Sunday 20 May 2012

மூடநம்பிக்கையின் முழுவடிவமே அற்புதக் கதைகள்


1917 மே மாதம் 13-ம் நாள் போர்ச்சுகல் நாட்டின்  ஃபாத்திமாவிற்கு அருகிலுள்ள வயல்வெளியில் லூஸியா ஸாண்டோஸ், ஃப்ரான்ஸிஸ்கோ மார்தோ, ஜெஸிந்தா என்ற பத்து வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் தங்களது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மின்னல் போல தோன்றிய பேரொளியில் ஓர் அழகிய பெண்ணைக் கண்டனர். அவர்களில் லூஸியா மட்டும் அப்பெண்ணுடன் பேசினாள். மற்ற இருவரில் ஃப்ரான்ஸிஸ்கோ மார்தோவினால் ஒளியாகத் தோன்றிய அப்பெண்ணைக் காண இயலவில்லை. சிறுவனால் அப்பெண்ணைக் காண முடிந்தது ஆனால் அவள் பேசுவதைக் கேட்க இயலவில்லை. ஆறாவது மாத முடிவில் வந்து மூவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் வாக்களித்து மறைந்து போனாள். மூவரும் இச் செய்தியை ரகசியமாக வைதிருந்தனர். அவர்களில்  சிறியவளான ஜெஸிந்தா தனது பெற்றோர்களிடம் உளறிவைக்க, செய்தி அந்த நகரம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. ஒளியாகத் தோன்றிய அப்பெண் கன்னி மரியாள் என்று பின்னர் அடையாளம் காணப்பட்டார்.
அன்றிலிருந்து மூவரும் ஒவ்வொரு மாதமும் 13-ம் நாள் அவ்விடத்திற்கு வருகை தந்தனர். ஜூன் 13-ம் நாள் அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினருடன் மரியாள் காட்சியளித்த இடத்தில் கூடி வழிபாடுகளையும் புகழ்மாலைகளையும் இசைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுதும் மூன்று சிறார்களும் வானிலிருந்து ஆலிவ் இலைகளை ஏந்தியவாறு அப்பெண் இறங்கி வருவதைக் காண்பதாக கூறி கூட்டத்தினரை புல்லரிக்கச் செய்தனர். இது அடுத்தடுத்த மாதங்களிலும் தொடர்ந்தது
வாக்களிக்கப்பட்ட அக்டோபர் 13-ம் நாளும் வந்தது.  சுமார் 70,000 பேர் மரியாள் காட்சியளிக்கப் போகும் அற்புதத்தைக் காண குழுமியிருந்தனர். வானம் இருண்டு மழை பொழிந்து அற்புதத்தை காண வந்திருந்தவர்களையும், அப்பகுதியையும் நனைத்தது. கூட்டத்தினர் பக்தியில் மூழ்கியிருந்தனர், மீண்டும் அப்பெண் சிறார்களுக்கு மட்டும் காட்சியளித்தாள். அப்பெண் வானத்தை நோக்கி தனது கைகளை மெல்ல உயர்த்தினாள். அப்பொழுது, லூஸியா, “சூரியன்என்று கூச்சலிட, எல்லோரும் சூரியனை நோக்கி பார்வையைத் திருப்பினர்.
சூரியன், வர்ணஜாலங்களை உருவாக்கியவாறு, கூட்டத்தினரின் இசைக்கேற்ப மெல்ல அசைந்து, தவழ்ந்து கூட்டத்தினரை நெருங்கியது. அதன் நெருக்கத்தினால் தங்களது ஆடைகளும், நிலமும் உலர்ந்து விட்டதாக கூறி தங்களைத் தங்களே புல்லரித்துக் கொண்டனர்.

 

 
சில புகைப்படங்களையும் இதற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை நாம் மட்டுமல்ல உலகில் மிகப்பெரும்பாமையோர் கண்டதில்லை. பலர் கேள்விப்பட்டிருக்கக் கூட முடியாது. ஆனால் இப்படியொரு கதையை வரலாற்றில் பதிந்துள்ளனர். இராமாயணத்தின் அனுமன் குழந்தையாக இருந்தபோது அவரால் சூரியன் விழுங்கப்பட்டிருக்கிறது; மகாபாரதக் குந்தி, சூரியனுடன் கூடி குழந்தையைப் பெற்றிருக்கிறாள் எனும் பொழுது இந்து மதத்தினருக்கும் சூரியனின் குத்தாட்டத்தை ஏற்பதில் சிரமம் இருக்காது என்று நம்பலாம். முஸ்லீம்களின் நிலையைப் பார்ப்போம்.


(நியாயத் தீர்ப்புக்குரிய அந்த) நாள் நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்துவிட்டது
(குர்ஆன்   54: 1)



அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைதூதர்தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாகக் (பிளந்திருக்கக்) காட்டினார்கள் எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிராமலையைக் கண்டார்கள்.
அந்தக் காட்சி இப்படியிருக்குமோ?
(நன்றி:Faithfreedom international.com)

சந்திரனை இரு கூறுகளாக துண்டாடிய முஹம்மதின் அற்புதத்தைப் பற்றி பலரும் விவாதித்துள்ளனர். நான் மீண்டும் இதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. இதைபற்றி தோழர் செங்கொடி எழுதிய இடுகையை இங்கே(  நிலவை உடைத்து ஒட்டிய அல்லா ) காணலாம். முஹம்மது நிகழ்த்திய இவ்வற்புதத்தையும் மெக்காவிலிருந்த ஒரு சிலரைத்தவிர உலகில் எவரும் காணவில்லை. முஸ்லீம்களில் பலருக்கும் இந்த கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதை உண்மையான நிகழ்வென்று கூறி புகைப்பட ஆதரங்களையும் முஸ்லீம் அறிவியளாலர்கள் முன்வைக்கின்றனர்.  
இதுபோன்ற தலைமுறைகள் கடந்த செய்திகளை ஆய்வு செய்வதற்கென்று ஹதீஸ் கலையில் சில விதிமுறைகளை வகுத்துள்ளனர்.

v  செய்தி எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
v  அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.
v  அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்கவேண்டும்.
v  அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக அறிவிக்கின்றாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இத்தன்மை ஒருங்கே அமையப்பெற்றால் அது ஸஹீஹான ஹதீஸ். அத்துடன் குர்ஆனுக்கும் முரண்படக்கூடாது.

இதே விதிமுறைகளை குழந்தைகள் கூறிய சூரிய அற்புதத்திற்கும் பொருத்திப் பார்ப்போம்
Ø  ஹதீஸ்களைப் போன்று பல 250 ஆண்டுகளுக்குப் பின் தொகுக்கப்பட்ட செய்தி அல்ல. இச்சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறுபவர்களின் அடுத்த தலைமுறையினர் நம்மிடையே இருக்கின்றனர்.
Ø  சந்திரன் இருகூறுகளாக பிளக்கப்பட்டதை கண்டதாக ஒரு சிலரது சாட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சூரியன் கீழிறங்கிவந்து நடனமாடியதை ஒரு பெரும் கூட்டமே கண்டதாக சாட்சியம் உள்ளது.
Ø  நேரில் கண்டவர்களது புகைபடங்களும் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது

எனவே, சூரியன் இறங்கிவந்து நடனமாடிய இந்த செய்தி, ஸஹீஹ் என்ற தகுதியைவிட உயர்ந்த நிலைக்கு பொருந்தக்கூடியது. குர்ஆன் ஹதீஸ்களுக்கும் முரண்படவில்லை. ஏனெனில் சூரியன் தினமும் அல்லாஹ்வின் அர்ஷை நோக்கிப் பயணிக்கிறது, மறுமையில் நெருங்கி வரக் கூடிய ஒன்றுதான் என்கிறது குர்ஆன்.  உதாரணத்திற்கு சூரியன் நிறுத்தப்பட்டதை(!) பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து, அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஉ பின் நூன் (அலை) அவர்கள்) ஓர் அறப்போருக்குச் சென்றார்... சூரியனை நோக்கி, "நீ, இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறைக்கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்'' என்று கூறிவிட்டு, "இறைவா! சூரியனை (உடனே மறையவிடாமல்) தடுத்துவிடு'' என்று பிரார்த்தித்தார். எனவே, அவருக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும்வரை சூரியன் (மறையாமல்) தடுத்து நிறுத்தப்பட்டது...
 (முஸ்லீம்)
சந்திரன் இரண்டாக பிளந்து ஒட்ட முடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும் பொழுது, சூரியன் கீழிறங்கிவந்து நடனமாடியதை புறக்கணிப்பது முறையல்ல!  முஸ்லீம்கள் இந்த அற்புதக்கதையையும் ஏற்பதுதான் நியாயம்.

தஜ்ஜால்

Facebook Comments

1 கருத்துரைகள்:

yasir said...

இந்தக் கதையெல்லாம் படிக்கும் போது வடிவேலு கடவுளைக் காட்டுவதாகக் கூறி பணம் பறிக்கும் நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. நல்ல நகைச்சுவைக்கு வேதகுப்பைகளைப் படித்தாலே போதுமானது...