக்கொள்ளும்போது, மற்றவர்களுடைய நம்பிக்கைகளை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் என்பதை தயவுகூர்ந்து ஆழ்ந்து பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் மற்ற மதங்களுக்கு வழங்குவதைக் காட்டிலும் மிக அதிகமான சுதந்திரத்தையும் உரிமைகளையும் முஸ்லிமல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள். ஷரியத்தை எதிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட வேண்டும் என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள். மனிதர்களுடைய நம்பிக்கையை இப்படிதான் நீங்கள் மதிக்கிறீர்களா? நீங்கள் ஒரு மரியாதையையும் கொடுக்காதபோது, நீங்கள் மட்டும் மரியாதையை கேட்கிறீர்கள்.

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் இறுதியான, வல்லமையான தூதர். சரியானது, தவறானது என்பதை குறித்து தீர்ப்பளிப்பதற்கு  குர்ஆனே அளவுகோல்(புர்கான்). குர்ஆனால் வழங்கப்படும் நம்பிக்கை(ஈமான்) எனும் அளவுகோல் எதுவானாலும் அது இறுதித்தூதரின் உம்மதிற்கே(சமுதாயம்) கொடுக்கப்படுகிறது என்பதை குறித்து உங்களுடைய மனதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நல்லது, நான் அதை சந்தேகிக்கிறேன். அதனால்தான் இந்த உரிமைகோரலை தர்க்கப்பூர்வமான வழியில் நிரூபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு கூறுவதினாலேயே நான் நம்பிவிட மாட்டேன்.  அந்த உரிமைகோரல்களுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? மேலும் முஹம்மது அவ்வாறு கூறுவதினாலேயும் நான் நம்பிவிட மாட்டேன். எனக்கு ஆதாரம் தேவை. முஸ்லிம்கள் ஆதாரத்தை உரிமைகோரலோடு போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். எந்த ஆதாரத்தையும் கொடுப்பதிற்கு பதிலாக, ஒரு பொய்யை அடித்துக் கூறினால் அது உண்மை ஆகிவிடும் என்பதைப்போல, அவர்கள் உரிமைகோரலையே  திருப்பித் திருப்பி கூறுகிறார்கள்.

நான் உங்களுடன் தர்க்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட மாட்டேன். ஏனெனில், சுத்தமான தர்க்க அறிவு(pure logic) உங்களை சந்தேகவாதத்தையோ (Agnotism) அல்லது நாத்திகத்தையோ நோக்கி வழிநடத்தி செல்லும். நீங்கள் ஆன்மீகத்தில் நம்பிக்கைக் கொண்டு, உங்களுடைய இதயத்தை உங்களுடைய பகுத்தறிவு பின்பற்றும்படி அனுமதிக்காத பட்சத்தில் அது உங்களை எப்பொழுதும் தவறாகவே வழிநடத்தி செல்லும்... ஏனெனில் ஆத்மாவின் உறவு இதயத்தோடுதான் உள்ளது. ஆத்மாவானது தன்னுடைய சொந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது(அதனுடைய சொந்த கண்கள், காதுகள், முதலியன). சூரா பக்கராவில் கூறப்படுவதைபோல், குர்ஆன் முஹம்மது(ஸல்) நபியின் இதயத்தில் வெளிப்படுத்தப்பட்டது... அதனால்தான் எவருடைய ஆத்மாக்கள் செத்துவிட்டனவோ அவர்களை அல்லாஹ் "செவிடர்கள், ஊமைகள்" என்று விளிக்கிறான்.

அது ஒரு வல்லமையான அறிக்கைதான். தர்க்க அறிவு சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லுமென்றால், கடவுளிடம் நம்பிக்கை கொள்வது தர்க்க அறிவுக்கு புறம்பானது என்று அதற்கு பொருள் ஆகாதா? கடவுள் கொடுக்கவில்லை என்றால், மனிதர்களாகிய நமக்கு நம்முடைய மூளையை யார் கொடுத்தது? நம்முடைய மூளையை பயன்படுத்துவது ஏன் சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லும்? கலீலேயோ குறிப்பிட்டது போல், நம்முடைய மூளையை பயன்படுத்துவதை கடவுள் விரும்பவில்லை என்றால், ஏன் அதை அவர் நமக்கு தர வேண்டும்? கடவுளை கண்டடைய தர்க்க அறிவை நாம் பயன்படுத்தக்  கூடாது என்றால், நாம் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? 

தங்களுடை பொய்களால் எண்ணற்ற மக்களை ஏமாற்றி அவர்களிடம் உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; பகுத்தறிவு சிந்தனையை முயற்சி செய்யாதீர்கள்; தர்க்க அறிவை பயன்படுத்தாதீர்கள்; வெறுமனே நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுடைய இதயத்தை திறந்து நாங்கள் சொல்கிற எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாக நம்புங்கள்; ஏனென்றால் இந்த மூளையற்ற ஏற்பு உங்களை வழிகாட்டலுக்கு இட்டு செல்லும் என்று கூறிய போலி தீர்க்கதரிசிகளுக்கு(நபிமார்கள்) பஞ்சமே இல்லை. இந்த பரிதாபமான மக்கள் இரட்சிக்கப் படவில்லை; ஆனால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதற்காக அதுதான் நீங்கள் ஏற்றுக்கொள்கிற இடர்ப்பாடு(risk). கடவுளுடைய செய்தி தர்க்கப்பூர்வமானது  இல்லையென்றால், அது கடவுளுடைய செய்திதான் என்று நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்?
நீங்கள் கூறுவதற்கு முரணாக, கடவுள் பகுத்தறிவு உள்ளவராக இருப்பதால், நாம் உளறல்களை நம்புவதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். பொய்மையிலிருந்து உண்மையை வேறுபடுத்துவதற்கான அறிவை அவர் நமக்கு வழங்கினார். வாழ்க்கையில் சிறு விஷயங்களில் நம்முடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக நாம் இருக்க வேண்டும் என்றால், கடவுளை கண்டடைய ஏன் நாம் தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்கக்கூடாது? 

நீங்கள் சதியை காணவில்லையா? நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாது என்று முஹம்மது ஏன் வலியுறுத்தினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது ஏனென்றால், அவருடைய உரிமைகோரல் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்பது அவருக்கு தெரியும். தான் ஒரு பொய்யர் என்பது அவருக்கு தெரியும். மக்கள் தங்களுடைய மூளையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உண்மையை கண்டுவிடுவார்கள்; தன்னுடைய பொய்களை ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும்.

வழிகாட்டலை கண்டடைவது என்று வரும்போது, நாம் மடத்தனமாக இருப்பதை கடவுள் விரும்புகிறார் என்று நம்புவது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாதென்றால், எந்த மதம் உண்மையானது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவைகள் எல்லாமே நம்முடைய இதயத்திடம் முறையிட்டு, நம்முடைய மூளையை பயன்படுத்துவதற்கு எதிராக நம்மை எச்சரிக்கின்றன. எந்த ஒன்று சரியான ஒன்று? அதிக தர்க்க அறிவுப்பூர்வமாக உள்ள ஒன்றை நாம் பின்பற்ற வேண்டுமா அல்லது நம்மை அதிகமாக மிரட்டுகிற ஒன்றையா?

தர்க்க அறிவைக்கொண்டு மட்டுமே நாம் உண்மையை கண்டடைய முடியும். உண்மை தர்க்க அறிவுப்பூர்வமானது. பொய்மையே தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. முஹம்மது கடவுளுடைய உண்மையான தூதர் இல்லை என்பதை காண்பதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் இதுதான். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள், கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று ஒருவர் உங்களிடம் கூறினால், நீங்கள் உடனடியாக அவரைவிட்டு விலகிவிட வேண்டும். ஏனென்றால் அந்த நபர் கடவுளுடைய தீர்க்கதரிசி அல்ல. அவர் ஒரு கபட வேடதாரி. முஹம்மது ஒரு பொய்யர் என்பதை காண்பதற்கு இது போதுமானதாக இல்லையா?

யார் செவிடன், ஊமையன், குருடன்? தன்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக உண்மையை கண்டடைபவனா அல்லது சிந்திக்காமல் நம்பிக்கை கொள்பவனா? இஸ்லாத்தை பொய்யென்று நிரூபிப்பது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் காண்கிறீர்களா?

தர்க்க அறிவினால் நீங்கள் கடவுளிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடுவீர்கள் என்பது உண்மையல்ல. தர்க்க அறிவினால் நீங்கள் முஹம்மதுவிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையைத்தான் இழந்து விடுவீர்கள். முஹம்மதுவுக்கு கடவுளை பற்றிய புரிதலே இருந்ததில்லை. கடவுளை பற்றி அவர் என்னவெல்லாம் சொன்னாரோ, அவை எல்லாமே அறிவீனமானது. தான் விரும்புகிற எதையும் செய்கிற, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத, போற்றி புகழப்பட விரும்புகிற, மூளையற்ற நம்பிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கிற, சுதந்திர சிந்தனையாளர்களை தண்டிக்கிற சதாம்  ஹுசேனை போன்ற, துன்புறுத்தி இன்பம் காணும்(sadist) சர்வாதிகாரியை போன்று கடவுளை அவர் உருவகித்தார். கடவுளை பற்றிய வரையறை அதுவல்ல.

முஹம்மதுவை போன்ற இவ்வளவு குறைவான மதிநுட்பம் உள்ள ஒரு மனிதனால் கடவுளுடைய மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் அவரை மனம் போனபோக்கில் ஆட்சி செய்பவராக அவர் விவரித்தார். கடவுளை பற்றிய முஹம்மதுவின் புரிதல் மடத்தனமானது. அதனால்தான் நீங்கள் உங்களுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சி செய்யும்போது, அவருடைய அல்லாஹ்விடம் நீங்கள் நம்பிக்கையை இழந்து விடுகீர்கள். முஹம்மதுவுடைய கடவுள் தர்க்க அறிவுக்கு புறம்பானவர். மிகவும் அறியாமை மிக்க ஒரு மனிதனுடைய மனதில் உருவகிக்கப்பட்ட உண்மையில் இல்லாத ஒரு பாத்திரம் தானே ஒழிய, அவர் கடவுள் இல்லை.

நான் இஸ்லாத்தை துறந்த பிறகு நான் கடவுளை கண்டடைந்தேன். நான் அதை தர்க்க அறிவினால் கண்டேன். கடவுளை கண்டடைய நான் பகுத்தறிவை விட்டுவிடவேண்டி வரவில்லை. உண்மை தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்க முடியாது. பொய்மைதான் தர்க்க அறிவுக்கு புறம்பானது. கடவுள் என்பது படைப்பின் அடிநாதமாக விளங்கும் ஒரே கோட்பாடு (Single Principle) ஆகும், ஒரு சர்வாதிகாரி அல்ல.

மனிதகுலம் பிளவுபட்டு இருப்பதற்கு காரணம், மனிதர்களில் பெரும்பான்மையினர் தர்க்க அறிவுக்கு புறம்பான கடவுளர்களில் நம்பிக்கை கொள்வதுதான். நாம் இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிட்டு, தன்னை கண்டடைவதற்காக கடவுள் நமக்கு கொடுத்துள்ள மிகப் பெரிய பரிசை நாம் பயன்படுத்தினால், நாம் எல்லோருமே உண்மையான ஒரே கடவுளை கண்டடைவோம். மனித இனத்திற்கு இடையே உள்ள இந்த பிளவுகள் மறைந்து போகும். 

நீங்கள் ஷைத்தானால் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (அவற்றை மின்னஞ்சலில் கூற மாட்டேன்) எனக்கு காண்பிக்கப் படும்வரை, நானும் இஸ்லாத்தையும் முஹம்மது (ஸல்) நபியையும் பற்றி இதே மாதிரியானவைகளை கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுகின்ற ஒவ்வொன்றும் உண்மையானதுதான் என்பதை அல்லாஹ் எனக்கு நிரூபித்து விட்டான்(சந்தேகமே இல்லை).

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (signs/ஆயாத்) உங்களுக்கு காண்பிக்கப்பட்டன என்றால், அவைகள் எனக்கு காண்பிக்கப்படவில்லையே. நீங்கள் நம்புவதை நான் நம்ப முடியாது. ஏனெனில் நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்கவில்லை. அத்தாட்சிகள் இல்லாத பட்சத்தில் நான் செய்யக்கூடியதெல்லாம், என்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சிப்பதுதான். நான் அதை செய்யும்போது, முஹம்மது ஒரு கபட வேடதாரி என்பதை நான் பார்க்கிறேன். நான் திரும்பவும் கூறுகிறேன். என்னுடைய புகார் கடவுளை பற்றி அல்ல. நான் நிராகரிப்பது முஹம்மதுவைத்தான். கடவுளோடு முஹம்மதுவுக்கு எந்த தொடர்பாவது இருந்தது என்று நான் நினைக்கவில்லை. அவர் கடவுளை புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவு.

பகுத்தறிவுக்கு புறம்பாக நாம் அவரிடம் நம்பிக்கை கொள்வதை கடவுள் விரும்புவாரா? அது இறைநிந்தனை(blasphemy). கடவுள் பகுத்தறிவுக்கு புறம்பானவர் அல்ல. சாத்தான் தான் பகுத்தறிவுக்கு புறம்பானவன். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று முஹம்மது உங்களிடம் கூறுகிறார் என்றால், முஹம்மது சாத்தானிடமிருந்து வந்தவர்தனே ஒழிய அவர் கடவுளிடமிருந்து வந்தவர் அல்ல என்பதற்கு அதுவே நிரூபணம்.

பரிதாபமான முஸ்லிம்களுக்கு அதுதான் நிகழ்ந்திருக்கிறது. சாத்தானையையே அன்றி, கடவுளை அவர்கள் வணங்காததால் அவர்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள்; ஒவ்வொருவரோடும், தங்களுக்குள் மற்ற ஒவ்வொருவரோடும் நிலையாக போரில் ஈடுபடுகிறார்கள். ஏன் பூமியில் முஸ்லிம்களே மிகவும் ஏழைகளாகவும் மிகவும் துர்பாக்கியமான நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஏன் அவர்கள் நிலையாக தங்களுக்குள் ஒவ்வொருவரோடும் மற்ற ஒவ்வொருவரோடும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்? அது ஏனென்றால், அவர்கள் சாத்தானை வணங்குகிறார்கள் என்பதுதான்.

கடவுளுடைய அத்தாட்சிகளை பற்றி நீங்கள் பேச முடியாது என்று கூறுகிறீர்கள். அது எனக்கு என்ன நன்மையை செய்கிறது? அந்த அத்தாட்சிகள் யதார்த்தமானது என்றால், நீங்கள் தர்க்க அறிவுப்பூர்வமான வழியில் அவைகளை விளக்க முடியும். நீங்கள் தவறாக வழிநடத்தப் படவில்லை என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்? அந்த அத்தாட்சிகளை பற்றி எனக்கு கூறுங்கள். நீங்கள் முட்டாளாக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் நிரூபிப்பேன். நான் என்னுடைய மூளையை பயன்படுத்த வேண்டுமா அல்லது உங்களுடைய மூளையையா? நீங்கள் கண்ட அத்தாட்சிகள் உங்களை திருப்தி படுத்தினால் அது உங்களுக்குத்தான் நல்லது! நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்காதவரைக்கும் நான் நம்ப வேண்டியதில்லை. ஆதாரம் இல்லாமல் நம்பிக்கை கொள்வது முட்டாள்தனமாக ஆகிவிடும். பகுத்தறிவுக்கு புறம்பான மற்ற ஏராளமான மதங்களில் ஒன்றில் நம்பிக்கை கொள்ளாமல் இஸ்லாத்தில் நான் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்?

இஸ்லாம் அழகானதாகவும் அமைதிப்பூர்வமானதாகவும் இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொன்றும் மனித இயல்புக்கு இசைவானதாக இருக்கிறது.

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில்தான் உள்ளது. நீங்கள் இஸ்லாத்தை அழகானதாக பார்க்கிறீர்கள்.நான் அதை அசிங்கமானதாக பார்க்கிறேன். அது தனிப்பட்ட நம்பிக்கைகளை/கருத்துக்களை  அடிப்படையாகக்  கொண்டது(subjective). நாம் அழகியல் என்பதிற்குள் இறங்காமல் இருப்போமாக! எப்படியாயினும், இஸ்லாம் அமைதிப்பூர்வமானது அல்ல. அந்த உரிமை கோரல் ஒரு தமாஷ். முஸ்லிம்கள் எப்பொழுதும் சண்டையில்தான் ஈடுபடுகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் முஹம்மதுவே 78 அதிரடி கொள்ளை தாக்குதல்களை நடத்தினார். "சண்டையிடுவது உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது"(குர்ஆன் 2:216), "நீங்கள் ஜிஹாதில் சண்டையிடவில்லையென்றால், கடுமையான வேதனையைக் கொண்டு அல்லாஹ் உங்களை தண்டிப்பான்"(குர்ஆன் 9:39) என்று குர்ஆன் கூறுகிறது.

இஸ்லாம் அமைதிப்பூர்வமானது என்று கூறுவது கேலிக்குரியது. இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக உள்ளது என்று நீங்கள் கூறும்போது நான் மாறுபட வேண்டியிருக்கிறது. மனித இயல்புக்கு இசைவாக ஏதாவது இருந்தால், அது இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடியும். இஸ்லாம் இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடிவதில்லை. அது போதனை செய்யப்பட வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அதற்கு அடிபணிய விருப்பமில்லாதவர்களின் மேல் அது திணிக்கப்பட வேண்டியிருக்கிறது. அது இயல்பானது அல்ல என்பதற்கு இதுவே நிரூபணம். காதலில் விழுவது இயல்பானது. ஆர்வம் இயல்பானது.  மகிழ்ச்சியையும் நிறைவையும் நாடுவது இயல்பானது. இவைகளே திணிப்பு இல்லாமல் இயல்பாக நாம் செய்ய விரும்புவது. ஒரு நம்பிக்கையானது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால் அது இயல்பானது அல்ல.

இஸ்லாம் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்று முன்பு நீங்கள் கூறினீர்கள். இயல்பான ஒன்று எப்படி தர்க்க அறிவுக்கு புறம்பானதாக இருக்க முடியும்? மேலும் அது இயல்பானது எனில், ஜிஹாத் (புனித போர்) நடத்தி வாளினால் மற்றவர்கள் மேல் இஸ்லாத்தை வலுக்கட்டாயமாக திணிக்கும்படி ஏன் முஹம்மது தன்னை பின்பற்றியவர்களுக்கு கட்டளையிட்டார்? ஜிஹாத் என்ற கருத்தாக்கமே இஸ்லாம் மனித இயல்புக்கு எதிரானது என்பதற்கு நிரூபணம் ஆகும். அனுமதிக்கப்பட்டதை ஏவுவது; தடை செய்யப்பட்டதை தடுப்பது(amr bi’l ma’ aroof and nahy anil munkar) என்ற கருத்தே இஸ்லாம் மனித இயல்புக்கு முரணானது என்பதற்கு நிரூபணம் ஆகும்.  இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக இருந்தால், ஏன் அதை மனிதர்களின்மீது வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய தேவை இருக்கிறது?

உங்களுடைய தகவலுக்காக, இந்த உலகில் இன்னும் முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்கள் (காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய விசேஷ பார்வையை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்திருக்கிறான்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் அவுலியாக்களும் (நண்பர்கள்/உதவி செய்பவர்கள்), முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்களும் அல்லாஹ்விடமிருந்து முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்டது போன்ற  விசேஷ சக்திகள் கொடுக்கப்படுகின்றனர். முஹம்மதுவின் (ஸல்) நபித்துவத்திற்கு அவர்களே வெளிப்படையான ஆதாரமாக உள்ளனர். இவர்களில் ஒருவரிடம் அல்லாஹ் உங்களை கொண்டு வருவானாக. ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்.

முஹம்மதுவை உண்மையாக பின்பற்றுபவர்களான இவர்களில் எவராவது அவருடைய உரிமை கோரலை நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால், எனக்கு எழுதும்படி தயவுசெய்து அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்.

என்னை மறந்து விடுங்கள். நான் உருப்படாதவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த தளத்தை படிக்கின்ற இலட்சக்கணக்கானவர்களை பற்றி அல்லாமல், நீங்கள் என்னை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்மையை அறிய வேண்டியத் தேவை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லையா? விசேஷ சக்திகள் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம்களை தயவுசெய்து அனுப்பி வையுங்கள். இறுதியாக இஸ்லாத்தின் உண்மையை அவர்கள் நிறுவட்டும்.

முஸ்லிம்களுக்கு விசேஷ சக்திகள் எதுவும் கிடையாது. அது பொதுமக்களின் விருப்பங்களுக்கும் ஒருதலைபட்சதுக்கும் ஏற்ப நடந்துகொள்ளும் அரசியல் தலைமைத்துவம் (Demagogy). இந்த வெற்று பேச்சுக்களால் எளிதில் ஏமாறக்கூடியவர்களை மயக்கலாம். ஆனால் சுதந்திரமாக சிந்திப்பவர்களை அல்ல. இஸ்லாம் என்பது ஒரு பொய் என்று எண்ணற்ற முஸ்லிம்களை நான் ஏற்றுக்கொள்ளும்படி செய்துள்ளேன். அதிகமான மக்கள் இந்த தளத்தை படிப்பார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை கட்டாயமாக வளர  உள்ளது. காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய உங்களுடைய ஞானம் பெற்ற அவுலியாக்களின் மறுப்பை நான் வெளியிடுவேன் என்ற என்னுடைய வாக்கை நான் உங்களுக்கு தருகிறேன். அதைப்பற்றி அவர்கள் எங்களுக்கு கூறட்டும். அவர்கள் எங்களுக்கு அத்தாட்சிகளை கொடுக்கட்டும். வருகை புரிந்து, நான் எவர்களை தவறாக வழிநடத்தி னேனோ அவர்களை வழிநடத்தும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

பனி இஸ்ரவேலின் தீர்கதரிசிகள் (நபிமார்கள்) முஹம்மது நபி (ஸல்) யை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். ஏனென்றால் நபியுடைய (ஸல்) அவுலியாக்களின் அந்தஸ்து என்ன என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த உம்மத்தினுடைய (சமுதாயம்) அந்தஸ்து என்ன என்பதை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் தவறான கைகளில் நீங்கள் நேரத்தை செலவிட்டிருக்கலாம். உங்களுடைய கருத்துருக்கள் (perceptions) தடுமாற்றமுள்ளதாக ஆகி இருக்கின்றன.

இது மதியீனமானது. முஹம்மதை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்கும்படி இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் பிரார்த்தனை செய்தார்கள் என்று யார் சொன்னது? இந்த முழுவதும் கேலிக்கதக்க உரிமை கோரலுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? ஆதாரமற்ற உரிமை கோரல்களை செய்வது முஸ்லிம்களாகிய உங்களுக்கு வழக்கம்தான். முரண்படுவதை நீங்கள் சகித்துக்கொள்ளமாட்டீர்கள் என்பதால் ஒருவரும் உங்களோடு முரண்படுவதற்கு ஒருபோதும் துணியவில்லை என்பதினால், நீங்கள் இந்த பொய்யான உரிமை கோரல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த பொய்களை உண்மையிலேயே நம்புகிறீர்கள். உண்மையிலிருந்து எதுவுமே தூரமாக இருக்கவில்லை. முஹம்மதுவை பின்பற்றுபவராக இருக்கும்படி ஒருவரும் பிரார்த்தனை செய்ததில்லை. ஏனெனில் முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசியாகவே இருக்கவில்லை. எந்த ஒரு மதத்தினுடைய எந்த புனித நூலிலும் முஹம்மது கூறப்படவில்லை. முஹம்மது பைபிளில் கூறப்பட்டுள்ளாரா? இல்லை, அவர் கூறப்படவில்லை.

பிரயோஜனமற்றது என்று நான் யூகிக்கிற ஒரு நீண்ட கலந்துரையாடலாகவே இது இருக்கும். ஏனென்றால் நான் உங்களுக்கு ஹிதாயத்தை (வழிகாட்டல்) கொடுக்க முடியாது.

அப்படியானால் நீங்கள் எனக்கு ஏன் எழுதினீர்கள்? நரக நெருப்பைக்கொண்டு நீங்கள் என்னை மிரட்டினால் நீங்கள் என்னிடம் எறிகிற எந்த பகுத்தறிவற்ற உரிமை கோரலையும் கண்மூடித்தனமாக நான் நம்பிவிடுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கு ஆதாரம் தேவை. நீங்கள் ஒன்றையும் தரவில்லை. நான் பகுத்தறிவுக்கு புறம்பான ஒரு கடவுளை நம்ப மாட்டேன்; கண்மூடித்தனமாக பின்பற்றுபவனாக இருக்க மாட்டேன்.

உங்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க அல்லாஹ் விதித்திருந்தால், அவன் உங்களை நரக நெருப்பில் போடுவதென்று முடிவு செய்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அது வரும். நீங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, மனம் வருந்தி, அறிஞர்களிடம் போகாமல் அல்லாஹ்வின் அவுலியா அக்ராமிடம் செல்லும்படி நான் உங்களை சும்மா எச்சரிக்கிறேன். உங்களுடைய தீர்வு அவர்களிடமே உள்ளது. இல்லையென்றால், சீக்கிரமாகவோ அல்லது பிறகோ ஆனால் நிச்சயமாக தண்டனை உங்களிடம் வரும்... என்னை நம்புங்கள்... வெகு சீக்கிரமாகவே, இன்ஷா அல்லாஹ்.

அவ்வளவுதானா? தர்க்க அறிவு ஒருவரை முஹம்மதின் கடவுளிடம் அவநம்பிக்கை கொள்ளும்படி செய்துவிடும் என்று முதலில் கூறுகிறீர்கள். ஏனெனில் அவருடைய கடவுள் தர்க்க அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானவர். பிறகு உங்களிடம் அத்தாட்சிகள் உள்ளன, ஆனால் நீங்கள் அவைகளை சொல்ல முடியாது என்று கூறுகிறீர்கள். பிறகு உங்களுக்கு ஹிதாயத் இல்லை என்று கூறுகிறீர்கள். முஹம்மது கடவுளுடைய உண்மையான தீர்க்கதரிசி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் இதுவரை கொடுக்கவில்லை. பிறகு நான் உங்களுடைய பகுத்தறிவுக்கு புறம்பான கடவுளையும் அவருடைய போலி தீர்க்கதரிசியையும் நம்பவில்லையென்றால், நான் நரகத்திற்கு அனுப்பப்படுவேன் என்று மிரட்டல்களை விடுக்கிறீர்கள். நீங்கள் ஒரு குழந்தையை பயமுறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? நாங்கள் பகுத்தறிவான மனிதர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. இஸ்லாம் உண்மையானது என்று நிரூபிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதுதான். மிரட்டல்கள் மூடர்களுக்கு உரியது. புத்திசாலி மனிதர்களை அடிபணியும்படி  பயமுறுத்த முடியாது. போலி ஆசாமிகளுக்கும் கபட வேடதாரிகளுக்கும் இரையாகாதபடி பயன்படுத்துவதற்காகவே கடவுள் மூளையை நமக்கு கொடுத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் மிரட்டல்களை விடுக்கலாம். எனக்கு தர்க்கப்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும். உங்களிடம் ஒன்றுமே இல்லை.   
         
சிந்திப்பதைப் பற்றி பயப்படாதீர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. உங்களுடைய மூளையை பயன்படுத்துங்கள். நீங்கள் உங்களுடைய மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். தர்க்க அறிவைக்கொண்டு நீங்கள் யதார்த்தமான கடவுளை கண்டடைய முடியும். கபட வேடதாரிகளும் ஏமாற்று பேர்வழிகளும் உங்களை தவறாக வழிநடத்த அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய பொய்களுக்கு இரையாகாதீர்கள். தங்களுடைய மூளையை பயன்படுத்தியதற்காக மனிதர்களை கடவுள் ஒருபோதும் தண்டிக்க மாட்டார். முஹம்மதுவை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் சாத்தானை பின்பற்றுகிறீர்கள். இந்த மனிதர் என்ன கூறினாரோ, செய்தாரோ அவை சாத்தானியத்தனமாகவே இருந்தன. ஒரு பொய்யரை பின்பற்றி உங்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.

இஸ்லாம் உண்மையானது என்று உங்களால் நிரூபிக்க முடியாது. ஆனால் அது ஒரு பொய் என்று நான் நிரூபித்திருக்கிறேன். என்னுடைய கட்டுரைகளை தயவுகூர்ந்து படியுங்கள். நீங்கள் உண்மையை அங்கே காண்பீர்கள். என்னுடைய உரிமை கோரல்களுக்கு ஆதாரமாக  நான் குர்ஆனையும் ஹதீதையும் பயன்படுத்துகிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டால், என்னுடைய புத்தகத்தின் டிஜிட்டல் பிரதியை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். முஹம்மது பொய் உரைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரம் ஏராளமாக உள்ளது. சாத்தானுடைய தீர்க்கதரிசியை பின்பற்றுவதற்காக நீங்கள் வெகுமதி அளிக்கப்பட மாட்டீர்கள். விழித்துக்கொள்வதற்கு இதுவே நேரம். பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் விழித்துக்கொண்டு வருகிறார்கள். கடைசியாக இருந்து விடாதீர்கள்.


--- அலி சினா (Ali Sina)

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர் (Anand Sagar)   

Tuesday 8 October 2013

அல்லாஹ் அடித்த ஆப்பு!



குர்ஆனில் அறிவியல் முன்னறிவிப்புகள் என்ற முல்லாக்களின் கட்டுக்கதைகள் ஒவ்வொன்றும் ஆதாரங்களுடன் மிகத்தெளிவாக பலமுறை மறுக்கப்பட்டுள்ளது.  ஆயினும், இஸ்லாமிய மதவாதிகள் தங்களது தக்கியாவைக் கைவிடுவதில்லை. மாற்று நம்பிக்கைகளில் இருப்பவர்களிடம் அவர்கள், ‘தாவா’ பணிகளில் ஈடுபடும்பொழுது முன்னிலை வகிப்பதும் இந்தக் கட்டுக்கதைகள்தான். உதாரணத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-தினர் திராவிடர் கழகத்தினருடனும், கிருஸ்தவர்களுடன் நிகழ்த்திய விவாதங்களிலும்கூட குர்ஆனில் அறிவியல் முன்னறிவிப்புகள் என்ற கட்டுக்கதைகளையே பிரதானமாக முன்வைத்தனர். குர்ஆன் கடவுளின் வார்த்தை என்பதை நிரூபிக்க, அறிவியலின் தயவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதையே இது காண்பிக்கிறது.

அறிவியல் அவர்களின் கட்டுக்கதைகளுக்கு  ஏற்றவாறு வளைந்து கொடுக்காதே? எனவே அறிவியலுக்கு ஏற்றவாறு குர்ஆனை நெளித்து வளைத்து இறுதியில் பூமிக்கே ஆப்பு அடித்துவிட்டனர்.

குர் ஆன் 78:7
Waljiba la awtada
மலைகளை முளைகளாகவும்  நாம் ஆக்கவில்லையா?

முளைகளைப்பற்றி கவனிப்பதற்கு முன், மலைகளின் தேவை எதற்காக என்பதைக் கூறும் சில குர்ஆன் வசனங்களையும் அதன் மொழிபெயர்ப்புகளையும்  காண்போம்


குர் ஆன் 31:10
... waalqa fee al-ardi rawasiya an tameeda bikum ...

பீஜே:
உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.

நிஜாமுத்தீன் மன்பயீ
பூமியில் - உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்க - உயர்ந்த மலைகளை அமைத்தான்;

இக்பால் மதனி
பூமியில் - அது உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்கும் பொருட்டு, அசையாத மலைகளையும் அதில் ஆக்கிவைத்தான்….

ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
...பூமியில் அது உங்களைக்கொண்டு அசைந்துவிடாதிருக்கும் பொருட்டு, உயர்ந்த மலைகளையும் அதில் ஆக்கிவைத்தான்.

முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு
...உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன்மேல் உறுதியாக நிறுத்தினான்... (இதை மொழிபெயர்த்தவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை rawasiya (மலை) என்ற சொல்லை விட்டுவிட்டார்)

அ.கா அப்துல் ஹமீது பாகவி
...பூமி உங்களை கவிழ்த்துவிடாதிருக்கும் பொருட்டு (நிலையான) மலைகளை அதில் நாட்டிவைத்து,. (உருண்டை வடிவத்தை எப்படிக் கவிழ்ப்பது?)

முஹம்மத் முஸ்தபா அஸ்-ஸிராஜி
உங்களை அது நீட்டிவிடும் என்பதால், பூமியில் மலைகளைப் போட்டார்...

குர்ஆன் – இறுதி ஏற்பாடு-ரஷாத் கலீபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்
...உங்களோடு சேர்ந்து பூமி உருண்டுவிடாதிருக்கும் பொருட்டு அதன் மீது நிலைபடுத்துபவைகளை (மலைகள்) அவர் நிர்மாணித்தார்...

தென்காசி, இ.எம். அப்துர் ரஹ்மான்
...உங்களை சாய்த்து விடாமலிருப்பதற்காக (ஆணிகளைப் போன்று) பூமியில் பளுவான மலைகளையும் போட்டுவைத்தான்... (உருண்டை வடிவத்தை எப்படிக் சாய்ப்பது?)

குர்ஆன் 15:19,
Waal-arda madadnaha waalqayna feeha rawasiya waanbatna feeha min kulli shay-in mawzoonin

பீஜே:
பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம்

ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
பூமியை அதை நாம் விரித்து, அதில் அசையாத (உறுதிமிக்க) மலைகளை நிலைபடுத்தினோம்...

முஹம்மத் முஸ்தபா அஸ்-ஸிராஜி
பூமியை நீட்டினோம்.  அதில் மலைகளைப் போட்டோம். 

வி.எம்.ஏ.பாட்சா ஜான்
மேலும் நாம் பூமியை விசாலப்படுத்தி இருக்கிறோம். இன்னும் அதில் மலைகளை உறுதியாக (நிலைத்து நிற்கும்படி) செய்திருக்றோம்.



குர்ஆன் 16:15
Waalqa fee al-ardi rawasiya  an tameeda  bikum

பீஜே:
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும்

ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
உங்களைக்கொண்டு அசையாதிருப்பதற்காக, பூமியின்மீது உறுதியான மலைகளை அமைத்தான்

முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக, அவன் அதன் மேல் மலைகளை (அதன் மீது) உறுதியாக நிறுத்தினான்

அ.கா அப்துல் ஹமீது பாகவி
உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய  மலைகளை அதன் மீது வைத்தான்.

முஹம்மத் முஸ்தபா அஸ்-ஸிராஜி
பூமியில் அது உங்களை சாய்த்துவிடும் என்பதால் மலைகளை வைத்தார்


குர் ஆன் 21:31
WajaAAalna fee al-ardi rawasiya an tameeda  bihim  
நிஜாமுத்தீன் மன்பயீ
இன்னும், பூமியில் உறுதியான மலைகளை-அவர்களை(மனிதர்களை)க் கொண்டு அது ஆடமலிருப்பதற்காக - நாம் அமைத்தோம்;

ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி
இன்னும், பூமியில் (மனிதர்களாகிய) அவர்களைக் கொண்டு அசைந்துவிடா திருப்பதற்காக, உறுதியான மலைகளை நாம் உண்டாக்கினோம்

முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு
இன்னும், இப்பூமி (மனிதர்களுடன்) ஆடிச்சாயாமலிருக்குத் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைதோம்

தென்காசி, இ.எம். அப்துர் ரஹ்மான்
(மனிதர்களாகிய) அவர்களுடன் அசைந்து (சாய்ந்து) விடாமலிருப்பதற்காக பூமியில் ஆணிகளைப் போன்று, பளுவான மலைகளை நாம் ஏற்படுத்தினோம்

பீஜே மொழிபெயர்ப்பு,
பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம்.

நாம் பார்த்த மொழிபெயர்ப்புகள் ஒன்றுக்கொன்று புதிய பொருளைத் தருகின்றன. அவற்றிலிருந்து நமக்கு கிடைத்த முடிவுகள்.

·  மனிதர்களுடன் பூமி அசையாமலிருக்க மலைகளை அல்லாஹ் படைத்தான். அதாவது பூமிக்கு சமநிலை எடையாக (Counter weight) மலைகள் உள்ளன.
·        மனிதர்களால் பூமி அசைந்து விடாமல் இருப்பதற்கு
·        பூமி, மனிதர்களை அசைத்து விடாமல் இருப்பதற்கு
·        பூமி, மனிதர்களை கவிழ்த்து விடாமல் இருப்பதற்கு
·        பூமி, மனிதர்களை சாய்த்து விடாமலிருப்பதற்கு
·        பூமியின் மீது மலைகள் நடப்பட்டுள்ளன
·        பூமியின் மீது மலைகள் போடப்பட்டுள்ளன

இவற்றில் குர்ஆன் 78:07-ல் மட்டுமே மலைகளை awtada(ஆப்பு, முளை) என்ற சொல்லால் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில்  மலைகளைக் குறிக்க ’rawasiya’ (உறுதியான மலைகள்) என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

அறிஞர் பீஜே rawasiya’ (உறுதியான மலைகள்) என்ற சொல்லை, முளை என்று  திரித்து குர்ஆனுக்கு ஆப்பு அடித்திருக்கிறார். பீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பை, குர்ஆனைத் தழுவி எழுதப்பட்ட ஒரு புத்தகமாகத்தான் கருதவேண்டியுள்ளது. விவாதங்களில் ஹதீஸ்கள் தங்களுக்கு எதிராக இருக்கும் பொழுது, குர்ஆனுக்கு முரண்படும் எல்லாவற்றையும் புறக்கணிப்பதாகக் கூறும் பீஜே மற்றும் அவரது ’விசிலடிச்சான் குஞ்சுகள்’, இட்டுக்கட்டப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பது நகைப்பிற்குரியது. மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குவது பித்அத் என்று போர்க்கொடி தூக்குபவர்கள், குர்ஆன் இல்லாத கருத்தை இட்டுக்கட்டி கூறுவதை என்னவென்று சொல்வார்கள்?

பீஜேவின் மொழிபெயர்ப்பு மற்றவர்களுடன் முரண்படுவதை இங்கு நீங்கள் கவனிக்க முடியும். உதாரணத்திற்கு, நாம் கண்ட குர் ஆன் வசனங்களில் வரும் ’bihim’ மற்றும் ’bikum’ என்ற சொற்களை திரித்து அதன் பொருளை மாற்றியிருக்கிறார். இதன் பொருள் முறையே ’உங்களால்’ மற்றும் ‘அவர்களால்’ என்றுவரும். கே.ஏ நிஜாமுத்தீன், இக்பால் மதனி, ஏ.முஹம்மது சிராஜித்தீன் நூரி போன்றவர்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளனர். ’உங்களால்/அவர்களால்’ அல்லது ’உங்களைக் கொண்டு/அவர்களைக் கொண்டு’ என்று குறிப்பிடப்படுவது மனிதர்களைத்தான். அவர்களால் பூமியை அசைக்க முடியுமா? என்ற கேள்வியிலிருந்து தப்பிக்க நினைத்த மொழிபெயர்ப்பாளர்கள், தலைகீழாக குர்ஆனின் பொருளைத் திரித்துவிட்டனர்.

நாம் அவர்களது மொழிபெயர்ப்பை விமர்சிப்பதால், அப்படியும் பொருள் கொள்ளலாம் என்றொரு சப்பைக்கட்டை நாம் எதிர்பார்க்கலாம். அதாவது ’பூவை’, ’பூ’ என்றும் சொல்லலாம், ’புய்ப்பம்’ என்றும் சொல்லலாம் நீங்கள் சொல்வதைப் போலவும் சொல்லலாம் என்று கவுண்டமணி-செந்தில் நகைச்சுவைக் காட்சியை கண்முன்னே கொண்டுவருவார்கள்!

நாம், அல்லாஹ் அடித்த ஆப்பு என்னவாயிற்று என்பதை கவனிப்போம்!
குர் ஆன் 78:7
Waljiba la awtada

மலைகளை முளைகளாகவும்  நாம் ஆக்கவில்லையா?
Awtada ஆப்பு, முளை, கூரான மரமுனை

குர்ஆன் 41:10
 நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான்...

அல்லாஹ் பூமியைப்  படைத்தபிறகு  நான்கு நாட்களில் அதன் மலைகளை முளைகளாக போட்டு, அறைந்து, நிலைநாட்டியிருப்பது எதற்காக என்பதை, நமது இஸ்லாமிய விஞ்ஞானிகள்  தரும் அறிவியல் விளக்கங்களைக் காண்போம்.

பூமிக்கு முளைகளாக மலைகள் பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான். ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும். ...
onlinepj.com


ஆப்பு ஒரு முக்கோண வடிவிலான, எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாய்தளம்.  மரச்சட்டங்களை இணைப்பதற்கும், ஒரு பொருளை இரு பகுதிகளாகப் பிரிப்பதற்கும், பொருளொன்றை உயர்த்துவதற்கும், ஒரு பொருளைக் குறிப்பிட்ட இடத்தில் தாங்கி வைத்திருப்பதற்கும், எல்லைகளை குறிப்பிடவும் ஆப்பு பயன்படுத்தப்படுகிறது.  எடுத்துச் செல்லக்கூடிய பொறிவகைகளுள் ஒன்று. இதன் அகன்ற மேல்முனையில் கொடுக்கப்படும் விசையை சாய்ந்த மேற்பரப்புகளுக்குச் செங்குத்துத்தாக பக்கவாட்டு திசையில் மாற்றுவதன் மூலம் இது செயல்படுகிறது.  

இதன் அடிப்படையில் நோக்கினால் மலைகளை மேலிருந்து புவியின் உட்புறத்திற்கு அறையப்பட்டு பக்கச் சுவர்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.

... இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவை யாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன. வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது. இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங் களெல்லாம் நொறுங்கி விடும். இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். இதற்காக மலைகள், பூமியின் மேலே நாம் பார்க்கும் உயரத்தை விட அதிக அளவு ஆழத்தில் பூமிக்கு அடியிலும் அறையப்பட்டுள்ளன. ஆங்காங்கே இவ்வளவு ஆழமாக நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது. இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.
அறிவியலுடன் ஒப்பிட்டுப் பேசும் தகுதி, குர்ஆனுக்கு இருக்கிறதா இல்லையா என்பதப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், குர்ஆனின் தெளிவற்றதன்மையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, கிடைக்கின்ற சந்துபொந்துகளிலிருந்து அறிவியலை வாரிக் குவிக்கின்றனர்.

புவியின் உட்பகுதியில்  வெவ்வேறு அடுக்குகள் ஒன்றையொன்று பிரிந்து விடாமல் இருப்பது அல்லாஹ் அடித்து நிலைப்படுத்தியுள்ள முளைகளால் மட்டுமே சாத்தியப்படுகிறதா?

இதற்கான பதிலைக் காண்பதற்குமுன், பூமி, என்று குர்ஆன் எதைக் குறிப்பிடுகிறது என்பதைக் கவனிப்போம்

பூமி என்பது அறிவியல் கூறுவது போல சூரியக்  குடும்பத்திலிருக்கும் ஒரு  கிரகத்தைக் குறிப்பிடுகிறது என்று அவர்கள் கூறினால்,

இப்பிரபஞ்சத்தில் ஆடமல், அசையாமல், நகராமல், சுழலாமல் இயக்கமற்ற நிலையில் எந்த நட்சத்திரங்களோ, கோள்களோ, நிலப்பரப்போ இல்லை என்று சொல்லலாம்.  பூமியை ஆடாமல், அசையாமல், சாயாமல், கவிழாமல் இருப்பதற்கு மலைகள் என்ற ஆப்பு அடித்து நிலைப்படுத்தியிருப்பதாக அல்லாஹ் கூறுவது,  பூமி, மணிக்கு 1670 கிலோமீட்டர்கள் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, 365.25 நாட்களில் சூரியனையும் சுற்றி வருகிறது எனும் இரண்டாம் வகுப்பு, அடிப்படை அறிவியல் பாடத்திற்கு எதிராக இருக்கிறது.

மனிதர்கள் தூக்கி எறிப்படாமல் இருப்பதற்கும், கட்டிடங்கள் நொறுக்கி விடாமலும் இருப்பதற்காகவே  மலைகள் முளைகளாக அறையப்பட்டுள்ளன என்ற கூற்று முதிர்ச்சியற்றது. ஏனெனில், பூமி மட்டுமல்லது ஒவ்வொரு கிரகங்களிலும் மலைகளும் மேடுபள்ளங்களும் இருப்பதை இஸ்லாமிய விஞ்ஞானிகள் அறியவில்லை போலும்! மனிதர்களோ, கட்டிடங்களோ இல்லாத கோள்களிலும் துணைக் கோள்களிலும் மலைகள் ஏன்? அவற்றின் மீது ஆப்புகளை அறைந்தது யார்?



 



குர்ஆனுக்கு பூமியைத் தவிர குறிப்பாக அரேபிய தீபற்பத்தைத் கடந்து பேசத் தெரியாது. அதனிடம் மற்ற கிரகங்களைப்பற்றி பேசுவது பொருத்தமற்றது.

அவர்கள் பூமி என்று குறிப்பிடுவது, புவியின் மேற்பரப்பைக் குறிப்பிடுவதாகக் கொள்வோம்.

மலைகள், புவியின் மேற்பரப்பை உட்பகுதிகளிலுள்ள அடுக்குகளிலிருந்து ஒன்றையொன்று பிரிந்துவிடாமல் தடுக்கின்றனவா? புவியின் மேற்பரப்பில் காணப்படும் மலைகள், மேடு பள்ளங்கள் ஆகியன அல்லாஹ் முளைகளக அறைந்து உருவாக்கியவைகளா?





இஸ்லாமிய விஞ்ஞானிகள் சொல்வதைப்போன்று மலைகள் புவியின் அடுக்குகளை ஊடுருவிச் செல்லவில்லையென்பதை படத்தைப் பார்த்தவுடனே எவராலும் புரிந்து கொள்ள முடியும். அல்லாஹ் முளைய சரிவர அறையவில்லை(?!)

புவியின் மேல் ஓடும் அதனை ஒட்டிய பாறை அடுக்கும்(Crust) லித்தோஸ்பியர் மேண்டிலும் (Lithosphere mantle) லித்தோஸ்பியர் எனப்படுகிறது. இதன் ஆழம் 10 முதல் 150 கிமீ வரை வேறுபடுகிறது. அடுத்தது மேற்புற அடுக்கு (Upper mantle) ஒலிவைன் சிலிகேட் தனிமங்களாலான எஸ்தனோஸ்பியர் (Asthonosphere) அடுத்தது, அடர்த்தி மிகுந்த ஒலிவைன் இரும்பு மக்னீசியம் சிலிகேட்டால் ஆன உட்புற பாறைப்படிமம். அடுத்தது சுழன்று கொண்டிருக்கும் இருக்கும், உருகிய இரும்புக் குழம்பால் ஆன வெளிப்புற மையக் கட்டமைப்பு(Outer core). மத்தியில் திட இரும்பாலான  மையப்பகுதி(Inner core).

இஸ்லாமிய விஞ்ஞானிகள் கூறும் ’ஆப்பு’  புவியின் எந்தெந்த அடுக்குகளை இணைக்கிறதென்பதையும், எந்தெந்த அடுக்ககளைவிட்டு பிரிந்துவிடாமல், எப்படித் தடுக்கிறதென்பதையும் அவர்கள் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

உண்மையில், வெளிப்புற மையக் கட்டமைப்பில் (Outer core) உள்ள திரவ நிலையிலுள்ள இரும்புக் குழம்பின் சுழற்சியே புவியின் காந்தப்பண்பிற்கு காரணமாக அமைகிறது. குர்ஆன் கூறும் முளைகளின் முனைகள், வெளிப்புற மையக் கட்டமைப்பையும்(Outer core) கடந்து மையப்பகுதியான (Inner core) வரை நீண்டுள்ளதா என்பதை நீங்களே உறுதிசெய்துகொள்ளலாம். மலைகள் இருக்கும் பகுதிகளில்,  பாறை அடுக்கின்(Crust) தடிமன் சற்று அதிகமாக இருக்கிறது; அதைத்தான் முளைகள் என்று முழம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உலகக் கண்டங்கள், கடல்கள், மலைகள், தீவுகள் எப்படி ஏற்படுகின்றன?  எரிமலைகள், நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன? மலைகள் புவி அதிர்வைத் தடுக்கின்றனவா?

கண்டம் நகர்வுக் கொள்கையில் இதற்கான பதில் இருக்கிறது.

ஒரு காலத்தில் தென் கோளத்தின் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று 1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய நிலவியல் வல்லுநர் எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறினார்.   



 தென் அமெரிக்காவில் கிழக்கே பெருத்துள்ள பிரேஸில் பகுதியும், ஆப்பிரிக்காவின் மேற்கில் உள்ள கினியா வளைகுடாவும் ஒத்த வயதையும், ஒரே வளைவைக் கொண்டதாகக் காணப்படுவதை அடிப்படியாகக் கொண்டு, 1912-ல்  இல் நிலவியல் வல்லுநர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஒருகாலத்தில் கண்டங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன எனும் கோட்பாடைக் கூறினார். வெஜினரின் கோட்பாடு எள்ளிநகையாடப்பட்டது. காரணம், அப்பொழுது கண்டநகர்வுக் கொள்கை எழுதப்படவில்லை. கணத்த திட்டுக்களை எப்படி எந்த ஆற்றலால் பிரிக்க முடியுமென்பதை 1950 வரை அறிவியல்ரீதியாக விளக்கப்படாமல் இருந்தது.




புவியின் குளிந்த மேல் அடுக்கு  லித்தோஸ்பியர் எனப்படுகிறது என்பதை முன்பே பார்த்தோம். பெரும் தகடுகளா லித்தோஸ்பியர் திரவம் போன்றில்லாமல் வளைந்து, நீண்டு, முறிந்து, உடைந்து நொறுங்குகிறது.  இந்த  அடுக்கு நிலப்பலகைத் தட்டுகளாக உடைந்து பிரிந்திருக்கின்றது. அவை, ஆப்ரிக்க, அண்டார்டிகா, ஆஸ்திரேலிய, யுரேஸிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக் என்று ஏழுபெரும் தகடுகளாகவும், இந்திய, அரேபிய, கரிபியன் என்ற சிறுதகடுகளவும் அடையாளம் காணப்படுகின்றன.




லித்தோஸ்பியர் அடுத்துள்ள எஸ்தனோஸ்பியர் மிகவும் வெப்பமான பாகு நிலையிலுள்ளது இதில் ஏற்படும் வெப்ப ஓட்டம் காரணமாக உடைபட்டநிலையிலுள்ள குளிந்த மேல் அடுக்கு  லித்தோஸ்பியர் நகர்வது சாத்தியமாகிறது. இந்தத் தகடுகளின் விளிம்புகளுக்கிடையே ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுளாக எல்லைகளை உருவாக்குகின்றன: அவை தேய்வு விளிம்பு (Transform boundries), பிரிவு விளிம்பு(Divergent boundries), இணைவு விளிம்பு(convergent boundries) எனப்படுகிறது. இந்த செயல்களால் தட்டுகளின் விளிம்புகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடியில் ஆழ்பள்ளங்களையும் கண்டப்பகுதிகளில் மலைத் தொடர்களையும் உருவாக்குகின்றன.






இணைவு விளிம்பு காரணமாக இந்தியத் தட்டு யுரேசியத்தட்டுடன் மேதுவதால் இமயமலை உருவாகி வளர்ந்து வருகிறது. கடலடியில் காணப்படவேண்டிய Marine Fossils நிலப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் காணப்படுவது மலைகள் உருவாக்கத்திற்கு சிறந்த உதாரணமாகும். கண்டங்களின் நிலத்தட்டுகள் இடப்பெயர்ச்சி நிகழ்வதை தற்போது அண்டவெளியில் சுற்றிவரும் செயற்கைக் கோள்கள் துல்லியமாகத் தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றன.



பூமியை அதிர்வுகளிலிருந்து காப்பாற்ற, அதை இறுக்கிப் பிடிக்கும் விதமாக முளைகளை அறையட்டிருப்பதாகக் கூறுவதும் அதை அறிவியலுடன் இணைப்பதும்  முட்டாள்தனம் மட்டுமல்ல வடிகட்டிய அயோக்கியத்தனமாகும்.

 பூமி அசையாமலிருக்க மலைகள் நடப்பட்டிருப்பதாக குர்ஆன் எதற்காகக் கூறவேண்டும்?

இப்ன் ஜரீர் அல்தபரியின் குர்ஆன் விரிவுரையிலிருந்து...
இப்ன் அப்பாஸ், இப்ன் மஸ்வூத் மற்றும் வழியாக அறிவிப்பது...
அல்லாஹ்வின் அரியாசனம் தண்ணீரின் மீது இருந்தது, மேலும் இவற்றைத் தவிர தண்ணீருக்கு முன்னர் எதையும் அவன் படைக்கவில்லை. அவன் படைப்புகளைப் படைக்க விரும்பிய பொழுது, முதலில், தண்ணீரிலிருந்து நீராவி(மூடுபனி) உருவாக்கினான், மேலும் அது தண்ணீரின் மீது இருந்தது. அதை வானம் என்று பெயரிட்டான்; தண்ணீரை வற்றச்செய்து ஒரு பூமியை உருவாக்கினான்; அதை ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இருதினங்களில்  ஏழு பூமிகளாகத் திறந்தான். பூமியை திமிங்கிலத்தின் மீது உருவாக்கினான் மேலும் அந்த திமிங்கிலம் குர்ஆன் 68:1 குறிப்பிடும் ’நூன்’ ஆக இருக்கிறது. மேலும் அந்த திமிங்கிலம் தண்ணீரின் மீதும், தண்ணீர் பாறையின் மீது, பாறை மலக்கின் முதுகின் மீதும், அந்த மலக்கு கல்லின் மீதும், அந்தக் கல் கற்றிலும் இருக்கிறது; இந்த கல்லையே லுக்மான்   அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும்..(31:16) என்று குறிப்பிடுவது. பிறகு அந்த திமிங்கிலம் அமைதியற்று அசைந்த பொழுது பூமியும் அதிர்ந்து நடுங்கியது. அதனால் அவன் அது(பூமி) நிலையாக இருக்குமாறு மலைகளை உறுதியாக நிறுவினான், மேலும் மலைகள் பூமியில் சிறப்புக்குரியதாக இருப்பதையே, பூமியில் - உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்க - உயர்ந்த மலைகளை அமைத்தான்;(16:15, 31:10) என்று கூறுகிறான்....
அன்றைய அரேபியர்களின் நம்பிக்கை எப்படியெல்லாம் இருந்துள்ளது என்பதை நமக்கு தபரியின் குர்ஆன் விரிவுரை விளக்குகிறது.  இயற்கையை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை அல்லது முயற்சிக்கவில்லை. தங்களுடைய அறிவிற்கு விளங்காதவற்றை கற்பனைக் கதைகளால் பதிலளிக்க முயன்றுள்ளனர். இதற்கு குர்ஆனும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்னும் ஏழாம் நூற்றாண்டின் உளறல்களை, சொற்களையும், பொருளையும் திரித்து, இல்லாத அறிவியலை இருப்பதாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதை மனநிலை பிறழ்வு என்றுதான் சொல்ல முடியும்!



தஜ்ஜால்