Tuesday 3 February 2015

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !




நன்றி: புதிய கலாச்சாரம்

கடவுள் பிடிபட்டார்

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை ‘வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் ‘கடவுளை’ அப்புறப்படுத்த முடியவில்லை.
எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. “நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!” “என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?” ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.
புறவய உலகத்தின் ‘தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் ‘உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் ‘கண்டு’, பிறகு அதனை ‘விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
•••
முதலில் ‘படைப்பு ரகசியம்’ பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hadron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.

“இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்” என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், “உலகம் அழியுமா, அழியாதா?” என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் ‘அழியாது’ என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big Bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (Mass and Weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.
புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் ‘ஹிக்ஸ் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (Mass) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை ‘கடவுள் துகள்’ (God Particle) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.

களிமண்ணை உருட்டினால் கடவுள்!
கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!

‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை தோற்றுவிட்டால்? “40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!” என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.
“எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்” என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், ‘அவிசுவாசிகள்’ உருவாக்கிய கணினியின் வழியே, ‘தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி’யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?

வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.
“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும்.
“இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. “கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர்களை ‘சமாதானப்படுத்தினார்’ ராமச்சந்திரன். அப்படியொரு ‘ஆன்மீக ஆன்டனா’வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.



காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், ‘அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர்இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
ஏசு இறங்கினாரா?
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.
பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, “ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.


இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து ‘கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் ‘சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை.
உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.
எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், ‘கல்விச் சுதந்திரம்’ என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.

‘டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்’ என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).
விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். “குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?” என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.

“அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

மருதையன்
புதிய கலாச்சாரம், அக்’08 இதழிலிருந்து

Facebook Comments

55 கருத்துரைகள்:

சட்டம் said...

வினவு பக்கத்திற்கு வந்து விட்டேனோ என்று ஒரு கணம் திகைத்து விட்டேன். இந்தப் பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்.
நீங்கள் காவிகள் இல்லை நாத்திகர்கள் என்றா. கம்யூனிஸ்ட்கள் வகாபியிசத்தை விமர்சிப்பர். வர்க்க ரீதியில் என்னை போன்ற உழைப்பாளிகளை இஸ்லாமியம் என்ற வகையில் ஒதுக்கியதில்லை. பசுத்தோல் போர்த்தும் புலி.

தஜ்ஜால் said...

// பசுத்தோல் போர்த்தும் புலி.// யாரென்பதை வெகுஜனங்கள் அறிவர். தன்னைத் தீவிரவாதியென்று வெளிப்படையாக அறிவிப்பவர்களைகூட நம்பிவிடலாம். ஆனால் கவனமாக இருக்க வேண்டியது முனாஃபிக்குகளிடமே

நந்தன் said...

அய்யா சட்டம், கொஞ்சம் கவனமாக படித்து புரிந்து கொள்ளுங்கள். புதியகலாசாரத்தில் வந்துள்ள இந்த கட்டுரை வஹி எனபது ஒரு மன நோய் என்று விளக்குவதை. அதனால்தான் பதிவிட்டுள்ளார்கள்.
கம்யூனிஸ்ட்கள் என்றால் கடவுள்களை மறுப்பவரவகள். ஆனால் மக்களிடம் உள்ள இந்த மூடநம்பிக்கையை விமர்சுப்பதுடன் நிறுந்திக்கொளபவர்கள். மதங்களின் அழிவு தானாக நடைபெறும் என்று நம்புபவர்கள். இதை நீங்கள் வினவிடம் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Anonymous said...

ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே

இந்தக் கருத்து உயிரற்ற ஜடப்பொருட்களுக்கு தானே பொருந்தும். அழிவற்ற ஆன்மாவுக்கு பொருந்தாதே. பேரண்டம் என்பது பேரான்மா எனில் அதன் ஆன்மாவுடன் இணைந்த ஆற்றலே உயிரினமாகும். இந்த ஆன்மாவை விழிப்பு நிலைக்கு கொண்டு வருவதே ஆன்மீகம். எப்படியும் விஞ்ஞானக் கருத்தை மெய்ப்படுத்துவது ,மெஞ்ஞானம்தானே. விஞ்ஞானம் எல்லாக் கேள்வியையும் ஆன்மா அல்லது இறைவன் என்ற விடையுடன் பொருத்தினால் சுபமாக இருக்கும். ஆற்றலின் ஆன்ம உருவம் நாம் என்பதாலே மீணடும் நம்மிடம் உள்ள ஆற்றலை பேரான்மாவின் அலைவரிசையில் ஒன்ற வைக்கும் பொழுதே அற்பம் எது அற்புதம் எது என நாம் உணரும் நிலை வரும். ஆனால் இதை அனைத்து மதங்களும் சடங்கு சம்பிரதாயம் என்ற திசையில் கொண்டு சென்றதால் ஆன்மீகம் நீர்த்துப் போனது. மதம் உருவானது மனிதம் மரித்து விட்டது. ஆன்மீகமும் விஞ்ஞானமும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் இரு ஆயதங்கள்.

நந்தன் said...

அனானி,
ஆன்மீகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ச்சியாக எனது கேள்விகளுக்கு பதில் தருகிறீர்களா? ஆனந்த் சாகரும் பதில் சொல்லலாம்.
எனது முதல் கேள்வி;
1. ஆன்மீகம் என்றால் என்ன? (சுருக்கமாக)

Unknown said...

Unknown said...

ஆன்மாவை விழிப்புற செய்வது

Unknown said...

ஆனந்த் சாகர் said...

@நந்தன்,

இந்த தளத்தில் ஆன்மீகத்தை பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை என்று நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். நீங்களும் ஆன்ம ஞானம் என்ற பெயருடையவரும் ஆன்மீகம் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் அதை படித்து பார்ப்பதோடு நின்று கொள்கிறேன். வேண்டுமானால் ஒன்றிரண்டு முறை தலையிடுகிறேன்!

புரட்சி said...

ஒன்றை விட்டு இன்னொன்றை பிடித்து தொங்குவதை விட, நாம் பிடித்து தொங்குகின்ற அல்லது தொங்கிக்கொண்டிருக்கிற மதம் என்ற மாயயை விட்டு வெளிவந்து மனிதமும்,மனிதாபிமானமும் மட்டுமே முக்கியம் என்ற கோட்பாட்டிற்க்கு வந்து விட்ட தஜ்ஜாலை பாராட்டுகிறேன்! வாழ்க வளரட்டும் உங்கள் பணி!

மதம்,ஆன்மீகம்,பக்தி என்று மக்களை ஏமாற்றும் அயோக்கியர்களை அடையாளப்படுத்தும் காலம் வரும்! வெள்ளையனுக்காக தோன்றிய புரட்சி

மீண்டும் இந்த மண்ணில் தோன்றும் !

ஆனந்த் சாகர் said...

மதம் காலப்போக்கில் அழியும். ஆன்மீகம் காலப்போக்கில் வளரும்.

ஆனந்த் சாகர் said...

கம்யூனிசம்தான் புரட்சி என்று மயக்கத்திலிருப்பது பரிதாபத்துக்குரியது.

Unknown said...

மதம் என்ற பெயரில் கூட்டம் சேர்ப்பதும் கட்சி கொள்கை என்ற பெயரில் கூட்டம் சேர்ப்பதும் ஒன்றே. ஆன்மிகம் என்பது கூட்டம் சேர்த்து பிரசாரம் செய்யும் விடயம் இல்லை. தனித் தனியே ஒவ்வொரு உயிரும் அனுபவித்து உய்வுறும் ஒரு உயர்நிலை. அறிவியல் சொல்லும் பரிணாமத்தின் அடுத்தநிலை.
மதத்தையும் கடவுளையும் துறந்த ஒருவனால்தான் ஆன்மீகத்தை ஏற்க முடியும். எனவே மதம் வேறு ஆன்மீகம் வேறு என்பதை அறிந்து கொள்ளவும்.

ஆனந்த் சாகர் said...

//மதம் என்ற மாயயை விட்டு வெளிவந்து மனிதமும்,மனிதாபிமானமும் மட்டுமே முக்கியம் என்ற கோட்பாட்டிற்க்கு வந்து விட்ட தஜ்ஜாலை பாராட்டுகிறேன்! //

கம்யூனிசத்தில் எங்கு மனிதமும் மனிதாபிமானமும் இருக்கிறது? இஸ்லாத்தை ஏற்காதவர்களை கொலை செய்ய சொல்வது இஸ்லாம். கம்யூனிசத்தை ஏற்காதவர்களை ஒழித்துக்கட்ட சொல்கிறது கம்யூனிசம். இரண்டுமே சர்வாதிகாரத்தின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள சித்தாந்தங்கள். முன்னது முல்லாக்களின் சர்வாதிகாரம். பின்னது பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம். சர்வாதிகாரம் இல்லாமல் இவை இரண்டுமே நிலைநிற்காது. இவை இரண்டிலும் சுதந்திரம் என்பதே இல்லை. சுதந்திரம் இல்லாத எதுவும் ஏற்புடையது அல்ல.

ஆன்மீகத்தில்தான் மனிதமும் மனிதாபிமானமும் இருக்கின்றது. அது சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//மதத்தையும் கடவுளையும் துறந்த ஒருவனால்தான் ஆன்மீகத்தை ஏற்க முடியும். //

இதில் நான் மாறுபடுகிறேன். ஆன்மீகவாதி உண்மையான கடவுளை துறக்கமாட்டார். அவர் மதங்கள் சொல்லும் கற்பனை கடவுளைத்தான் துறப்பார்.

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

ஒரு நல்ல விஷயத்திற்காக கூட்டம் சேர்ப்பது தவறு அல்ல. ஆன்மீக அறிவையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது அவசியம். எனவே ஆன்மீகத்தை பிரசாரம் செய்வது அவசியம் என்றே கருதுகிறேன்.

Unknown said...

//இதில் நான் மாறுபடுகிறேன். ஆன்மீகவாதி உண்மையான கடவுளை துறக்கமாட்டார். அவர் மதங்கள் சொல்லும் கற்பனை கடவுளைத்தான் துறப்பார். //

கடவுள் எனும் பொழுதே அது உருவகம் ஆகிறது. பொருளாகவும் கணிக்கப்படுகிறது. எனவே அதனை இறைநிலை என்றே சொல்லலாம். அனைத்து உயிரினமுமே இறைநிலையை எட்டலாம். நம் முன்னோர் கடவுள் (இந்து மதத்தில் மட்டும்)
என பெயரிட்டு ஆன்மீகத்தை வளர்த்தனர். அது பின்னாளில் வணக்க வழிபாடு என திரிந்து விட்டது. எனவே நீங்கள் கடவுள் என சொல்வதையே நான் இறைநிலை என்கிறேன். இது அனைத்து உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் நோக்கமே இறைநிலையை எட்டுவதுதான்.

Unknown said...

//ஒரு நல்ல விஷயத்திற்காக கூட்டம் சேர்ப்பது தவறு அல்ல. ஆன்மீக அறிவையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது அவசியம். எனவே ஆன்மீகத்தை பிரசாரம் செய்வது அவசியம் என்றே கருதுகிறேன்//


இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்தக்கூட்டம் குறைந்த பட்சம் ஆன்மீகத்தை அறியும் ஆர்வத்தோடாவது இருக்க வேண்டும்.

Unknown said...

மதங்கள் கட்டியமைக்கும் கடவுள் என்பவர் மிகவும் பலவீனமாகவும் .சுயசார்பற்ற . தனித்துவ ஆளுமை இலாத பிம்பமாகவே உள்ளார். வணக்க வழிபாடு , மந்திரங்கள் . போன்ற மனித உதவியாலேயே அவர் ஜீவிக்கிறார். அதனால் கடவுள் என்ற வார்த்தை வேறு விதமாய் புரிந்து கொள்ளப்படும் ஆபத்து உள்ளது.

ஆனந்த் சாகர் said...

//தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.//

தியானம் செய்யும்போது பாரிடல் லோப் செயலிழப்பதால் தியானம் செய்பவர் பிரமைக்கு ஆளாகிறார் என்பது தவறான முடிவுக்கு வரும் செயல். உண்மை என்னவெனில், நம்முடைய உடல் சார்ந்த மனம்(physical mind) அதாவது வெளிப்புற மனம்(outer mind) செயல்படுவது நின்று நம்முடைய ஆழ்மனம் (subconscious mind) விழித்துக்கொள்கிறது. இதைத்தான் ஆன்மீகவாதிகள் மூன்றாம் கண் திறப்பது என்கின்றனர். அந்த நிலையில் நாம் மற்ற பரிமாணத்தில் உள்ள உலகை காண்கிறோம். புத்த பிக்குகள் சொல்வது உண்மைதான்.

நந்தன் said...

@ ஆன்மா ஞானம்
கேள்வி 2:
ஆன்மா என்றால் என்ன?

குறிப்பு: எனது கேள்விகள் உங்களுக்கு சிறு பிள்ளைத்தனமாகத் தெரியலாம் ஆனால் நான் சிறு பிள்ளை என்பதால் மறுக்காமல் பதில் சொல்லவும்.

Unknown said...

மிக சரியாகவே கேட்டுள்ளீர். ஆன்மா எதுவென்பதை அறிந்தால் மட்டுமே ஆன்மீகத்தை அறியமுடியும்.

ஆன்மா பிறப்பற்றது. அழிவற்றது.
ஜடப்பொருளுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் ஆன்மாக்கள் ஜடப்பொருளில் இல்லை என்பதே. ஆற்றல் ஒருமித்து ஜடப்பொருளாகலாம். ஜடப்பொருளுடன் இணையும் போதே உயிரினமாகிறது. ஆதியில் இருந்தே இருந்து வரும் ஒற்றை ஆன்மாதான் எல்லா உயிரினத்திலும் வியாபித்திருக்கிறது. இந்த வகையில் அனைத்து உயிரினமும் ஒன்றே. எல்லா உயிரும் ஒன்றே எனும் பொழுதே அனைத்துடனும் அன்பு பாராட்டி நேசிக்க முடியும். இன்னும் எளிதாகச் சொன்னால் அனைத்து உயிரிலும் உள்ள உயிரே. ஒவ்வொரு படி நிலையிலும் ஒவ்வொரு ஆன்மாவும் விழிப்படைந்தே ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிராய் பரிணமித்தது. இந்த பரிணாமம் இறைநிலையை அடையும் பயணம். ஆன்ம விழிப்பின் விளைபொருள்களே அனைத்து உயிரினங்களும். மனிதன் உட்பட. ஆனால் மனிதனாய் இருப்பதால் நமக்கு மட்டுமே ஆன்ம விழிப்பு உண்டென்பது சிலர் கருத்து. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆன்மா உண்டு
.

Unknown said...

அதில் ஆன்ம விழிப்புணர்வு பெறும் உயிரினம் அடுத்த நிலைக்கு செல்லும். ஏனையது அப்படியே தங்கும். எளிதாகச் சொல்வதெனில் ஆன்ம விழிப்புணர்வு பெற்ற குரங்கு மனிதனாகி விட்டது. ஏனையது குரங்காகவே இன்னும் உள்ளன.

ஆனந்த் சாகர் said...

ஆன்ம ஞானம்,

ஆன்மா என்றால் என்ன என்று நந்தன் கேட்ட கேள்விக்கு ஆன்மா எல்லா உயிர்களிலும் உள்ளது, பிறப்பு இறப்பு அற்றது என்கிறீர்கள். இது சரிதான். இருந்தாலும், ஆன்மா என்ற ஒன்று எப்படி இருக்கிறது என்று விளக்க முடியுமா? இதுதான் நந்தன் கேட்ட கேள்வியின் உள்ளடக்கம் என்று நினைக்கிறேன்.

தஜ்ஜால் said...

@புரட்சி

//ஒன்றை விட்டு இன்னொன்றை பிடித்து தொங்குவதை விட, நாம் பிடித்து தொங்குகின்ற அல்லது தொங்கிக்கொண்டிருக்கிற மதம் என்ற மாயயை விட்டு வெளிவந்து மனிதமும்,மனிதாபிமானமும் மட்டுமே முக்கியம் என்ற கோட்பாட்டிற்க்கு வந்து விட்ட தஜ்ஜாலை பாராட்டுகிறேன்! வாழ்க வளரட்டும் உங்கள் பணி!//

நன்றி!

மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் சிந்தித்ததால்தான், உண்மையானவர், சிறந்தவர், மனிதகுலத்தை வாழவைக்க வந்தவர் என்றெல்லாம் நான் நம்பிக்கொண்டிருந்த தூதர் முஹம்மதையும் அவரால் போதிக்கப்பட்ட இஸ்லாமையும் நடுநிலையாக ஆய்வு செய்யுவும், தெளிவான முடிவை அடையும் முடிந்தது. நாடிநரம்புகளிலெல்லாம் ஏற்றப்பட்ட, ஏற்றிக்கொண்ட நம்பிக்கைகளை முற்றிலும் அழிக்க சற்று அவகாசம் தேவைப்பட்டதென்பதை மறுக்கமுடியாது!

Unknown said...


//ஆன்மா என்றால் என்ன என்று நந்தன் கேட்ட கேள்விக்கு ஆன்மா எல்லா உயிர்களிலும் உள்ளது, பிறப்பு இறப்பு அற்றது என்கிறீர்கள். இது சரிதான். இருந்தாலும், ஆன்மா என்ற ஒன்று எப்படி இருக்கிறது என்று விளக்க முடியுமா? இதுதான் நந்தன் கேட்ட கேள்வியின் உள்ளடக்கம் என்று நினைக்கிறேன்.//


//இன்னும் எளிதாகச் சொன்னால் அனைத்து உயிரிலும் உள்ள உயிரே.//

பதிவிலேயே பதில் உள்ளதே.

//ஆற்றல் ஒருமித்து ஜடப்பொருளாகலாம். ஜடப்பொருளுடன் இணையும் போதே உயிரினமாகிறது. //

மேலே உள்ளதில் தட்டச்சு பிழை நீக்கி கீழே உள்ளவாறு படிக்கவும்.

ஆற்றல் ஒருமித்து ஜடப்பொருளாகலாம். ஜடப்பொருளுடன் ஆன்மா இணையும் போதே உயிரினமாகிறது.

Unknown said...


//ஆன்மா என்றால் என்ன என்று நந்தன் கேட்ட கேள்விக்கு ஆன்மா எல்லா உயிர்களிலும் உள்ளது, பிறப்பு இறப்பு அற்றது என்கிறீர்கள். இது சரிதான். இருந்தாலும், ஆன்மா என்ற ஒன்று எப்படி இருக்கிறது என்று விளக்க முடியுமா? இதுதான் நந்தன் கேட்ட கேள்வியின் உள்ளடக்கம் என்று நினைக்கிறேன்.//

ஆன்மா என்பதை பவுதீகப்பொருளாக உருவகப் படுத்த முடியாது. பேரண்டம் எனப்படும் இந்தப் பிரபஞ்சமே பேரான்மா. அதன் இயக்கவியல் விசைகளின் விளைபொருட்களே அனைத்து விண்ணகப்பொருட்களும். விசையால் கிடைக்கும் ஆற்றல் பருப்பொருளாக தோற்றமளிக்கின்றன. பேரான்மாவின் விசையுற்ற விளைபொருளில் ஏதோ ஒன்றுதான் நாம். பேரான்மாவின் உயிர் எனப்படும் ஆன்மாவினால் நாம் செறிவூட்டப்பட்டிருக்கிறோம். நம் பிறப்பில் எந்தக் காரணமும் கிடையாது. நாம் ஒன்றும் அற்புதப்படைப்புமல்ல. தற்செயல் அல்லது இயல்பான ஒரு நிகழ்வில் அனைத்தும் உருவாகியுள்ளன. பேரான்மாவில் இருந்து பிரிவுற்ற ஆன்மா மீண்டும் பேரான்மாவுடன் கலக்கும் நிகழ்வே உயிர்களின் தோற்றம் மற்றும் அழிவு. ஆன்மா சந்ததிகள் மூலம் கடத்தப்படுகிறது. இந்த ஆன்ம சுழற்சியில் நம் பங்கு என்னவெனில் இந்த நிகழ்வை பயன்படுத்தி அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதே. ஆன்மாவின் உதவியால் நம் எண்ணங்களை அலைகளாக பரவச்செய்யலாம். எப்படி பேரான்மா தனது இயக்கத்தால் விளைபொருட்களை விளைவிக்கிறதோ அதே போல் ஆன்ம அலைகளை பயன்படுத்தி நமக்கு விருப்பமான விளைவை உருவாக்க முடியும். அனைத்து உயிர்களும் ஒற்றை ஆன்மாவின் வெளியீடு என்பதாலே ஆன்ம அலைகள் மூலம் அனைவரையும் வசப்படுத்துவது சாத்தியமாகிறது. இன்னும் பல காரியங்கள் ஆன்ம அறிவியலை பயன்படுத்தி செய்யலாம். ஆன்மாவை விழிப்புற செய்த ஒருவனுக்கு இவை எளிது. மற்றோர் முதலில் ஆன்மாவை விழிப்புற செய்ய வேண்டும். அதற்கு முதலில் நாத்திகனாக வேண்டும். பின்பே ஆன்மவியலை அறியலாம். மேலே சொன்னவை எனது சொந்த அனுபவத்தில் செயல்படுத்தி தற்பொழுதும் செயல்படுத்திக் கொண்டிருப்பவை.

ஆன்மவியலை கற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ளோருக்கு அவர்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறேன். பயன் தெரிந்தவர் பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//மேலே சொன்னவை எனது சொந்த அனுபவத்தில் செயல்படுத்தி தற்பொழுதும் செயல்படுத்திக் கொண்டிருப்பவை. //

உங்க்ள் சொந்த அனுபவத்தை எங்களுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வீர்களா?

நான் ஆன்மாவை பற்றி எனக்கு தெரிந்தவைகளில் ஒன்றிரண்டை சொன்னதற்கு, சொந்த அனுபவமில்லாமல் பேசுபவரின் லட்சணம் இதுதான் என்று என்மீது காட்டமாக தாக்குதல் கொடுத்தவர் நீர்தானா!?

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//ஆன்மவியலை கற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ளோருக்கு அவர்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறேன். பயன் தெரிந்தவர் பயன் படுத்திக்கொள்ளலாம்.//

உங்களுக்கு தெரிந்ததை விளக்கி சொல்லுங்கள். அதை தெரிந்துகொள்ள நான் ஆர்வமாக உள்ளேன்.

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//ஆன்மா என்பதை பவுதீகப்பொருளாக உருவகப் படுத்த முடியாது.//

வேறு எப்படி ஆன்மா இருக்கிறது?

// பேரண்டம் எனப்படும் இந்தப் பிரபஞ்சமே பேரான்மா.//

பேரண்டம் என்று எதை சொல்கிறீர்கள். இந்த பேரண்டத்தில் இருப்பவை பௌதீகப் பொருள்தானே?

// அதன் இயக்கவியல் விசைகளின் விளைபொருட்களே அனைத்து விண்ணகப்பொருட்களும்.//

உண்மைதான். அந்த விசை எப்படி இயங்குகிறது என்று சொல்ல முடியுமா?

// விசையால் கிடைக்கும் ஆற்றல் பருப்பொருளாக தோற்றமளிக்கின்றன.//

உண்மைதான்.

// பேரான்மாவின் விசையுற்ற விளைபொருளில் ஏதோ ஒன்றுதான் நாம்.//

ஆன்மாவின் இயக்க விசையால் ஏற்படும் பௌதீக பொருளால் ஆனது நம் உடல்தான். ஆனால் நாம் அதுக்கும் மேல!!!

// பேரான்மாவின் உயிர் எனப்படும் ஆன்மாவினால் நாம் செறிவூட்டப்பட்டிருக்கிறோம்.//

ஆன்மாவினால் நாம் செறிவூட்டப்பட்டிருக்கிறோம் என்பதைவிட அந்த ஆன்மாவே நாம்தான் என்பதே சரியானது.

// நம் பிறப்பில் எந்தக் காரணமும் கிடையாது.//

நம் பிறப்பிற்கு தகுந்த காரணம் இருக்கிறது.

// நாம் ஒன்றும் அற்புதப்படைப்புமல்ல.//

இருக்கும் எல்லாமே அற்புத படைப்புதான்.

// தற்செயல் அல்லது இயல்பான ஒரு நிகழ்வில் அனைத்தும் உருவாகியுள்ளன.//

பிரபஞ்சத்தில் தற்செயல் என்று எதுவுமே இல்லை.

// பேரான்மாவில் இருந்து பிரிவுற்ற ஆன்மா மீண்டும் பேரான்மாவுடன் கலக்கும் நிகழ்வே உயிர்களின் தோற்றம் மற்றும் அழிவு.//

உயிருக்கு தோற்றமும் இல்லை,அழிவும் இல்லை.

// ஆன்மா சந்ததிகள் மூலம் கடத்தப்படுகிறது.//

இதை கொஞ்சம் விளக்க முடியுமா?

// இந்த ஆன்ம சுழற்சியில் நம் பங்கு என்னவெனில் இந்த நிகழ்வை பயன்படுத்தி அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதே.//

ஆம்.

// ஆன்மாவின் உதவியால் நம் எண்ணங்களை அலைகளாக பரவச்செய்யலாம்.//

ஆன்மாவின் உதவி என்று சொல்வதைவிட "ஆன்மாவாக இருக்கிற நாம்" என்று சொல்வதே சரி.

// எப்படி பேரான்மா தனது இயக்கத்தால் விளைபொருட்களை விளைவிக்கிறதோ அதே போல் ஆன்ம அலைகளை பயன்படுத்தி நமக்கு விருப்பமான விளைவை உருவாக்க முடியும்.//

ஆமாம்,நிச்சயமாக.

// அனைத்து உயிர்களும் ஒற்றை ஆன்மாவின் வெளியீடு என்பதாலே ஆன்ம அலைகள் மூலம் அனைவரையும் வசப்படுத்துவது சாத்தியமாகிறது. இன்னும் பல காரியங்கள் ஆன்ம அறிவியலை பயன்படுத்தி செய்யலாம்.//

உண்மைதான்.

// ஆன்மாவை விழிப்புற செய்த ஒருவனுக்கு இவை எளிது. மற்றோர் முதலில் ஆன்மாவை விழிப்புற செய்ய வேண்டும்.//

ஆமாம்.

//அதற்கு முதலில் நாத்திகனாக வேண்டும். பின்பே ஆன்மவியலை அறியலாம்.//

திறந்த மனதுடன் உண்மையை கற்றுக்கொள்ள,கற்றதை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலே போதும். எவரும் நாத்திகராக தேவையில்லை.

// மேலே சொன்னவை எனது சொந்த அனுபவத்தில் செயல்படுத்தி தற்பொழுதும் செயல்படுத்திக் கொண்டிருப்பவை. //

உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால் என் போன்று ஆர்வமுள்ளவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...


// பேரான்மாவில் இருந்து பிரிவுற்ற ஆன்மா மீண்டும் பேரான்மாவுடன் கலக்கும் நிகழ்வே உயிர்களின் தோற்றம் மற்றும் அழிவு.//

உயிருக்கு தோற்றமும் இல்லை,அழிவும் இல்லை.

உயிர்கள் = உயிரினங்கள்

Unknown said...

நான் என்பது எதனைக்குறிக்கிறது. என்னுள் இருக்கும் ஆன்மாவை. பிறரால் நான் அடையாளப்படுத்தப்படுவது முதலில் என் புற உலக அடையாளங்களான பெயர் , இனம் , மதம், பதவி. இதில் அறிமுகமான பின் என்னை நெருங்கி அறிந்தாலே என் ஆன்மாவை பற்றி அறிய முடியும். இந்த புற உலகில் என்னைப்பற்றி உணர்த்த பல்வேறு வேடங்கள் தேவைப்படுகிறது. இந்த வேடங்களை உண்மை என்றே முதலில் நம்பினேன். எல்லா வேடங்களும் மாயை நான்தான் உண்மை என்பதைதான் முதலில் அறிந்தேன். ஆன்மாவை பற்றிய தேடல் துவங்கியது. என் உடலை பரிசோதனை கூடமாக எண்ணி பல சோதனைகள் செய்து பார்த்தேன். முதலில் கட்டுப்பாடு. தொடர்ச்சியாக போதைப்பொருளை பயன்படுத்துவது , திடீரென அனைத்தையும் நிறுத்துவது. இதனை ஐந்து முறை செய்தேன். முழு போதையில் மனதை விழிப்போடு வைக்கும் பயிற்சி. அறுபது நாள் நிகழ்வுகளை சாட்சி வைத்துக் கொண்டே செய்தேன். என் தினசரி செயல்களை அட்டவணைப்படுத்தி சரிபார்ப்பேன். ஐந்தாவது முறையில் தான் நூறு சத வெற்றியை அடைந்தேன். முழு போதையில் என் ஆழ் மனதில் இருந்த அரக்கனை உணர்ந்தேன். அவனுடைய செயல்பாடுகள் என்னை சமுதாயத்தில் இழிவானவானகே காட்டியது. அந்த அரக்கனை விரட்டினால்தான் என்னை கண்டறிய முடியும் என்பதை உணர்ந்தேன். எனது வெற்றி அரக்கனை வென்று மனிதனை குடியமர்த்தியது. அந்த அரக்கன் எதையெல்லாம் செய்தானோ அவை அனைத்தும் தவறென உணர்ந்தேன். இது நடந்து ஏழு வருடங்களாயிற்று. இந்த ஏழு வருடங்களில்தான் அற்பமான என் பிறப்பை அர்த்தமுள்ளதாக்க முனைந்தேன். என் ஞானத்தேடல் துவங்கியது.

மற்றுமொரு விடயம். சிறு வயதில் இருந்தே என் கேள்வி கேட்கும் குணத்தால் மதக்கருத்துகள் எதுவும் மண்டையில் பதியவில்லை. நான் சார்ந்திருந்த மதக்கருத்துகளை என் மனதில் பதித்திருந்தால் இன்னும் பத்தாண்டுகள் ஆயிருக்கும். என் பெற்றோர் இஸ்லாமியர் என்பதைத்தவிர எனக்கும் அந்த மதத்திற்கும் வேறு தொடர்பு இல்லை. தும்மல் போட்டவுடன் அல்ஹம்துலில்லா என சொல்வதை தவிர்க்க மட்டுமே எனக்கு இரண்டு வருடம் ஆனது.

மேலே சொன்னது எனது வழிமுறை மட்டுமே. அதுதான் சரி என ஒரு போதும் சொல்லமாட்டேன்.

நம் மனதில் குடியிருக்கும் அரக்கனான மத நம்பிக்கை . கடவுள் நம்பிக்கை மற்றும் இத்யாதி நம்பிக்கையை வெளியேற்றுவதே முதல் முயற்சி. தங்களுக்கென்று ஒரு வழிமுறையை தேர்ந்தெடுத்து அரக்கனை விரட்டி மனிதத்தால் ஆழ் மனதை நிரப்புங்கள்.

ஆனந்த் சாகர் said...

ஆன்ம ஞானம்,

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நீங்கள் ஆன்மாவை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியளிக்கிறது.

சரி, இதுதான் உங்கள் அனுபவமா? இல்லை வேறு இன்னும் அனுபவங்கள் உள்ளனவா?

ஆனந்த் சாகர் said...

ஆன்ம ஞானம்,

//என் உடலை பரிசோதனை கூடமாக எண்ணி பல சோதனைகள் செய்து பார்த்தேன். முதலில் கட்டுப்பாடு. தொடர்ச்சியாக போதைப்பொருளை பயன்படுத்துவது , திடீரென அனைத்தையும் நிறுத்துவது. இதனை ஐந்து முறை செய்தேன். முழு போதையில் மனதை விழிப்போடு வைக்கும் பயிற்சி. அறுபது நாள் நிகழ்வுகளை சாட்சி வைத்துக் கொண்டே செய்தேன். என் தினசரி செயல்களை அட்டவணைப்படுத்தி சரிபார்ப்பேன். ஐந்தாவது முறையில் தான் நூறு சத வெற்றியை அடைந்தேன்.//

வெற்றி என்று எதை கூறுகிறீர்கள்?

ஆனந்த் சாகர் said...

ஆன்ம ஞானம்,

//முழு போதையில் என் ஆழ் மனதில் இருந்த அரக்கனை உணர்ந்தேன்.//

அரக்கன் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

Unknown said...

//வெற்றி என்று எதை கூறுகிறீர்கள்? //

போதையில் மூளை எனும் பவுதீகப் பொருளின் ஆக்ஸிஜனேற்றத்தால் சிறுமூளை பெறும் அதிகப்படியான ஆக்ஸிஜனே போதை.. அப்பொழுது பவுதிகப்பொருளான மூளையை ஆழ்மனதால் கட்டுப்படுத்துவதே. அதாவது முழுப்போதையிலும் சுயநினைவோடு இருப்பது.

Unknown said...

//அரக்கன் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்//

காரணமற்ற கோபம் , மற்றோரை துச்சமென மதிக்கும் குணம் . வரம்பு மீறும் காமம் , பகை , உயர்வு நவிற்சி . எளியோரை ஏளனம் செய்தல் , அகம்பாவம் போன்ற ஆன்ம விழிப்பை தடைசெய்யும் ஆழ்மனதின் அரக்ககுணங்கள்.

Unknown said...

அதன்பின் உலகத்தின் மீதான என் பார்வையும் மாறியது. அனைத்து உயிர்களிலும் என்னைக்கண்டேன். மற்றவர்களிடம் நான் என்ன குணங்களை எதிர்பார்த்தேனோ அது எனக்குள் இருக்கிறதா என என்னையே கேட்டேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என் பிறவிக்குணங்களையே மாற்றிவிட்டது. என்னை ஏளனம் செய்வோரிடம் கூட அவர்கள் அறியாமையில் இருக்கிறாரே என்ற பச்சாதாபம் ஏற்பட்டது.புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன். ஏதோ ஒன்றை அடைந்து விட்டோம் என மகிழ்ந்தேன். ஆன்மாவை பற்றி அறிய ஆரம்பித்தேன். சித்தர்களைப்பற்றியும் சித்துகளைபற்றியும் . தியானத்தைப் பற்றியும் அறியலானேன். ஆனால் எவ்விடத்திலும் மதப்போதனைகளை மதப்போதனைகளை நம்பியதில்லை. பரம்பொருள் பற்றிய தேடலில்தான் பிரபஞ்ச சக்தியை உணர்ந்தேன். அந்த ஆற்றலுடன் ஒன்றினால் ஏற்படும் விளைவுகளை ஒவ்வொன்றாய் அனுபவித்தேன். அந்த சக்தியே பேரான்மா நம்முடன் கொள்ளும் தொடர்பென உணர்ந்தேன்.

அடுத்ததாக ஆன்ம அலைகளை உருவாக்கும் பயிற்சி பெற்றேன். அதை தியானம் மூலம் செய்யலாம். என உணர்ந்தேன். ஆன்ம அலைகளின் மூலம் பேரான்மாவை தொடர்ப கொண்டு சாதக விளைவுகள் ஏற்படுத்தும் நிகழ்வுகளை நிகழ்த்திப் பார்த்தேன். என் நண்பர்களுக்கு இதை முயன்றேன். அவர்களின் வாழ்க்கையே ஏற்றம் பெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் அல்லாஹ்வை பிரார்த்தித்தே இதை பெற்றுத்தந்தேன் என நம்பினார்கள். என்னை இஸ்லாத்திலிருந்து பிரித்து பார்க்க அவர்கள் தயாராயில்லை. என்னுடைய அடையாளம் அறியாத நபர்களிடம் வைத்தியம் என்ற முறையில் சோதித்து பார்த்தேன்
அருமையான பலன் கிடைத்தது.

மேலும் அனுபவங்கள் வரும்.

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//பரம்பொருள் பற்றிய தேடலில்தான் பிரபஞ்ச சக்தியை உணர்ந்தேன். அந்த ஆற்றலுடன் ஒன்றினால் ஏற்படும் விளைவுகளை ஒவ்வொன்றாய் அனுபவித்தேன்.//

பிரபஞ்ச ஆற்ரலோடு எந்த வழிமுறையில் ஒன்றிணைந்த அனுபவம் பெற்றீர்கள்? அதன் விளைவுகளாக நீங்கள் அனுபவித்த அனுபவங்கள் ஏதாவது கூறமுடியுமா?

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//அடுத்ததாக ஆன்ம அலைகளை உருவாக்கும் பயிற்சி பெற்றேன். அதை தியானம் மூலம் செய்யலாம். என உணர்ந்தேன்.//

நீங்கள் எந்தமாதிரி தியானம் செய்து ஆன்ம அலைகளை உருவாக்கினீர்கள்? ஆன்ம அலைகள் உருவாகுவதாக எதை வைத்து சொல்கிறீர்கள்?

// ஆன்ம அலைகளின் மூலம் பேரான்மாவை தொடர்ப கொண்டு சாதக விளைவுகள் ஏற்படுத்தும் நிகழ்வுகளை நிகழ்த்திப் பார்த்தேன்.//

பேரான்மாவுடன் ஆன்ம அலைகளின் மூலம் எப்படி தொடர்புகொண்டீர்கள்? அப்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

// என் நண்பர்களுக்கு இதை முயன்றேன். அவர்களின் வாழ்க்கையே ஏற்றம் பெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் அல்லாஹ்வை பிரார்த்தித்தே இதை பெற்றுத்தந்தேன் என நம்பினார்கள். என்னை இஸ்லாத்திலிருந்து பிரித்து பார்க்க அவர்கள் தயாராயில்லை.//

வாழ்க்கை ஏற்றம் என்றால் எந்தமாதிரி?

// என்னுடைய அடையாளம் அறியாத நபர்களிடம் வைத்தியம் என்ற முறையில் சோதித்து பார்த்தேன்
அருமையான பலன் கிடைத்தது. //

எந்த நோய்களை குணப்படுத்தினீர்கள்? இந்த முறையில் எல்லா நோய்களையும் உங்களால் குணப்படுத்த முடியுமா?

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//காரணமற்ற கோபம் , மற்றோரை துச்சமென மதிக்கும் குணம் . வரம்பு மீறும் காமம் , பகை , உயர்வு நவிற்சி . எளியோரை ஏளனம் செய்தல் , அகம்பாவம் போன்ற ஆன்ம விழிப்பை தடைசெய்யும் ஆழ்மனதின் அரக்ககுணங்கள்.//

இவையெல்லாம் ஆழ்மனதின் இயற்கை குணங்கள் இல்லை. நம்முடைய வெளிப்புற மனதால் நாம் அடிக்கடி என்ன நினைக்கிறோமோ அதுதான் ஆழ்மனதில் பதிகிறது. ஆழ்மனம் அதில் பதிவேற்றப்படும் எந்த விஷயத்தையும் அது சரியா,தவறா,உண்மையா,பொய்யா என்றெல்லாம் பகுத்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது.

Unknown said...

அப்படி பதிவேற்றப்பட்ட அரக்கனைத்தான் முதலில் வெளியேற்றினேன்.

Unknown said...

//பிரபஞ்ச ஆற்ரலோடு எந்த வழிமுறையில் ஒன்றிணைந்த அனுபவம் பெற்றீர்கள்? அதன் விளைவுகளாக நீங்கள் அனுபவித்த அனுபவங்கள் ஏதாவது கூறமுடியுமா?//

தியானத்தின் மூலமே பிரபஞ்ச ஆற்றலோடு ஒன்றினைந்தேன். பிரபஞ்ச ஆற்றலை அந்த பேரான்மாவை எனக்கான இறைவனாக உருவகப்படுத்தினேன். அதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பார்க்க கூட
என்னால் இயலவில்லை. ஒரு நுனியேனும் காணமாட்டேனா என நினைத்தேன். அதுவே என்னுள் இருப்பதை உணர்ந்தேன். ஆன்ம இருப்பை அறிந்தேன். எந்த சிந்தனையும் இல்லா வெற்று மனமே எண்ணங்களை அலைகளாக்க வல்லது. மனதை வெறுமைப்படுத்தும் முயற்சியில் எந்த சிந்தனையும் இல்லாமல் இருத்தல் மிகக் கடினமானது என உணர்ந்தேன். எதுவும் இல்லாமலிருக்க பழகுவதற்கு முன் ஏதாவது ஒரு சிந்தனையை கைக் கொணர்வோம் என முடிவு செய்தேன். அதற்கு தொடர்ந்து உச்சரிக்க ஒரு வார்த்தை தேவைப்பட்டது. இருக்கும் அல்லது நான் அறிந்த அல்லது நான் கண்ட பொருளாகின் அதுவே சிந்தையில் வந்து நின்றது. ஆகவே எனக்கு என்னதென்றே தெரியாத இறைவா என்ற பதத்தை தேர்ந்தெடுத்தேன். தொடர்ச்சியான உச்சரிப்பில் என் அக இருள் விலகி வெற்று மனதை பெறும் சூட்சுமம் அறிந்தேன். அந்நிலையில் எப்படி அலைகள் உருவாகிறது என்பதைக் கவனிக்கும் விழிப்பு நிலையை அடைய இன்னும் எனக்கு பயிற்சி தேவைப்படுகிறது. கற்றதும் பகிர்வேன். மேலும் தற்பொழுது மனதை வெறுமையாக்கி ஆன்ம சக்தியுடன் ஒன்ற இறைவா என்ற சொல்லும். எது நிகழ வேண்டுமோ அதை திரும்ப திரும்ப உச்சரிப்பது. எது வரை என்றால் என் ஆழ்மனது போதும் என சொல்லும் வரை. இந்த சூட்சுமம் கடவுளிடம் பிரார்த்திக்கும் பக்தனைப் போலவேதான் பார்ப்போருக்கு தோன்றலாம். ஆனால் அலைகள் அதை நிகழ்த்துவதை நான் அறிவேன். சொல்லப் போனால் அதை செயல்படுத்துவதை எனக்கு விவரிக்க தெரியவில்லை.

ஆனந்த் சாகர் said...

ஆன்ம ஞானம்,

//எந்த சிந்தனையும் இல்லா வெற்று மனமே எண்ணங்களை அலைகளாக்க வல்லது. //

எந்த நிலையிலும் நம்முடைய எல்லா எண்ணங்களும் அலைவடிவில் பயணிக்கும் ஆற்றல்களே.

//மனதை வெறுமைப்படுத்தும் முயற்சியில் எந்த சிந்தனையும் இல்லாமல் இருத்தல் மிகக் கடினமானது என உணர்ந்தேன். எதுவும் இல்லாமலிருக்க பழகுவதற்கு முன் ஏதாவது ஒரு சிந்தனையை கைக் கொணர்வோம் என முடிவு செய்தேன். அதற்கு தொடர்ந்து உச்சரிக்க ஒரு வார்த்தை தேவைப்பட்டது. இருக்கும் அல்லது நான் அறிந்த அல்லது நான் கண்ட பொருளாகின் அதுவே சிந்தையில் வந்து நின்றது. ஆகவே எனக்கு என்னதென்றே தெரியாத இறைவா என்ற பதத்தை தேர்ந்தெடுத்தேன். தொடர்ச்சியான உச்சரிப்பில் என் அக இருள் விலகி வெற்று மனதை பெறும் சூட்சுமம் அறிந்தேன்.//

சிந்தனையற்ற நிலைக்கு செல்ல ஏதாவது ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதை தியானம் கற்றுக்கொடுக்கிற பலரும் கூறுகிறார்கள்.இந்த வழிமுறையைத்தான் நீங்களும் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். இது ஒரு எளிதான,சிறந்த வழிமுறைதான். இந்த வழிமுறை எளிதானது என்பதை நானும் அனுபவித்து பார்த்திருக்கிறேன். சிலர் மூச்சை கவனிக்கும் வழிமுறையை சொல்கிறார்கள். இதுவும் சிறந்த வழிமுறைதான்.

தஜ்ஜால் said...

மனதை வெறுமைப்படுத்தும் அல்லது எந்தவித சிந்தனையும் இல்லாமல் இருத்தல் என்ற நிலையை சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய 21-ஆம் வயதிலேயே முயயற்சித்திருக்கிறேன். அதில் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்திருக்கிறேன். அதில் அல்லாஹ் என்ற கடவுளைமட்டுமே தியானித்து அதிகபட்சம் 30 வினாடிகளிலிருந்து 1 ஒரு நிமிடம் வரை அப்படி இருந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் புல்லரிப்புகளையும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவைகளெல்லாம் எனது மூளை செய்த ஜாலவித்தைகள் என்பதை என்னால் இப்பொழுது அனுமானிக்க முடிகிறது.

Unknown said...

நாம் சொல்லும் மூளை என்ற பவுதீகப் பொருளில்தான் மனது . ஆழ்மனது எல்லாம் உள்ளது. அது மூளை செய்யும் ஜால வித்தைதான். ஆன்மாவை அறிந்தால் அந்த மூளை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையேல் நீங்கள் மூளையின் கட்டுப்பாட்டில். மதமற்ற சுதந்திரத்தை அனுபவித்திருப்பீர் அதை விட சுதந்திரமானது நம் மனதை ஆள்வது. அனுபவித்து அனுபவியுங்கள்.

Unknown said...

//வாழ்க்கை ஏற்றம் என்றால் எந்தமாதிரி//

என் நண்பன் ஒருவன் ஒரு தொழிலில் கடுமையான நஷ்டப்பட்டு பரிதவித்தான்.என் பால்ய நண்பன் கிடையாது. இக்கட்டான நிலைமையில்தான் அவன் கடைக்கு நான் போக வர அப்படியே நட்பானது. நட்பிற்கு பிறகே ஓரிரு மாதங்கள் கழித்தே அவனுடைய சூழ்நிலை எனக்கு தெரிந்தது. என்னிடம் பண உதவி கேட்டான் . நான் பணக்காரன் கிடையாது என்று புரிய வைத்து என்னால் பண உதவி செய்ய முடியாது ஆனால் பிரச்சினைகள் தீர உதவுகிறேன். என்று வாக்களித்தேன்
அதன் பின் ஒரு நாள் என்னுடன் தியானத்தின் போது அமர்ந்தான். இடைவிடாத சுமார் நான்கு மணி நேர தியானம். என் உடலே மிகவும் சோர்ந்து விட்டது. அடுத்த நாளே ஒன்றும் பலன் கிடைக்கவில்லை. அவன் மனதில் பிரச்னையை எதிர் கொள்ளும் தைரியம் வந்தது. வேறு எங்கோ கடன் வாங்கி பழைய க டனை அடைத்தான். மிக உற்சாகமாக மாறி விட்டான். ஒரு மாதத்திலே அரசாங்க வேலை கிடைத்ததது. இன்று பொருளாதாரத்தில் பெரிய அளவில் இல்லையென்றாலும் எப்படியும் வாழ்ந்து விடலாம் என தைரியமாய் வாழ்கிறான்.

ஒன்று நான் சொல்லவில்லையே அவனுக்காக நான் தியானத்தில் உருவாக்கியது பிரச்னைகளைத் தீர்க்கும் தன்னம்பிக்கை அவன் பெற வேண்டும் என்ற ஆன்ம அலைகளைத்தான் .

Unknown said...

//எந்த நோய்களை குணப்படுத்தினீர்கள்? இந்த முறையில் எல்லா நோய்களையும் உங்களால் குணப்படுத்த முடியுமா?//

என் வீட்டின் அருகில் ஒரு வயதான தம்பதி ஒருவர் இருக்கின்றனர்.அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் வெளியூரில் உள்ளனர். ஒரே ஒரு மகன் மட்டுமே அவர்கள் செலவுக்கு பணம் அனுப்புவான். அந்தப் பணத்தில் அவர்கள் வாழ்க்கை கதையை ஓட்டுகிறார்கள். இப்படி இருக்கையில் ஒருநாள் அந்தப் பெரியவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது . பக்கவாதம் அவரைத்தாக்கியது. ரத்த அழுத்தம் உயர்ந்து உயிருக்கு பரிதவிக்கும் நிலையில் அந்தப் பெண்மணியின் அழுகுரல் கேட்டே அவர்கள் வீட்டிற்கு சென்றேன். அது இரவு நேரம். எங்கள் ஊர் சற்று உள்வாங்கிய கிராமம் . அங்கே மருத்துவமனை வசதியும் கிடையாது. பக்கத்து வீட்டு நபர் கார் வரச்சொல்லி விட்டார். அந்த இடைப்பட்ட நேரம் கார் வரும் வரையாவது தாக்குப்பிடிப்பாரா என்ற நிலையில் அவர் கால்மாட்டில் அமர்ந்தேன். அவரது கால்களை எனது கைகளால் பிடித்து கொண்டு தியானிக்க ஆரம்பித்தேன். எல்லோரும் பரிதவிப்பில் இருந்ததால் நான் என்ன செய்கிறேன் என்பதை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை. தலையைக் கவிழ்ந்து கொண்டு அவர் உயிர் பிழைக்க வேண்டும் என தியானத்தில் உச்சரிக்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் பிரபஞ்ச சக்தி என் உடலை ஊடகமாய் கொண்டு அவர் உடலுக்குள் பாய்ந்தது. அவர் கண்டிப்பாய் உணர்ந்திருப்பார். அது வரை காரும் . சில நிமிடங்கள் கழித்து மிக சாதாரணமாக படுக்கையிலிருந்து எழுந்தார். காரும் வந்து விட்டது. அப்படியே அவரை அள்ளிப்போட்டு மருத்துவமனை கொண்டு சென்றோம். அவரை மருத்துவர் பரிசோதித்து விட்டு ரத்த அழுத்தம் மட்டும் கூடுதலாக உள்ளது. வேறு ஒரு பிரச்சினையும் இல்லை அவரை வீட்டிற்கு கூட்டிச்செல்லுங்கள் என்றார். அனைவரும் ஆச்சரியத்துடன் அவர் வீட்டில் இருந்த நிலைமையை மருத்துவரிடம் விவரித்தனர். அவர் புரியாத நிலையில் ஒரு பார்வை பார்த்து வேண்டுமானால் ஒரு இரவு இங்கு இருக்கட்டும் என்றார். அவரும் ஒரு நாள் அங்கு தங்கியிருந்து மறுநாள் வீட்டிற்கு வந்தார். இப்பொழுது வரை நார்மலாக உள்ளார். அந்த நிலையில் நான் ஏதோசெய்தேன் என்பதை அவர் அறிந்திருக்கிறார். மறுநாள் வீட்டிற்கு அவரை பார்க்க போன போது இதை என்னிடம் கேட்டார் . ஒன்றுமில்லை என மழுப்பி விட்டேன்.
அன்றுதான் பிரபஞ்ச ஆற்றல் எனது உடலை ஊடகமாய் பயன்படுத்தியதை அறிந்தேன்.

Unknown said...

அதன் பின்னர் அப்படி ஒரு சம்பவமும் நிகழவில்லை. எனது தேடல் எண்ண அலைகளைப்பற்றி ஆனது. என்னை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். அதில் நான் கண்ட விடயம் அனைத்து மனிதர்களின் எண்ணங்களும் ஆற்றலாக வெளிப்படும் என்பது. சிலர் வசை மாரி பொழிந்து சாபம் விடுவது எதிராளியை உறுதியாய் பாதிக்கவே செய்கிறது. அதே போல் வாழ்த்தி ஊக்கப்படுத்துவது வாழ்த்து பெற்ற நபரை ஏற்றம் பெற செய்கிறது. ஆனால் இவர்கள் ஆன்மவியலோ ஆன்மாவைப்பற்றியோ அறிந்தவர்கள் அல்ல. ஆனால் இவர்கள் ஒரே ஆன்மாவின் தோற்றங்கள். அவர்கள் மனப்பூர்வமாக , ஆத்மார்த்தமாக வெளிப்படுத்தும் எண்ணங்கள். இதையே நம் போன்றார் முறைப்படுத்தி செய்கின்றோம். அதேபோல் மனிதரின் நம்பிக்கை என்பதும் ஒரு வகை ஆற்றல் அலையே. இதை எளிதாக விளக்கவேண்டுமென்றால் மருத்துவரையே உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். புகழ் பெற்ற மக்களின் நம்பிக்கை பெற்ற மருத்துவர் வெறும் மிட்டாய் கொடுத்தால் கூட நோய் தீரும். இதையும் நான் செய்து பார்த்தேன். சாதாரண மூலிகை மருந்துகளை கொண்டு பல நோய்கள் தீர்த்துள்ளேன். மூட்டு வலி , ஆஸ்த்மா , கபம் , போன்றன மற்றும் இன்னும் நிறைய உள்ளன. எல்லா நோய்க்கும் மருந்தாக நான் பயன்படுத்தியது. திரிகடுக சூரணம் மட்டுமே. தேனில் குழைத்தே மருந்தை கொடுப்பேன். அப்பொழுதுதான் எல்லா நேரமும் ஒரே மருந்தை கொடுப்பது தெரியாது. சித்த அல்லது மூலிகை வைத்தியத்தின்படி மனித உடலில் நோய்க்கு காரணமாக பித்தம் . கபம் , வாவாதம் ஆகிய மூன்றின் விகித மாறுபாடே சொல்லப்படுகிறது. ஆகவேதான் எந்த பக்க விளைவும் அற்ற திரிகடுக சூரணத்தை தேர்ந்தெடுத்தேன். வெறும் கையை வைத்து வைத்தியம் செய்தால் அன்றே மக்கள் என்னை விரட்டியிருப்பர். ஆகவே அவர்கள் நம்பிக்கையை பெற ஒரு மருந்து தேவைப்பட்டது. ஆன்ம அலைகளின் நம்பிக்கை அலைகள் மீதான வினையை அப்பொழுதே அறிந்து கொண்டேன்.

திரிகடுக சூரணமும் மருந்துதானே என்பீர்கள்.அதையும் சோதித்து பார்த்தேன் . என் நண்பர்கள் மூலம் பலருக்கு கொடுத்து பார்த்தேன். ஒரு பலனும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

Anonymous said...

@aanma gnanam
Neegal yaarai guruvaga yaetrukonduleergal.geevagarunathai follow pannu pavara

Unknown said...

அனானி

எனது அனுபவமும் சிந்தனையுமே குரு.

Unknown said...

தற்பொழுது ஒரு அரசு ஊழியனாக உள்ளேன். நான் சார்ந்துள்ள துறை பொதுமக்கள் ி பிரச்சினை பலவற்றிற்கு தீர்வு காணும் துறை. ஆன்ம அலைகளைப் பயன்படுத்தியே பலருடைய பிரச்னைகளைத் தீர்த்து வருகிறேன். அவை என்னவென்று சொல்ல எனது பொறுப்பு என்னை தடுக்கிறது.

நான் பெற்ற ஆன்ம அனுபவங்கள் மற்றும் ஆன்மவியல் அறிவும் அன்றாட வாழ்க்கையில் பலருக்கும் பயன்படுமாறு செய்து கொண்டிருக்கிறேன்.

ஆன்ம விழிப்பின் ஒரு விளைவாக அரசு போட்டித்தேர்வை எவ்வித முன்தயாரிப்பும் இன்றி open competion முறையில் வெற்றி பெற்று இன்று பணியில் உள்ளேன். இப்பொழுதும் எனது நடவடிக்கைகள் புத்திசாலித்தனமானது என்றே மதிப்பீடு செய்யப்படுகிறது. உண்மை என்னவென்பதை நான் மட்டுமே அறிவேன். இதைப்படித்ததால் நீங்களும்.

எனது குணங்களிலும் பெரித மாற்றமும் கண்டேன். சிலர் வீரம் என்ற பெயரில் என்னுடன் வாக்குவாதமோ சச்சரவோ செய்தால் கூட எவ்வித பதட்டமும் இன்றி சரியான முடிவெடுக்க முடிகிறது. எந்த ஒரு நெருக்கடியிலும் அசாதாரணமான சூழ்நிலையிலும் நிதானமாக நடந்து கொள்ள முடிகிறது. முகம் பார்த்து குணம் கணிக்கும் கலையும் கைவரப்பெற்றது. இது சுய புகழ்ச்சியாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. ஆன்ம விழிப்பின் விளைவுகளை சொல்லவே இவற்றை சொன்னேன்.

ஆனந்த் சாகர் said...

@ஆன்ம ஞானம்,

//நாம் சொல்லும் மூளை என்ற பவுதீகப் பொருளில்தான் மனது . ஆழ்மனது எல்லாம் உள்ளது. அது மூளை செய்யும் ஜால வித்தைதான். ஆன்மாவை அறிந்தால் அந்த மூளை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையேல் நீங்கள் மூளையின் கட்டுப்பாட்டில். மதமற்ற சுதந்திரத்தை அனுபவித்திருப்பீர் அதை விட சுதந்திரமானது நம் மனதை ஆள்வது. அனுபவித்து அனுபவியுங்கள்.//

மூளையில்தான் மனம் இருக்கிறது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மனம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. மூளையில் அதிக செல்கள் இருப்பதால் அதில் அதிக எண்ணங்கள் ப்ராசஸ் ஆகிறது. அவ்வளவுதான்.

ஆனந்த் சாகர் said...

@தஜ்ஜால்,

//மனதை வெறுமைப்படுத்தும் அல்லது எந்தவித சிந்தனையும் இல்லாமல் இருத்தல் என்ற நிலையை சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய 21-ஆம் வயதிலேயே முயயற்சித்திருக்கிறேன். அதில் ஓரளவிற்கு வெற்றியும் அடைந்திருக்கிறேன். அதில் அல்லாஹ் என்ற கடவுளைமட்டுமே தியானித்து அதிகபட்சம் 30 வினாடிகளிலிருந்து 1 ஒரு நிமிடம் வரை அப்படி இருந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் புல்லரிப்புகளையும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவைகளெல்லாம் எனது மூளை செய்த ஜாலவித்தைகள் என்பதை என்னால் இப்பொழுது அனுமானிக்க முடிகிறது.//

நீங்கள் தியானத்தில் சிந்தனையற்ற நிலைக்கு சென்று குறைந்தது ஒன்றரை மணிநேரமாவது அந்த நிலையில் இருந்து பிரபஞ்சதோடு ஒன்றிணையும் அனுபவத்தை பெறுங்கள். உங்கள் உள்ளுணர்வு மூலம் நீங்கள் அனுபவித்து அறிந்துகொள்வதை கூறுங்கள்.