Thursday 27 June 2013

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

இஸ்லாமிய பரப்புரைப் பதிவர்களில் எதிர்க்குரல் ஆஷிக் அஹமது சற்றே வித்தியாசமானவர் அல்லது வித்தியாசமான பதிவர். தெளிவாகச் சொன்னால் ஆஹா, ஓஹோ என்று அற்புத சுகமளிக்கும் எழுத்துக்கூட்டல் செய்யாமல், இரும்பூறெய்தாமல் தான் விரும்பும் படைப்பு வாதத்தை, பரிணாமத்தின் தவறு என அவர் கருதும் ஒன்றின் மீதே கட்டியமைப்பவர்.  நினைத்ததை எழுத்தில் கொண்டுவரும் வல்லமை கொண்டவர் என்பதை அவரின் பதிவுகளை படித்தால் புரிந்து கொள்ளலாம். பரிணாம எதிர்ப்பு பதிவுகளை தொடர்ச்சியாக எழுதிவருபவர். என்னுடைய கணிப்பு சரியானது என்றால், தமிழ் இணையப் பரப்பில் இஸ்லாமிய பதிவர் சிண்டிகேட்டின் பிதாமகன். இவரின் பரிணாம எதிர்ப்பு பதிவுகளுக்கு மறுப்பு எழுதும் எண்ணமிருப்பதாக முன்பொருமுறை தெரிவித்திருந்தேன். ஆனால் அதை அப்போது செயலுக்கு கொண்டுவரவில்லை. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.

முதலாவதாக, அவரின் ஆக்கங்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலானவை ஆங்கிலக் கட்டுரைகளின் மறு ஆக்கங்கள். அறிவியல் இணைய இதழ்களில் வெளியாகும் பரிணாமத்திற்கு எதிரான ஐயநோக்குடைய கட்டுரைகளே இவருடைய ஆக்கங்களுக்கான கருப்பொருள். ஆனால் எனக்கோ ஆங்கிலப் புலமை போதாது. தமிழில் அவர் எழுதுபவைகளை உள்வாங்கிக் கொள்வதிலோ, அது சரியா தவறா என சீர் தூக்குவதிலோ எனக்கு போதிய திறனிருப்பதாகவே கருதுகிறேன் (உயர்வு நவிற்சியாகவும் இருக்கலாம்) ஆனாலும் மூலக் கட்டுரையை படித்து முழுமையாக புரிந்து கொள்வதில் இருக்கும் போதாமை சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.

இரண்டாவதாக, அவர் பயன்படுத்தும் ஒரேமாதிரியான வடிவம். அதாவது, ஏதாவது ஒரு அறிவியலாளரின் அல்லது அறியப்பட்டவர்களின் பரிணாமத்துக்கு எதிரான ஒரு கூற்றை எடுத்துக் கொள்வது; அதைக் கொண்டு பரிணாமமே தவறானது, அறிவியலல்லாதது என்று சொந்த வாதத்தை இட்டு நிரப்புவது; பிறகு எந்தவித நிருவலும் இல்லாமல் இதற்கெதிராக படைப்புக் கொள்கையே சரி எனும் தோற்றம் தரும் முத்தாய்ப்பைச் செய்வது. சற்றேஎறக்குறைய அவரின் அனைத்து பரிணாம எதிர்ப்பு ஆக்கங்களும் இந்த பாட்டையிலேயே பயணப்பட்டிருக்கும். ஒரேவிதமான இதுபோன்ற நிருவலில்லாத கட்டுரைகளுக்கு ஏன் மறுப்பெழுத வேண்டும் எனும் அயர்ச்சியும் சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.

ஆனாலும் அவருக்கு மறுப்பெழுத வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுத்துக் கொண்டே வந்தது. எனவே தயக்கங்களைத் தள்ளி வைத்துவிட்டு களத்துக்கு வந்து விட்டேன். எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் என்பதால் உள்ளபடியே இப்பதிவுகளுக்கு நேர்க்குரல் எனும் பொருள் வந்து விடுகிறது, நேரிய குரலாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. நண்பர் ஆஷிக் தன் பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார் என்றாலும் தொடராக எழுதுவதில்லை. ஆகவே அவர் எழுதியிருக்கும் வரிசையிலேயே நேரிய குரலை நடத்தலாம் என்பது திட்டம்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் அவரும் நானும் செய்து கொண்ட ஒரு உரையாடலின் மீள்பதிவிலிருந்து இந்த மறுப்பை தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். ‘செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி, புதிய கடவுளர் யார்? எனும் கட்டுரையில் பின்னூட்டத்தினூடாக நாங்கள் நடத்திக்கொண்ட உரையாடல் இதோ,

Aashiq AhamedAugust 18, 2010 at 9:31 pm
சகோதரர் மருதையன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களிடம் சில கேள்விகள்

1. “தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று கிரேக் வென்டர் கருத்து சொன்னது மே மாதம். உங்களுடைய இந்த கட்டுரை வெளிவந்தது ஜூலை மாதம். கிரேக் வென்டர் மறுப்பு தெரிவித்தது உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைத்து விட்டீர்களா?

2. உயிரியலைப் பொறுத்தவரை ஒரு செல்லை உருவாக்கினால் தான் உயிரை உருவாக்கியதாக அர்த்தம். இவர்கள் உருவாக்கியதோ செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? இந்த விசயமும் உங்களுக்கு தெரியாதா?

அதுவும் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு ஏற்கனவே உள்ள செல்கள் தான் தேவைப்பட்டிருக்கின்றன. இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

3. பதினைந்து வருடங்களாக பாடுபட்டு, பலருடைய உதவியைக் கொண்டு செயற்கை மரபணுத் தொகுப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் உங்களை போன்றவர்களோ ஒரு செல் ஆதி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று சொல்கின்றீர்கள், இது அறிவுக்கு ஒத்து வரும் வாதமா?

4. விஞ்ஞானிகளோ “ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ, ஒரு நல்ல அறிவியல் முன்னேற்றத்தை உங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

இந்த செயற்கை செல் ஆய்வு, இறை நம்பிக்கையாளர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளதா, அல்லது உங்களைப் போன்றவர்கள் முகத்திலா?

உங்களுக்கு நேரம் இருப்பின் என்னுடைய இந்த பதிவை சற்று பாருங்கள்


நன்றி

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

செங்கொடி August 19, 2010 at 11:51 pm 

நண்பர் ஆஷிக்,

உங்கள் கட்டுரையை படித்துப்பார்த்தேன். உங்கள் கட்டுரையின் திசையும், இந்தக் கட்டுரையின் திசையும் வேறு வேறானது. செயற்கை உயிர் என்று கட்டுரைக்கு தலைப்பிட்டிருப்பது தவறானது. அது தோழர் மருதையனுக்கு தெரியவில்லை. மெய்யில் செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். இதை மறைத்து தோழர் மருதையன் நாத்தீகத்துக்கு ஆதரவாக பொய் சொல்லிவிட்டார், என்பது உங்கள் குற்றச்சாட்டு. அதற்காக ஆங்கில இணைய தளங்களைத் தேடிப்படித்து விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

அதேநேரம் இந்தக் கட்டுரையை நீங்கள் நிதானமாக படித்திருந்தீர்களென்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் தோழர் மருதையன் அவ்வாறு கூறவில்லை என்பது.

\\ ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா//

\\ செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத் தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்//

\\ கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது//

இவைகள் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகளில் சில. ஆதாவது நீங்கள் உங்கள் கட்டுரையில் என்ன குறிப்பிட்டிருக்கிறீர்களோ அது தான் இந்தக் கட்டுரையிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தலைப்பில் செயற்கை உயிர் எனக் குறிப்பிட்டதை மட்டும் வைத்துக்கொண்டு தோழர் பொய் சொல்லிவிட்டார் என்கிறீர்களே, சரிதானா அது?

சரி ஏன் செயற்கைசெல் என குறிப்பிட வேண்டும்? அது ஒரு குறியீடு. செயற்கை செல் என்பது அந்த ஆராய்சியை குறிக்கும் குறியீடு. இந்தப் பெயரைத்தான் அறிவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள், அது முழுவதும் செயற்கையான செல் அல்ல என்றபோதிலும். இதையே நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், \\ வென்டர் தன்னுடைய ஆய்வை “synthetic cell ” என்று தான் குறிப்பிடுகின்றார். பலருக்கும் இது synthetic cell என்றுதான் மனதில் உள்ளது. நான் செயற்கை மரபுரேகை என்று பெயர் வைத்தால் அது பலருக்கும் புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆய்வு எப்படி பலருக்கும் அறிமுகமாகி இருக்கின்றோதோ அந்த பெயரிலேயே தலைப்பை வைத்து விடுவோம் என்று எண்ணி தான் அப்படி பெயரிட்டேன்// ஆக நீங்கள் தலைப்பிட்டதன் நியாயம் தோழரின் தலைப்பிடலுக்கு பொருந்தமுடியாது என்று எப்படி அவ்வளவு தீவிரமாக நம்புகிறீர்கள்.

எனவே அது செயற்கைசெல் இல்லையென்றாலும் செயற்கைச் செல் என்றே குறிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். பின் உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன? அது நாத்தீகரால், கம்யூனிஸ்டால் சுட்டப்படுகிறது என்பதைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு காரணமாக இல்லை. அது உங்கள் கட்டுரையிலேயே வெளிப்படுகிறது. \\ மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?// அதாவது உங்கள் கட்டுரையின் ஆகப் பெரும்பகுதியை அது செயற்கை உயிரல்ல என்பதை விளக்குவதற்காக செலவிட்ட நீங்கள் பரிந்துரைத்த தலைப்பு என்ன? செயற்கை உயிரை விட்டுவிட்டு காலியானது நாத்தீகம் தான் ஆத்தீகமல்ல என்று தந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கட்டுரையை ஆத்தீகமா நாத்தீகமா என்ற கேழ்வியை எழுப்பி அதற்கான பதிலாக அமைக்காமல் இயற்கையா? செயற்கையா? என்று அமைத்திருக்கிறீர்கள். தலைப்புக்கு தோதுவாக கடைசியில் “என்னைப் பொருத்தவரை” என்ற சொல்லடையோடு உங்கள் கருத்தை வைத்திருக்கிறீர்கள். ஏன் இந்தக் குழப்பம் உங்களுக்கு?

ஒரு மரபணுத் தொகுப்பை உருவாக்கவே பல ஆண்டுகள் முயன்று பல கோடி ரூபாய் செலவில் பலருடைய பங்களிப்பினால் தானே முடிந்திருக்கிறது. அப்படியிருக்க நீங்கள் ஆதியில் ஒரு செல் தானாகவே உருவானது என கூறுகிறீர்களே இது எப்படி அறிவாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?

ஒரு அறிவியலாளரின் தன்னடக்கத்திற்கும் ஆன்மீகவாதியின் தன்னடக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கட்டுரையிலேயே குறிக்கப்படுள்ளது ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு உயிரை உருவாக்கும் அளவுக்கு அறிவியலாளர்களுக்கு உயிரியல் தெரியாது என்று அவர்கள் கூறினால் அது உண்மை. இன்றைய அறிவியலில் அதற்கு வழியில்லை, அதை நோக்கி முனைந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இது நியாயத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் ‘குன்’ என்று சொன்னதும் ஆகிவிட்டது என்று நம்புபவர்களிடம்தான் இது எந்த விதத்தில் நியாயம் எனும் கேள்வியை எழுப்ப வேண்டும்.

படைப்பு என்பது ஆண்டவனின் தனித்துறை. அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத் தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது. அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை.

தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன. பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி. பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?

இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்.

செங்கொடி

Aashiq Ahamed August 20, 2010 at 7:10 am 
 அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,
 அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் நான் எழுதியதை முழுமையாக புரிந்து கொண்டீர்களா? அல்லது வேண்டுமென்றே இப்படி எழுதுகின்றீர்களா? புரியவில்லை. நீங்கள் எழுதியதில் தான் எவ்வளவு குழப்பங்கள்

1. செயற்கை உயிர் என்று தலைப்பில் வந்ததா பிரச்சனை?. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் “செயற்கை செல்” என்றுதான் இதனை குறிப்பிடுகின்றார்கள், அதனால் நாமும் அதனை அப்படிதான் குறிக்க வேண்டும், அது தவறாக இருந்தாலும் கூட. இல்லையென்றால் படிப்பவர்களுக்கு நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்று துவக்கத்தில் புரியாமல் போக வாய்ப்புள்ளது. இப்போது இதுவா பிரச்சனை? மருதையன் தலைப்பில் செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.

பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்.

கடவுள் எப்போது காலியாவார்?, அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே? இவர்கள் உயிரை உருவாக்கினார்களா?, வென்டர் ஒப்புக்கொண்டார் “நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று. பின்னர் எங்கிருந்து வந்தது “பழைய கடவுள் காலி” என்பது போன்ற வார்த்தைகள்?

தலைப்பில் ஒன்று வைத்து விட்டு பின்னர் பதிவில் வேறுவிதமாக எழுதியது (நீங்களே பட்டியலிட்டு இருக்கின்றீர்கள்) படிப்பவர்களை முட்டாளாக்கும் செயலில்லையா? தலைப்பை justify பண்ணி மருதையன் எழுதினார் என்கின்றீர்களா?

இந்த பதிவை படித்த ஒரு சிலராவது நிச்சயம் குழம்பி இருப்பார்கள், “என்ன இது தலைப்பு இப்படி இருக்கிறது, பதிவு வேறு மாதிரி இருக்கிறதே” என்று

இப்போது நீங்கள் இது தெரியாதது போன்று எழுதி மறுபடியும் அவர் செய்த தவறை நீங்களும் செய்கின்றீர்கள் .. நியாயமா?

2. //இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது//

இப்படியெல்லாம் நீங்கள் எழுதினால் பின்னர் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தான் கேட்போம்

சரி விடுங்கள். ஒரு செல் உருவாகுவதற்கு நிறைய காலம் ஆகின்றது என்றே வைத்து கொள்வோம். இங்கு அதுவும் அல்ல பிரச்சனை என்ன தெரியுமா பிரச்சனை?

//தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா?//

இது தான் பிரச்சனை. இன்று 15 ஆண்டுகள் அயராது உழைத்து ஒன்றை உருவாக்கியவர்கள் நாளை ஒரே நாளில் இதனை உருவாக்கலாம்.

ஆனால் இதுவெல்லாம் தற்செயலாக உருவாகியது என்று கூறுகின்றீர்களே அதுதான் பிரச்சனை. இந்த மரபுரேகை 1.08 base pairs கொண்டது. இப்போது இவர்கள் என்ன செய்யவேண்டுமென்றால் இந்த மில்லியன் வார்த்தைகளை (அதாவது அதற்குண்டான வேதிப்பொருட்களை) பக்கத்து பக்கத்தில் வைத்து விட்டு தூர சென்று விட்டு நோட்டம் விடட்டும். இவையெல்லாம் தற்செயலாக ஒன்று சேர்ந்து மரபுரேகை உருவாகுகிறதா என்று பார்ப்போம்.

எடிசன் உருவாக்கிய கரியிழை குமிழ் விளக்குக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் அது தற்செயலாக ஒன்று சேர்ந்து விளக்காக ஆகிறாதா என்று பார்த்து சொல்லுங்கள்.

இந்த கருத்தை என்னுடைய பதிவில் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கின்றேனே .. நீங்கள் படித்து மறந்திருந்தால் உங்களுக்கு ஞாபகமூட்ட இன்னொருமுறை ..

//ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?//

புரிகிறதா?

3. //அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா? இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத்தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது? என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது//

அப்படியா சேதி? இதற்கும் வென்டர் பதில் சொல்லியிருக்கின்றாரே, பார்க்கவில்லையா?

//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை//

பிறகு நான் எழுதியது, //இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது//

இப்போது அவர்கள் கடவுளின் எல்லைக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் .. ஒரு நிமிஷம், அதற்கு முன்னர் உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்.

4. //அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை//

relax please.. .ஒரு விஷயம் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது என்று அதற்கு மறுப்பு தெரிவித்தால் இப்படி ஒரு பதிலா? உணர்ச்சிவசப்பட வேண்டாம் சகோதரரே..

இந்த செயற்கை செல் ஆய்வை விமர்சித்து ஆய்வாளர்கள் (in Nature, in The Sceintist etc) கருத்து சொல்லியிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன வலி இருக்கமுடியும்? என்னவோ போங்க..

கரியை பூசியிருக்கா? யார் மேல்? நாத்திகத்தின் மேல் தானே?

5. //தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன//

வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்

வேண்டாம் வேண்டாம். ஒரு செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதற்கும் மட்டும் ஆதாரங்கள் கொடுங்கள் போதும். அது தான் விவாதப் பொருள்.

6. //பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி//

நல்ல வேலை பரிணாமத்தையும், அறிவியலையும் கமா போட்டு பிரித்தீர்கள். அறிவியல் என்று எழுதி பிராக்கெட்டில் பரிணாமம் உட்பட என்று எழுதாமல் போனீர்களே, அதுவரை மகிழ்ச்சி. அப்படி எழுதியிருந்தால் பரிணாமத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டியிருக்கும்.

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே, “இது பொய் அதனால் அது உண்மை” என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. அப்படி சொல்வதில் லாஜிக்கும் இல்லை. இது பொய் என்றால் அது உண்மை என்றாகாது. அது உண்மை என்பதற்கு வலுவான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும்.

//பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?//

நியாயமான நல்ல கேள்வி ஆனால் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லையே என்னுடைய தளத்தில் இதற்கான ஒரு உரையாடல் உள்ளது. இது பற்றி பிறகு பேசுவோம் இன்ஷா அல்லாஹ்

இப்போது என்ன விஷயம் என்றால், மருதையன் அப்படி தலைப்பு வைத்தது சரியா தவறா என்பதுதான். அதனை தீர்த்து கொள்வோம் முதலில்

மறுபடியும் சொல்கின்றேன், உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

7. //இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்//

அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?

நான் உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம், முதலில் நான் என்ன சொல்ல வந்திருக்கின்றேன் என்று தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள். அது உங்களது நேரத்தையும் சரி, என்னுடைய நேரத்தையும் சரி அதிகமாக்வே மிச்சப்படுத்தும்

நன்றி

இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக ஆமின்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ


செங்கொடி August 23, 2010 at 2:46 am  45.3
நண்பர் ஆஷிக்,

முதலில் மருதையன் பொய் சொல்கிறார் என்றீர்கள், இப்போது \\ செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.பிரச்சனை என்ன தெரியுமா? செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்// என்கிறீர்கள். ஆக செயற்கை உயிர் என்பது பிரச்சனைக்குறியதல்ல அதன் பின்னதான கடவுள் குறித்தது தான் பிரச்சனையானது எனின் உங்களின் கட்டுரை கடவுளை மையமாக எடுத்துக்கொள்ளாமல் அந்த ஆய்வை மையமாக எடுத்துக்கொண்டிருந்தது என்பதை உங்கள் கட்டுரைக்கான கரு மயக்கம் எனக் கொள்ளலாமா?

போகட்டும் தோழர் மருதையனின் அந்தத் தலைப்பு கடவுளை முக்கியமாக கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா? பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார்? இந்தத்தலைப்பில் கடவுள் எனும் சொல் வருகிறது அதன் பொருள் முதலாளித்துவத்தைக் குறிக்கிறது. அதாவது படைத்தல் எனது தொழில் என தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த பழைய கடவுளை நகர்த்திவிட்டு அந்த இடத்தை முதலாளித்துவம் பிடித்துக்கொண்டுள்ளது என்பது தான் அந்தத் தலைப்பு கொண்டிருக்கும் பொருள். கட்டுரையின் பேசு பொருளும் அதுவே. உங்கள் பின்னூட்டத்தின் கடைசியில் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள் \\ அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்?// நீங்கள் போட விரும்பும் அருவாளை உங்கள் மூளையில் போட்டுக் கொள்ளுங்கள், அதுவாவது உங்கள் புரிதலை கூர் தீட்டட்டும்.

கடவுளை கண்ணால் பார்த்தால் தான் நம்புவோம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இப்போது அது போல் ஒரு செல்லை உருவாக்கிக் காட்டுங்கள் என்பது. டி.என்.ஏ மரபணு செய்திகளில் ஏற்படும் தவறுகள் மூலம் புதிய கூறுகள் உயிர்களுக்கு ஏற்படுவதையும், சூழலியல் தாக்கங்கள் உயினினங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் அடிப்படையிலான பின்னோக்கிய யூகித்தல் தான் தற்செயல் தோற்றம் என்பது. ஒரு அணுவின் உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் வேறொரு அணுவாக மாற்ற முடியும் என்பது வேதியல். அறிவியலாளர்கள் அப்படி மாற்றியும் காட்டியிருக்கிறார்கள். என்றால் இன்றைய அதி நவீன கருவிகளும் அறிவியலாளர்களின் திறமையும் அணுக்கட்டமைப்பை மாற்றுவதற்கு தேவைப்படுகிறது எனும் போது தொடக்க நாட்களில் அது எப்படி மாறியிருக்க முடியும் என்று கேள்வியெழுப்புவது புத்திசாலித்தனம் அல்லவே. இன்றைக்கு அதி நவீன கருவிகளும், அறிவியலாளர்களும் ஆற்றும் பங்களிப்பை அற்றை நாட்களில் தட்ப வெப்பமும் சூழலும் செய்திருக்கும். உயிர் என்பதற்கு அளவுக்கு மீறி மிகை மதிப்பை ஏற்றியதால் தான் முதல் செல் எப்படி உருவாகியது என்பது உங்களுக்குள் மிகைத்த ஒன்றாக நிற்கிறது. நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள், அது உயிரற்றதிலிருந்து உயிர் எனும் உங்களில் மிகை மதிப்புக்கு சற்று விளக்கமளிக்கும். http://senkodi.wordpress.com/2008/12/11/darvin-tenthara/

\\ அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா? இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா?// இது தான் நான் கேட்டிருப்பது, ஆனால் பதிலாக நீங்கள் \\ இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது// உங்களுடைய கூற்றின் படியே இறைவனுடைய(!) படைப்பைக்கொண்டே தான் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். அவன் செய்த மாறுதல்களுக்கு இறைவனுடைய(!) படைப்பினங்கள் தான் பயன்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?

அறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சி குறித்து எதிர்க்கருத்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதான். அனைத்து அறிவியல் ஆய்வுகளுக்குமே எதிர்க்கருத்துகளும் உண்டு. அவை குறித்த ஆய்வை மேம்படுத்த செழுமைப்படுத்தவுமே உதவும். அந்த எதிர்க்கருத்தும் உங்களிஅப் போன்றவர்களின் எதிர்க்கருத்தும் ஒன்றல்ல.

அறிவியல் கண்டு பிடிப்புகளை நாத்திகத்திற்கு பயன் படுத்தலாமா? இந்தக் கேள்வி அடிப்படையிலேயே தவறானது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆத்தீகத்திற்கு ஆதரவாக பயன்படுத்தலாமா என்றுதான் கேள்வி எழுப்பமுடியும். ஏனென்றால் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் தன் இயல்பிலேயே மூட நம்பிக்கைகளை தகர்ப்பதாக இருக்கிறது.

மீண்டும் உங்களைக் கேட்கிறேன் \\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// நியாயமான கேள்வி என ஒத்துக்கொண்ட நீங்கள் பதிலையும் கூறினீர்கள் என்றால் வசதியாக இருக்கும்.

செங்கொடி

Aashiq Ahamed August 25, 2010 at 5:56 am 
 அன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,
 அஸ்ஸலாமு அலைக்கும்,

மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

//ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி?//

இதற்கு தான் //உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்// என்று கூறினேன். படித்தீர்களா?

ஒரு மரபுத் தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான் என்ற உங்களுடைய பழைய கேள்விக்கான பதில் தான் இது. இப்போது மறுபடியும் கேட்டு, நான் பதில் சொல்லிய பிறகும் என்னுடைய நேரத்தை வீணாக்குகிறீர்களே, இது நியாயமா?

“.. the ability to synthesize DNA sequences chemically and insert them into already living cells has existed for decades, the JCVI achievement simply changes the scale..” – Christina Agapakis, What synthia means to me, Oscillator, Science Blogs, dated 21st May 2010.

கிறிஸ்டினா அவர்கள் கூறியிருப்பது புரிகிறதா?.வென்டர் கழகம் செய்தது போன்று பல காலங்களாக நடந்து வருகிறதாம். இப்போது நடந்துள்ளது தான் அளவுக்கோளில் பெரியதாம்.

நான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், தாங்கள் தயவுக்கூர்ந்து இது குறித்து நன்கு படித்து விட்டு வாருங்கள் என்பதுதான். “ஒரு மரபுத்தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான்” என்பது போன்ற வாதங்கள் உங்களுக்கு அறிவியலில் உள்ள தவறான புரிதலையே காட்டுகின்றன.

உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ


செங்கொடி August 31, 2010 at 2:29 am 

நண்பர் ஆஷிக்,

முதலில் தோழர் பொய் சொல்லி விட்டார் என்றீர்கள், இல்லை என காட்டப்பட்டது. தலைப்பில்தான் பிரச்சனை என்றீர்கள், தலைப்பு சரியானது தான் என விளக்கப்பட்டது. இந்த இரண்டையும் உங்களின் தற்போதைய பின்னூட்டத்தில் விட்டு விட்டீர்கள் என்பதே உங்களின் கேள்விகளை நான் சரியாக உள்வாங்கி பதிலளித்திருக்கிறேன் என்பதையும் நீங்களும் அதை விளங்கிக் கொண்டீர்கள் என்பதையும் உணர்த்துகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் \\ மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா?. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது// என எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்க முடியுமா? என்னுடைய எந்த பதில் உங்களுக்கு என்ன விதத்தில் குழப்பமாக இருக்கிறது எனக்கூறுங்கள்.

நடந்த ஆய்வு எங்கு நடந்தது என்பதற்கு மட்டும் இப்போது பதில் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டவிதமே வருவோம். அந்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த பெரிய வெற்றியெல்லாம் அடைந்துவிடவில்லை என்றே கொள்வோம். கடுகினும் சிறிய வெற்றியாகவே அது இருக்கட்டும். கேட்பதெல்லாம் ஒன்றுதான். அத்தனை சிறிய வெற்றி எந்தத் துறையில் நடந்திருக்கிறது? அது கடவுளின் துறையா? இல்லையா? இதற்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லுங்கள். பின்னர் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

\\ உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்// இல்லை போதுமானது என நான் நினைக்கவில்லை.

கடவுளின் வாசலை தட்டியிருக்கும் ஆய்வின் நுணுக்கங்களை நுணுகி ஆராயும் நீங்கள் \\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்?// எனும் கேள்வியை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது சரியில்லையே.

தோழமையுடன்
செங்கொடி


இந்த உரையாடல் நண்பர் ஆஷிக் பதில் தராததால் அதன் பின்னர் தொடரவே இல்லை. மீள்பதிவினால் நண்பருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வந்திருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதும், விட்டுவிடுவதும் நண்பரின் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது. அடுத்த பதிவிலிருந்து நண்பரின் எதிர்க்குரல் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் நேரிய குரலாக மறுப்புகள் வரும்.

Facebook Comments

1 கருத்துரைகள்:

Ant said...

மதம் படுத்தும் பாடு: நடனமாடியதால் சுட்டு கொல்லப்பட்ட சகோதரிகள்
http://tamil.webdunia.com/newsworld/news/international/1307/01/1130701014_1.htm